உலகம் முழுவதும் உள்ள புத்தக காதலர்களை, அவர்களின் வாசிப்பு இயல்புகளை, பங்களிப்புகளை எடுத்துரைக்கும் புத்தகம் தான் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக 2024 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட “புத்தக காதல்” என்ற புத்தகம். இடையில் தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமை புத்தகத்தின் ஆசிரியரான எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான ச. சுப்பாராவ் இப்புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
புத்தக வாசிப்பு, இரவல் வழங்கல், புத்தகத்தின் ஆசிரியரிடம் கையெழுத்து வாங்குதல், போருக்கு மத்தியில் செயல்பட்ட நூலகம், புத்தக கடைக்கும் வாசகருக்கும் இடையேயான உறவு, புத்தகங்கள் பாதுகாக்கப்பட அவைகள் சேகரிக்கப்பட்ட விதம், போர்க்களத்தில் இருக்கும் இராணுவ வீரர்கள் களைப்படைவதைத் தடுக்க புத்தகங்கள் அனுப்பி வைத்த அனுபவம், வீடுகளில் நூலகங்கள் பராமரிக்கும் நடைமுறைகள், அதையொட்டிய தொழில்முறை, இட்டிஷ் என்ற யூத மொழியைக் காப்பாற்ற அதன் படைப்புக்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என உலகம் சுற்றிய வாலிபனாக உங்களை உணர வைப்பார் புத்தகத்தின் ஆசிரியர் சுப்பாராவ் அவர்கள்.
ஆனி பாடிமன், மைக் தாம்சன், ஆல்பர்டோ மங்கேல், ஜன் கேம்பல் உள்ளிட்ட 23 எழுத்தாளர்கள் வாசிப்பு குறித்த தங்கள் அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளனர். அதை வாசித்து, தனது அனுபவத்தோடு, வாசிப்பு குறித்த புத்தகத்தை தமிழில் நல்லதொரு ஆரோக்கியமான அறிமுகத்தை நமக்கு வழங்கியுள்ளார் ஆசிரியர்.
பழைய புத்தகக்கடையின் மீதான மாசற்ற காதலையும், கல்லூரி விட்டதும் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் ஜெயவிலாஸ் (மரணவிலாஸ்) பேருந்தைப் பிடித்து, திருமங்கலத்தில் இறங்கி மற்றொரு பேருந்து பிடித்து பெரியாரில் சர்வதோய இலக்கிய பண்ணையிலோ, மல்லிகை புக் சென்டரிலோ கவிதையோ, சரித்திரமோ ஏதேனும் சிலவற்றை வாங்கி ஊருக்குத் திரும்பிச் செல்லும் எனது கல்லூரிக்கால வழக்கத்தை திருப்பி அசைபோட வைத்தது இந்த புத்தகம். கவலைப்படாதீர்கள்…நீங்கள் படிக்கும் போது உங்கள் அனுபவத்தின் திசையையும் கைகாட்டும்.
புத்தக காதலர்கள் புத்தகம் வாங்குவது குறித்த அனுபவங்களை வாசிக்கையில், முதன்முதலாக புத்தகம் வாங்க பணம் ஒதுக்கிய நினைவுகள் நிழலாடிவிட்டுச் சென்றது. முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் ஊழியராக தேர்வு செய்யப்பட்ட போது ரூபாய் 2500 பிழைப்பூதியமாக தீர்மானிக்கப்பட்டது. அதை வீட்டிற்கு, எனது செலவுகளுக்கு, புத்தகம் வாங்குவதற்கு என மூன்றாகப் பிரித்துக் கொள்வேன். எழுத்தாளர் சுப்பாராவ் அவர்கள் நமக்கு அறிமுகம் செய்துள்ள புத்தக காதலர்களை ஒப்பிடுகையில், நானெல்லாம் புத்தகம் வாங்குவதில் சுஜூபி.
உங்கள் வீட்டில் நூலகங்கள் எப்படி இருக்க வேண்டும், நூல்களை எப்படி அடுக்க வேண்டும் என்று நமக்கு பாடமெடுப்பதாகவே தோன்றுகிறது.
தனது வாசிப்பை, தனது வாழ்வியல் நடைமுறையோடு ஒப்பிட்டு வாசகர்களோடு நேரடியாக உரையாடுவதைப் போன்று நல்ல நடையோடு எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தோடு சில மணி நேரமோ, சில நாட்களோ செலவழிப்பீர்களேயானால், அந்த அனுபவம் உங்கள் வாழ்வைக் கூட மாற்றலாம். ஏனேனில் ஏற்கனவே புத்தகத்தின் ஆசிரியர் ச. சுப்பாராவ் இடையில் தான் எத்தனை ஞாயிற்றுக்கிழமை புத்தகத்தின் வழியாக என் வாழ்க்கையையும் மாற்றியவர் என்பதை சான்றளிக்கிறேன்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | |
| ஆசிரியர்: | ச. சுப்பாராவ் |
| வெளியீடு: | |
| விலை: | 10% சலுகை விலையில் ₹135.00 மட்டுமே |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 கி. மகாராஜபாரதி |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

