தாய்ப்பால் எனும் ஜீவநதி ΙΙ
பாடம் -6
பாலூட்டுவதற்கான அணுகுமுறைகள்

தொட்டிலிட்ட அம்மையின் தாலாட்டில் இலயித்துத் துயில் கொள்கிற குழந்தைகளெல்லாம் கல்லில் உறைந்த சிற்பத்தைப் போல கண்ணிமை மூடி, ஒரு பூனைக்குட்டி தன்னையே சுருட்டிப் படுத்துறங்குவது போல மெல்ல மெல்ல அசைந்து, தனது பாதங்கள் மீன்துடுப்பாய் வெளியே துருத்தியபடியிடிருக்க, அவர்கள் விதவிதமாய் உறக்கம் கொள்கிற அம்சங்களில் வெளிப்படுகிற மீச்சிறு சோம்பல்களை நெட்டி முறித்துக் கொண்டே விழித்தெழுகிற அவர்களது உற்சவ கணங்களின் பேரழகினை நாம் என்னவென்று வர்ணிப்பது?

போர்த்திய வெண்பொதிக்குள் பூவாய் அவர்கள் மலர்ந்துக் கிடப்பதும், சலசலத்துப் பாய்கிற ஆற்றுநீரில் புரளுகிற கூலாங்கற்களைப் போல புரண்டு ஒருசாய்த்துப் படுப்பதும், அடைகாக்கும் பறவையின் ஆசனத்தில் குப்புறப் படுத்திருப்பதுமாக அவர்களுக்குத்தான் எத்தனையெத்தனை பேறு நிலைகள். குழந்தைகள் சேலைத் தொட்டிலைக் கடவுளின் சன்னிதி போலப் பாவித்து அங்கேயே சயனித்துத் தூங்குவதும், புத்தனின் நித்தியத்தைப் போலொரு புன்னகையை வாநீராய்க் கடைவாயில் வழியவிட்டபடி தூக்கத்தில் கனவு காண்பதும், மடியில் காம்பைக் கவ்விப் பாலருந்தியபடியே அசந்து துயில் கொள்வதுமாக இன்னும் இன்னும் நம் கடவுளுக்குத்தான் சயனித்த நிலையிலேயே எத்தனை எத்தனை அவதாரங்கள்!

அன்புத் தாய்மார்களே! நம் பாலகர்கள் இப்படிப் படுத்துறங்குகிற பலவிதமான பரிபூரணத்தின் நிலைகளைப் போலவே பாலூட்டிப் பிள்ளையைப் பசியாற அமர்த்துவதற்கு நமக்கும்கூட விதவிதமான அணுகுமுறையில் தாய்ப்பாலூட்டும் தியான நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நம் ஒவ்வொருவருக்குமே ஒருவிதத்தில் அமர்ந்து பாலூட்டுவது பிடித்த ஒன்றாயிருக்கும் போது அத்தகைய வழிமுறைகளையெல்லாம் அறிந்து கொண்டு நாமும் அதை முயற்சித்துப் பாலூட்டுவது தானே பொருத்தமாயிருக்கும்? வாருங்கள் தாய்மார்களே, அதைப் பற்றி முழுமையாய் நாமும் அறிந்து கொள்வோம்.

தொட்டில் முறை
106-1064881_illustration-of-cradle-breastfeeding-hold-breastfeeding-positions-cradle-hold.jpg

குண்டுக் கருமணியாக கருப்பைக்குள் உதித்த கருவின் ஆதித் துவக்கநிலையிலிருந்தே குழந்தைகளுக்கு தொட்டில் பழக்கத்தில் துயில் கொள்வதுதான் பிடித்த விசயமாயிருக்கிறது. கருப்பையின் சதைச் சுவர்களுக்குள்ளேயே முதுகை வில்லாய் வளைத்து, கைகால்களை மடித்து நெஞ்சுக்குள் கதகதப்பாய் அணைத்துக் கொண்டபடியே பனிக்குடத்தின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் தொட்டில் வடிவாய் தானே அவர்களும் பிரசவிக்கிற வரையிலும் தூக்கம் கொள்கிறார்கள்?

காய்ந்த நெற்றுக்குள் விதைகள் உறக்கம் கொள்வதைப் போல பிரசவத்திற்குப் பின்னால் அம்மாவின் அழுக்குச் சேலைத் தொட்டிலின் இருவிளிம்பிலும் தலையும் காலும் துருத்தியபடியிருக்க அவர்களின் ஒட்டுமொத்த பாரத்தையும் சேலை சுமந்த ஒரு வில் வடிவ தோரணையில் அவர்கள் தூங்குவதும்கூட அதே தொட்டில் நிலை தானே! அப்படித்தான் நம் மடியில் கிடத்தப்பட்ட பிள்ளையைத் தாங்கிய இரு கைகளையும் ஒன்றாக்கிச் சேர்த்தணைத்து பிறைநிலவையொத்த கைத்தொட்டிலாக்கி அவர்களுக்கு நாமும் இப்போது பாலூட்டப் போகிறோம். பிரியத்திற்குரிய தாய்மார்களே, இப்போது நம் பிள்ளைக்குத் தொட்டில் முறைப்படி வலதுபக்க மார்பிலே பாலூட்டுவோமா?

இதன் துவக்கத்திலே நம் குழந்தையின் தலையினை வலப்பக்கம் இருக்குமாறும், கால்பகுதி நமது இடதுபுறத் தொடையில் இருக்குமாறும் கைகளில் தாங்கிக் கொள்வோம். அடுத்ததாக தாய்ப்பாலூட்டுவதற்கு உண்டான மிகச்சரியான நிலையில் அவர்களைப் பொருத்திக் கொள்வதற்கு பனம்பழம் போல் கமழுகிற அவர்களின் தலையினை வலதுகையின் கைமுட்டி மடங்கிய இடத்திற்குள் இருத்தியபடி நம் முழுக்கை அளவிலும் குழந்தையைச் சுற்றி ஒரு பறவையின் இறக்கைக்குள் குஞ்சினை அணைத்திருப்பதைப் போல அவர்களின் முதுகுப்புறம், புட்டம் வரையிலும் சேர்த்து அரவணைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படியாக வலதுகையினால் குழந்தையை மொத்தமாகத் தாங்கயபடியிருக்கையில் நம் இடதுகை விரலினால் மார்பகத்தை ஆங்கில எழுத்து ‘C’ வடிவில் பற்றிக் கொண்டு குழந்தைகளுக்கு நிதானமாக நாம் பாலூட்டத் துவங்கலாம். குழந்தையை நம் மார்பிலிட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் நன்றாக காம்பில் வாய் வைத்துப் பாலருந்தத் துவங்கிவிடுவார்கள். அதற்குப் பின்பாக மார்பினைப் பிடித்துக் கொண்டிருந்த நம் இடதுபக்கக் கையினைத் தளர்த்திக் கொண்டு நமது இரண்டு கைகளினாலுமே குழந்தையைப் பற்றியபடி தொடர்ந்து பாலூட்டலாம்.

குறுக்குத் தொட்டில் முறை
breastfeedholdcrosscradle.png

பிள்ளையை அரவணைத்தபடி இருக்கிற தொட்டில் முறையில், குழந்தையையும் மார்பையும் பற்றிக் கொண்டிருந்த கைகளை அப்படியே கைமாற்றிப் பற்றிக் கொள்ளும் முறைதான் இந்த குறுக்குத் தொட்டில் முறை. அதாவது நாம் பாலூட்டிக் கொண்டிருக்கிற வலதுபுற மார்பிலே இப்போது வலது கைகளுக்குப் பதிலாக இடது கையினால் குழந்தையைத் தாங்கிக் கொள்ள வேண்டும். அதாவது குழந்தையின் கால்களை இடதுகைக்கும் நெஞ்சுப்பகுதிக்கும் இடைப்பட்ட இடைவெளிக்குள் சாதுவாக அணைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் அவர்களின் புட்டம், முதுகுப்புறத்தை முழுக்கரத்திலும் தாங்கிக் கொண்டு, அவர்களின் தலையை இலை தாங்கியிருக்கிற சொட்டு நீரைப் போல உள்ளங்கையிலே தாங்கிக் கொள்ள வேண்டும்.

அதேசமயத்தில் நம் இடக்கை விரல்களுக்குப் பதிலாக வலதுகை விரல்களினால் மார்பைப் பற்றிக் கொண்டு குழந்தையின் வாய்ப்பகுதியில் மார்பைப் பொருத்தியபடி தொடர்ந்து பாலூட்டலாம். பின் எப்போதும் போல குழந்தையும் ஓரளவு மார்பிலே பொருத்தி நிதானமாகப் பாலருந்தத் துவங்கியவுடன் வலதுகையை நம் மார்பிலிருந்து விடுவித்துவிட்டு இரண்டு கைகளையும் தொட்டில் போலச் சேர்த்தணைத்தபடி குழந்தையைத் தாங்கி அமைதியாகப் பாலூட்டலாம்.

ஒருவேளை இந்த நிலையில் பாலூட்டிக் கொண்டிருக்கும் போதே நாம் தொட்டிலிடும் முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டுமென்றாலும் பிள்ளையைத் தொந்தரவு செய்யா வண்ணம் கைகளை மட்டும் மாற்றிக் கொண்டு தொடர்ந்து நாம் பாலூட்டிக் கொள்ளவும் முடியும்.

படுக்கை வசத்தில்

breastfeedholdsidelying.png

இத்தகைய படுக்கை வசத்தில் பாலூட்டுவது நமக்கு மிக வசதியாகவே தோன்றினாலும் பாலூட்டிக் கொண்டிருக்கிற தருணத்திலேயே தூங்கிவிடுகிற இயல்பு வந்துவிடுவதாலும், அத்தகைய பாதகத்தால் பிள்ளைக்குப் புரையேறி மூச்சுத்திணறல் ஏற்படுகிற வாய்ப்பும் கூடவே இருப்பதினாலும் பெரும்பாலும் இத்தகைய முறையினை தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஆனாலும் இத்தகைய முறையினை குழந்தையைப் பெற்றெடுத்தத் துவக்கத்தில் நாம் நிமிர்ந்து கொள்ளக்கூட முடியாத சமயத்தில் பின்பற்றி பிள்ளைக்குப் பாலூட்டிக் கொள்ளலாம். நீண்ட நேரமாக அமர்ந்தபடி பாலூட்டச் சிரமமாக இருந்தாலோ, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களாக இருந்தாலோ, இத்தகைய முறையினைப் பயன்படுத்தி பாலூட்டலாம். ஆனால், அடுத்தடுத்து தொடர்ச்சியாக பாலூட்டுகிற சமயத்தில் மேலே சொன்னபடி அமர்ந்த நிலையிலே இருந்து பாலூட்டிப் பழகுவதே நல்லது.

இத்தகைய நிலையில் எந்தப் பக்க மார்பிலே நாம் பாலூட்ட வேண்டியிருக்கிறதோ அப்பக்கமாகவே ஒருசாய்த்து படுத்துக் கொண்டு பாலூட்டுவதற்கு ஒத்திசைவாக இருக்கும் வண்ணமாக தலையணைகளை தலைக்கு, முதுகுப்பகுதிக்கு, கால்களுக்கு என்று வைத்துக் கொள்ளலாம். குழந்தையை தாயிற்குச் சமானமாக அருகாமையிலே மார்பைப் பார்த்த வண்ணமாக படுக்கை வசத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். இம்முறையில் குழந்தைகள் மார்பிலே வாயினைப் பொருத்திக் கொள்ள ஏதும் சிரமமிருந்தால் மார்பின் அடிப்பக்கமாகவோ, குழந்தையின் தலைக்கோ தலையணையை கூடுதலாக வைத்துக் கொண்டு உடயரத்தைச் சமப்படுத்தியவாறு பாலூட்டத் துவங்கலாம்.

இம்முறையைப் பொருத்தவரையில் இப்போது இடப்பக்கமாக பாலூட்டுகிறோம் என்றால் முதலில் கீழ்ப்பக்கமாக இருக்கிற மார்பையும், பின்பு அதேநிலையில் நம்மை குழந்தைக்கேற்ப மார்பின் உயரத்தை மாற்றிக் கொண்டு இரண்டாவது மார்பையும் குழந்தைக்குக் கொடுத்து பாலூட்டலாம். கீழ்பக்கமாக இருக்கிற மார்பிலே புகட்டுவது தான் எளிதாக இருக்கிறதென்றால் மறுபக்கமாக புரண்டு படுத்துக் கொண்டு மார்பகம் கீழிருக்குமாறு வைத்தே நாம் பாலூட்டிப் பழகிக் கொள்ளவும் முடியும். மேலும் பாலூட்டுகிற போது நாம் ஒரேசமயத்தில், ஒரேமார்பில் படுத்துக் கொண்டும், இன்னொரு மார்பில் அமர்ந்து கொண்டு தொட்டில் முறையிலும் நம் விருப்பப்படியே பாலூட்டியும் கொள்ளலாம்!

கால்பந்து முறை
download.png

இத்தகைய முறையிலே குறைபிரசவமாகப் பிறந்த குழந்தைகளுக்கு, பாலருந்திக் குடிக்கிற உணர்ச்சிகுரிய வளர்ச்சிகள் குறைவாக இருக்கிற குழந்தைகளுக்கு பாலூட்டலாம். அதேசமயத்தில் பெரிய மார்பகமாக இருக்கிற, மார்புக் காம்பு சிறுத்துத் தட்டையாக இருக்கிற, சிசேரியன் செய்து கொண்ட தாய்மார்களும் இத்தகைய எளிய முறையின் மூலமாக பிள்ளைக்குப் பாலூட்டுவதற்கு முயற்சி செய்யலாம்.

இந்நிலையில் நம் குழந்தையைக் கைகளுக்குள் பக்கவாட்டில் இருக்குமாறு பிடித்துக் கொண்டு, நம் சௌகரியத்திற்கு ஏற்ப தலையணைகளை வைத்து அவர்களைப் பக்கவாட்டிலே தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதேசமயத்தில் இன்னொரு கையினால் ஆங்கில எழுத்து U வடிவில் மார்பைப் பற்றிக் கொள்ளும் போது குழந்தைகளுமே எளிதாக மார்பில் வாய் வைத்து நன்றாக சவைத்துக் குடிக்கத் துவங்கிவிடுவார்கள்.

-டாக்டர் இடங்கர் பாவலன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *