எங்கெங்கோ நடந்த சம்பவங்கள், பார்த்தறியாத மனிதர்கள், இடங்கள், கட்டிடங்கள், உண்மை, கற்பனைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் காட்டுவது புத்தகங்கள்தான் – ச. சுப்பாராவ்

எங்கெங்கோ நடந்த சம்பவங்கள், பார்த்தறியாத மனிதர்கள், இடங்கள், கட்டிடங்கள், உண்மை, கற்பனைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் காட்டுவது புத்தகங்கள்தான் – ச. சுப்பாராவ்



பிரான்சிஸ் டேயும், ஆண்ட்ரூ கோகனும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக சென்னப்ப நாயக்கரிடம் 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி சென்னப் பட்டினத்தை வாங்கியபோது, அந்தப் பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்திட்டவன் நானல்ல.

திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் படித்துக் கொண்டிருந்த உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் குமாரர் வேங்கடராமனுக்கு அவனது குருநாதர் மஹாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சுவாமிநாதன் என்று பெயரை மாற்றிய போது, அவருக்கு அருகில் விசிறியால் வீசிக் கொண்டிருந்த சிஷ்யப் பிள்ளை நானாக இருந்திருக்கவில்லை.

1893 ஜீன் மாதம் ஏழாம் தேதி இரவு, பெரிடோரியாவிற்குப் போய்க் கொண்டிருந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த அந்த குஜராத்தி வழக்கறிஞரை இனவெறி பயணச்சீட்டுப் பரிசோதகன் பீட்டர்மார்டிஸ்பர்க் ஸ்டேஷனில் ரயிலிலிருந்து தள்ளி விட்டபோது, உதவிக்கு ஓடிவந்த கறுப்பினச் சிறுவனாக நான் இருக்க வாய்ப்பே இல்லை.

இந்தியாவில் பல்லாண்டுகள் பயணித்தபின், கிபி 645ல் 657 அரிய புத்தகங்களை 520 பெட்டிகளில் வைத்து, அவற்றை 20 குதிரைகளில் ஏற்றிக் கொண்டு யுவாங் சுவாங் சீனநாட்டிற்குத் திரும்பிய போது, அந்தக் குதிரையோட்டிகளில் ஒருவனாக நான் இருந்திருக்க முடியுமா?

கொலம்பஸின் கடற்சாகசப் பயணத்திற்கு ஸ்பெயின் தேசத்து அரசர் ஃபெர்ட்டினாண்டும், அரசி இஸபெல்லாவும் நிதியுதவி அளிப்பதற்கான சாசனத்தைத் தயாரித்த எழுத்தன் நானாக எப்படி இருக்க முடியும்?

ஷாஜஹானின் மூத்த புதல்வன் தாரா ஷிகோ பெரும் பண்டிதர்களான ஜகந்நாத மிஸ்ரா, பன்வாலிதாஸ், கவீந்தாச்சார்யா ஆகியோருடன் விவாதித்து. பகவத்கீதையையும், உபநிஷதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த போது, அவருக்கு அருகில் இருந்து மதுவை ஊற்றிக் கொடுத்த அடிமைப் பெண்ணாக நான் ஒருவேளை இருந்திருப்பேனா?

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் 1876 மார்ச் மாதம் 10ம் தேதி தான் புதிதாய் கண்டுபிடித்திருந்த தொலைபேசி என்ற கருவியின் வழியாக, ‘மிஸ்டர் வாட்சன், இங்கே வாருங்கள், உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்,‘ என்றதையும், வாட்சன் அதே கருவியில் ‘இதோ வந்துவிட்டேன்‘ என்று பதில் கூறியதையும் யாருமே நேரில் பார்த்திருக்கவில்லைதான்.



1904ம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியின் சிவில் பொறியாளர் சி.ஓ.ஓர்டெல் காசிக்கு அருகே உள்ள சாரநாத்தில் அகழ்வாராய்ச்சி செய்த போது கிடைத்த நான்கு சிங்கங்கள் கொண்ட அசோகச் சின்னம் பிற்காலத்தில் சுதந்திர இந்தியாவின் தேசியச் சின்னமாக ஆகப் போகிறது என்பதை அறியாமலேயே அவர் அதை பத்திரமாகப் பாதுகாத்த போது, அந்த நினைவுச் சின்னத்தைச் சுமந்து சென்ற கூலியாட்களில் ஒருவனா நான்? இருக்க முடியாது.

சிஸ்டைன் தேவாலயத்தின் விதானங்களில் ஓவியங்கள் வரைய போப்பாண்டவர் இரண்டாம் ஜீலியஸின் உத்தரவின் பேரில் வேலையை ஆரம்பித்த மைக்கேலேஞ்சலோ செலவிற்குப் பணம் கேட்டு, கைகட்டி நிற்க, சர்ச்சிற்கு வாங்கித் தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமில்லையே என்று பொக்கிஷதார் ஏளனம் பேசியபோது, தலைகுனிந்தவாறு சர்ச் தரையைக் கூட்டிக்கொண்டிருந்த துப்புரவுத் தொழிலாளி நானல்ல.

நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்? என்கிறாள் குந்தவை. பழையாறையின் சிறையில் அடைபட்டிருக்கும் வந்தியத்தேவன், நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதி ராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்….என்கிறான். இளையபிராட்டி இப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா எனற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அப்போது அதைப் பார்க்காதது போல முகத்தைத் திருப்பிக் கொண்ட காவலாளி சத்தியமாக நானல்லன்.

1493 செப்டம்பர் 25ம் தேதி, நீண்ட யோசனைக்குப் பின் போப் ஆறாம் அலெக்ஸாண்டர் உலக வரைபடத்தில் அட்லாண்டிக்கிற்கு குறுக்கே வடக்கு தெற்காக ஒரு கோட்டைக் கிழித்து, உலகை போர்ச்சுக்கலுக்கும், ஸ்பெயினுக்கும் பங்கிட்டுத் தந்த வேளையில் அவரருகே நின்றிருந்த மெய்க்காப்பாளனாக நான் இருந்திருக்க முடியுமா என்ன?



பாழடைந்து போன மாமல்லபுரத்தின் அரைகுறை சிற்பங்களுக்கு நடுவில், அந்த நள்ளிரவில், தீவட்டியின் மங்கலான ஒளியில், அந்த சிற்ப நகரம் பற்றி, ஆயனச் சிற்பி பற்றி, சிவகாமியின் நடனம் பற்றி, அவள் அழகு பற்றி, அவள் மீதான தனது காதல் பற்றி, புலிகேசியின் படையெடுப்பால் அத்தனையும் தகர்ந்தது பற்றி துயரத்தோடு சிவனடியார் வேடத்தில் இருந்த நரசிம்ம பல்லவன் சொன்ன வரலாற்றை சோழ இளவரசன் விக்கிரமனையும், அவனது குதிரையையும் தவிர வேறு எவரும் கேட்டிருக்க முடியாது.

இவை மட்டுமா? இன்னும் எத்தனை எத்தனையோ, நான் நேரில் பார்த்திருக்க முடியாத சம்பவங்கள், …வரலாறுகள்…. டைனாஸோர்களின் காலத்தில் நான் பிறந்திருக்கவில்லை. பெர்லின் சுவர் கட்டப்பட்ட போதும், பின்னர் தகர்க்கப்பட்ட போதும், புத்தபிரானுக்கு சுஜாதை முதன்முதலாக பிட்ஷை அளித்த போதும், மார்க்ஸ் ஜென்னி இருவரும் உயிருக்குயிராய்க் காதலித்த போதும், மார்க்கோ போலோ மதுரையின் வீதிகளில் திரிந்த போதும், பென்னி குக் பெரியார் அணையைக் கட்டியபோதும் கூட நான் இருந்திருக்கவில்லை. ஆனால் இவையனைத்தும் நேரில் பார்த்ததைப் போல் நான் அறிவேன்.

காலம் ஒரு நதி…. புத்தகங்கள் அதில் படகுகள். பல படகுகள் அதில் பயணித்தாலும் நதியின் வேகம் தாங்காது பல நொறுங்கிப் போகின்றன. ஒருசில, மிக ஒருசில மட்டுமே காலத்தின் வேகத்தைத் தாங்கி, நம்மை ஆசீர்வதிக்க. இன்று நம் காலம் வரை தொடர்ந்து பயணித்துள்ளன.

அப்படிப் பயணித்து வந்த புத்தகங்கள் எனக்குக் காட்டிய வரலாறுகள், கதைகள், புதிய வெளிச்சங்கள்தான் மேலே கூறப்பட்ட அனைத்தும். அவை இல்லையெனில் நான் இல்லை. எங்கெங்கோ நடந்த சம்பவங்கள், நாம் பார்த்தறியாத மனிதர்கள், இடங்கள், கட்டிடங்கள், உண்மை, கற்பனைச் சம்பவங்கள் எல்லாவற்றையும் நமக்கு காட்டித் தருவது புத்தகங்கள்தான்.

அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள் !

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *