நுண்வரலாறு எனும் புதிய சொல்லை மட்டுமல்ல, அப்படியான கட்டுரைகளுக்கு இலக்கணம் இது தான் எனும் வகையில், இது வரை அறிந்திராத செய்திகளையும், சிந்திக்காத கருத்துகளையும் சொல்லிச் செல்கிறது சுப்பாராவ் எழுதிய “உதடுகள் சொல்லும் கதை.” உயிர்மையில் தொடராக வந்து கொண்டிருக்கும் தொடரில் இது வரை வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஆங்கிலத்தில் வெளிவந்த நுண் வரலாறு நூல்களைத் தமிழில் நகைச்சுவை ததும்ப அறிமுகப்படுத்தும் வரிசையில் நான் முதலில் வாசித்தது ஜெயசிம்மன் எழுதிய “உலோகம் உரைக்கும் கதைகள்” எனும் நூலாகும். அதை நினைவு படுத்தும் வகையில் சுப்பாராவின் “உதடுகள் சொல்லும் கதை” மிக அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைத் தந்தது. உலகெங்கிலும் இருந்து பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களைச் சுருக்கமாக, செறிவாக, தனக்கேயுரிய தனித்துவமான நடையில் அறிமுகப்படுத்துகிறார்.
“சுவாரசியமான பல மேற்குலகின் நூல்களை இதற்கு முன்பும் சில எழுத்தாளர்கள் தமிழில் சுவைபட அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் சமூகப் பொறுப்புணர்வுடன், வாசகர்களுக்கு நெருக்கமான வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்துகளை அளித்திருப்பது தான் இந்த நூலின் முக்கியச் சிறப்பு என்று கருதுகிறேன்.”
ஆரம்பமே அதகளம்.
“The science of kissing” என்று ஷெரில் கிர்ஷென்பாம் எனும் உயிரியல் அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் எழுதி இருக்கும் முத்தத்தின் வரலாற்றைச் சுவைபடத் தமிழில் தந்திருக்கிறார். கூடவே, இப்படியொரு நூலை நம் பெண்கள் யாரும் எழுதவில்லையே. ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி எழுதியதைத் தேடி அறிமுகப்படுத்த வேண்டி இருக்கிறதே எனும் ஆதங்கத்துடன்.
விலங்குகளுக்குக் கூட முத்தமிடும் பழக்கம் உண்டு, முள்ளம் பன்றிகள் முள் இல்லாத மூக்குப் பகுதியைத்தேய்த்துக் கொள்வது முத்தம் தான் என்பது முதல் தாய் விலங்குகள் சேய்களுக்கு உணவை ஊட்டித் தருவதிலிருந்து முத்தப்பழக்கம் தொடங்கி இருக்கலாம் எனும் குறிப்பு வரை முத்தத்தின் தோற்றம் குறித்துப் பல்வேறு ஆய்வாளர்கள் மும்முரமாக ஆய்வு செய்திருப்பதை அறிய முடிகிறது. மேலும் உலகெங்கிலும் முத்தமிடப் பல விதிகளும் இருந்துள்ளன. சம அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே முத்தமிட்டுக் கொள்ள வேண்டும், அந்தஸ்து குறைந்தவர்கள் மேலே இருப்பவர்களின் கைகளில் முத்தமிட வேண்டும் என்பது மட்டுமல்ல, கிறித்துவம் முத்தத்துக்குக் கடுமையான எதிரியாக இருந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கணவன் மனைவுக்கு இடையேலேயே முத்தமிட அனுமதி இல்லையாம். வெளியூர் சென்று திரும்பிய கணவன் மனைவி குடித்திருக்கிறாளா என்று சோதிக்க மட்டுமே முத்தமிடலாம் போன்ற தலை சுற்றவைக்கும் விதிகள் இருந்துள்ளன என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது.
முத்தத்தைப் போலவே ஸ்க்ரூ டிரைவர்கள், வாழைப்பழம், சுத்தம் செய்வது+ குளியல் பழக்கம், உள்ளாடைகள், கடிகாரம் என்று நம் அன்றாட வாழ்வில் இயல்பாகிப் போன, பெரிதாகக் கண்டு கொள்ளாத பொருள்கள், வழக்கங்கள் எப்படிக் கண்டு பிடிக்கப்பட்டன எனும் வரலாறுகள் நாம் எதிர்பாராத வகையில் சுவாரசியமாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருக்கின்றன.
ஒவ்வொரு நூலையும் மொத்தமாக அப்படியே கரைத்து நம்மிடம் கொடுக்காமல் வாசகர்களை அதைத் தேடி வாசிக்கச் செய்வது தான் ஒரு தேர்ந்த நூல் அறிமுகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். அந்தக் கலையில் ஆசிரியர் வித்தகராக இருக்கிறார். மேற்கோள்களையும் அவ்வாறே தேர்வு செய்கிறார்:
எடுத்துக்காட்டாக,
One Good Turn – A Natural History Of the Screwdriver And the Screw
by Witold Rybczynச்கி. எனும் நூல் குறித்த அறிமுகத்தில்,
“கைவினைக் கலைஞர்கள்,கலை, இலக்கியக் கலைஞர்கள் பற்றிய நம் பார்வையைப்பற்றி இந்த நூல் மிகவிரிவாகப் பேசுகிறது. கண்டு பிடிப்பு,கண்டுபிடிப்பாளர்கள் பற்றி நம்மிடம் இருக்கும் ஒரு தவறான எண்ணம், ஒரு பொருளை எக்ஸ் என்பவர் கண்டுபிடிக்காவிட்டால், ஒய் என்பவர் கண்டுபிடித்திருப்பார் என்பதுதான், ஏனெனில் அது அந்தக் காலத்தின் கட்டாயம், தவிர்க்க முடியாதது என்பதாக நினைக்கிறோம். ஆனால் ஒடிஸியை ஒரு ஹோமர் எழுதி இருக்காவிட்டால், இன்னொரு பூமர் எழுதியிருப்பார் என்று நாம் நினைப்பதில்லை. அது மிகப் பெரிய தவறு என்கிறார் ரிப்சின்ஸ்கி. ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு என்பது ஒரு காவியம் போன்றதுதான்.” எனும் மேற்கோள் மனதை விட்டகல மறுத்தது.
“ஒரு வடிவேலு
காமெடியில் வெண்ணிற ஆடை மூர்த்தி, கையில் கம்போடு,
“ஃபேனக் கண்டுபிடிச்சது யா..ரு..?“ என்று கேட்பது போல…” என்று
நம்மூர் சினிமாக்கள், தற்கால நிகழ்வுகள் என்று நம்மால் பொருத்திப் பார்க்கக் கூடிய குறிப்புகளினூடே சொல்ல வரும் விஷயத்தைச் சொல்வதால் ஆங்கில நூல்களின் அறிமுகம் எனும் உணர்வே நமக்கு ஏற்படுவதில்லை. Cultural gap bridging (பண்பாட்டு இடைவெளியை நிரப்புவது) எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த தேர்ந்த மொழிபெயர்ப்பாளராக இருப்பதும் இங்கே அவருக்குக் கை கொடுத்திருக்கக் கூடும். ஆனால் ஒரு நடிகையைக் குறிப்பிடும் போது அவர் சிக்கிய பாலியல் சிக்கலை நினைவூட்டும் வகையில் ‘நித்தியானந்தா புகழ்’ என்று குறிப்பிட்டிருக்க வேண்டாம்.
எனக்கு மிகவும் பிடித்தது டான் காப்பெல் (Dan Koeppel) எழுதியிருக்கும் Banana The Fate Of The Fruit That Changed The World எனும் நூல் குறித்து “ஏவாள் சாப்பிட்ட பழம்” என்ற தலைப்பில் உள்ள கட்டுரையாகும்.
“வாழையின் வரலாறு சாதாரண வரலாறல்ல. அது ஏகாதிபத்தியத்தின் வரலாறு.” என்று தொடங்கி நூலைச் செறிவாக அறிமுகப்படுத்திய பின்பு, இறுதியில் எழுதும் குறிப்பு தான் கவனத்துக்குரியது. “பிரிட்டிஷ் ஏகாதியத்தியத்திற்கு பருத்தியில் இருந்த ஆர்வம் வாழையில் இல்லாதது நம் முன்னோர் செய்த புண்ணியம். அமெரிக்க மாமாவும் வாழைப்பழத்திற்காக இந்தியா வரை வராமல் இருந்து விட்டதும் முன்னோரின்எக்ஸ்ட்ரா புண்ணியம். ஆனால், இப்போது அமெரிக்க வரவேண்டும் என்றில்லை. மதுரையின் கடைகளில் இதுவரை நாட்டுப்பழத்தையும், ரஸ்தாளியையும் விற்று வந்தவர்கள் இப்போதுஅமெரிக்க கேவண்டிஷ் பழத்தை விற்கிறார்கள். அதை இந்திய துணைக்கண்டத்தின் ஓனரின் பெயரில் ரிலையன்ஸ் பழம் என்கிறார்கள். திருவிளையாடல் படத்தில் என்ன விறக வெலை கொடுத்து வாங்கணுமா? என்பார்கள். அது போல் இப்போது மதுரைக்காரர்கள் என்னவாழைப்பழத்த எடை போட்டு வாங்கணுமா? என்று திகைத்து நிற்கிறார்கள். வாழையின் திருவிளையாடல் தொடர்கிறது !”
சுவாரசியமான பல மேற்குலகின் நூல்களை இதற்கு முன்பும் சில எழுத்தாளர்கள் தமிழில் சுவைபட அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் சமூகப் பொறுப்புணர்வுடன், வாசகர்களுக்கு நெருக்கமான வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்துகளை அளித்திருப்பது தான் இந்த நூலின் முக்கியச் சிறப்பு என்று கருதுகிறேன்.
“ஸ்க்ரூ ட்ரைவர் குறித்த கட்டுரையில், எல்லா கண்டுபிடிப்புகளும் மேட்டுக் குடியினரின் பயன்பாட்டிற்காக கண்டு பிடிக்கப்படும். அவாகள் பயன்படுத்திய பிறகு காலப்போக்கில், சிறிது சிறிதாக சமூகத்தின் எல்லாத் தட்டு மக்களின் பயன்பாட்டிற்கும் வரும். ஆனால் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட போதுஅது ஆபத்தானதாக இருந்தது. துல்லியமாக சுடவில்லை. பயன்படுத்த எளிதாகஇ்ல்லை. எனவே, மாட்ச்லாக் துப்பாக்கிகளை எளிய சிப்பாய்கள்தான் பயன்படுத்தினார்கள். உயிரை விட்டார்கள்.”
இவ்வளவு நல்ல கட்டுரைகளைப் படித்த பிறகு, ‘பத்தி எழுத்து என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும்; நாமும் எப்போது இப்படி எழுதுவோம்’ என்று எழுத்து ஆர்வம் மேலோங்க மலைக்கும் வாசகருக்காகவே பயனுள்ள குறிப்புகளைத் தாங்கி வருகிறது என்சைக்கிளோபிடியா குறித்த இறுதிக் கட்டுரை.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | உதடுகள் சொல்லும் கதை |
| ஆசிரியர்: | ச.சுப்பாராவ் |
| வெளியீடு: |
உயிர்மை பதிப்பகம்
|
| விலை: | ₹.255 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 ஜெ. தீபலட்சுமி |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

