செய்தியாளர் சந்திப்பு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 15வது மாநில மாநாடு – ஆதவன் தீட்சண்யா

தினம் ஒரு புத்தகம்

சென்னை, டிச. 7-
அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது என பபாசி தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்…
அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக கருதுகிறோம். முன்பெல்லாம் நீதி வகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் நூலக வாசிப்புக்கு என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கு என நூலகர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களோடு பொது நூல்களும் படிக்கும் ஆர்வம் மாணாக்கர்களிடையே இருந்தது.
பள்ளி படிப்போடு பொது மற்றும் இலக்கிய புத்தகங்களைப் படிக்கும் போது மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக, அறிஞர்களாக, மதிப்புமிக்க பொறுப்பாளர்களாக உயர முடிந்தது. அதோடு மாணவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது. இன்றைய சூழலை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலன் கருதி நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அனைத்து பதிப்பாளர்கள் சார்பாக தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பபாசி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை தேர்வு செய்துவதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்க அரசு உதவ வேண்டும் எனவும், அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தரவேண்டும் எனவும் இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்…ஆண்டுதோறும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோன்று 2022ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னைப் புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணியை பபாசி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பபாசி தலைவர் எஸ்.வயிரவன்,
செயலாளர் எஸ்.கே.முருகன்.
Library letter to all ceo's (1)
இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவிற்கு வழங்கப்படுகிறது. 1994 இல் வெளியான “Paradise’, இவர் எழுதியவற்றில் மிகப்புகழ் பெற்றது. Desertion, By the sea என்பவை பிற புத்தகங்கள்.
2005 இல் பூக்கர் ப்ரைஸ் (Booker Prize) விருதிற்கும், வைட்பிரெட் ப்ரைஸ் (Whitbred prize) விருதிற்கும் இவர் புத்தகங்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.
1948 இல் தான்சனியாவின் சான்சிபர்( Zanzibar) எனும் தீவு பிரதேசத்தில் பிறந்த இவர் தற்போது இங்கிலாந்து நாட்டில் வசித்துவருகிறார். தான்சியா ஆட்சியை 1964 இல் ராணுவம் கைப்பற்றியபோது இங்கிலாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.பின்பு அந்நாட்டிலேயே நிரந்தரமாக வசித்துவருகிறார்.
காலனிஆட்சிமுறை தருகிற தாக்கத்தோடும் , அகதிகளின் வாழ்க்கைவலியோடும் சரசமற்றதும் மிகத்தீவிரமானதுமான அனுதாபவுமே நோபல் பரிசுக்கான தேர்வின் காரணமாக தேர்வுக்குழு சொல்கிறது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுகிற ஐந்தாவது ஆப்பிரிக்க தேசத்தவராவர் அப்துல் ரசாக் குர்னா.
2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பபாசி இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.
அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:
1. அபி – கவிதை
2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை
4. வெளி ரங்கராஜன் – நாடகம்
5. மருதநாயகம் – ஆங்கிலம்
6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.
இவ்வாறு பபாசி தெரிவித்துள்ளது.
2012 முதல் ஆண்டு முதல் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளை தந்த படைப்பாளிக்கு 12 வகையான விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறார்கள். இந்த விருதுகள் மொத்தம் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு கொண்டவை. இந்த ஆண்டுக்கான விருதுகளை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.

விருதுக்கு தேர்வானோர் விவரம்:
இந்த ஆண்டிற்கான எஸ்.ஆர்.எம் தமிழ்ப் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது – அ.வெண்ணிலா (கங்காபுரம்), இரா.முத்து நாகு (சுளூந்தீ) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
பாரதியார் கவிதை விருது – கடவூர் மணிமாறன் (குறிஞ்சிப் பூக்கள்), அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது – வெற்றிச்செல்வன் (மழலையர் மணிப் பாடல்கள்), ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருது – டாக்டர் பழனி (நாலடியார்).
அப்துல் கலாம் தொழில்நுட்ப விருது – வி. டில்லிபாபு (எந்திரத் தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்), முத்துதாண்டவர் தமிழிசை விருது – டி. கே. எஸ். கலைவாணன் (நாடகமும், தமிழிசையும்), பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது – சி.மகேந்திரன் (அறிவு பற்றிய தமிழரின் அறிவு), முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது – சி.மகேஸ்வரன் (இனக்குழு வரைவியல்), சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது – மா.பூங்குன்றன் (தென்மொழி).
தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது – மணிமேகலை மன்றம், ராஜபாளையம், அருணாசலக் கவிராயர் விருது – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் தமிழ் இசைக் குழு, பாரிவேந்தர் பைந்தமிழ் விருது – பா.வளன் அரசு (மூத்த தமிழறிஞர்).
விருது வழங்கும் விழா சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் எனவும், விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்ட மக்களை அறிவுத்தளத்தில் கொண்டு செல்வதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தர்மபுரியில் தகடூர் புத்தக பேரவை என்ற அமைப்பானது ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா நடத்த முடியாமல் போனது.
இருப்பினும் வட்டார அளவில் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த பகுதியில் இருக்கும் தன்னார்வ அமைப்புகளை இணைத்துக்கொண்டு தகடூர் புத்தக பேரவை, பாரதி புத்தகாலயம் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த செப்டம்பர் 3ந் தேதி முதல் 5 ந்தேதி வரை மூன்று நாட்கள் பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த புத்தக கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டாளருமான தலைமையாசிரியர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் மா. பழனி அவர்களிடம் புத்தக கண்காட்சி பற்றிய அனுபவங்களை கேட்டோம்.
தகடூர் புத்தக பேரவை தோற்றுவிக்கப்பட்டு நடத்தப்படுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறேன்.

வட்டார அளவில் புத்தக கண்காட்சி நடத்த முடிவு எடுக்கப்பட்டு அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் ஆகிய பகுதிகளில் புத்தக கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக பென்னாகரத்தில் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடிவெடுத்து தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து ஃப்யூவிஷன் கிளப் பென்னாகரம் புத்தக கண்காட்சியை நடத்த திட்டமிட்டு பணிகளை துவக்கினோம். புத்தகக் கண்காட்சி செப்டம்பர் – 3ந்தேதி காலை 10 மணியளவில் தகடூர்புத்தகப் பேரவையின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். தொடக்கவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தது மிகப்பெரிய மனநிறைவைத் தந்தது.
வாசகர்கள் பெருவாரியாக புத்தக கண்காட்சிக்கு வருகை தந்து அவர்களுக்கு தேவையான நூல்களை வாங்கி சென்றனர். அத்துடன் விழாக்களில் சால்வை மற்றும் மாலைக்கு பதிலாக புத்தகங்களை பரிசளிக்க முன்வந்து வாசகர்கள் புத்தகங்களை வாங்கியது காண முடிந்தது. மாலை நேர இலக்கிய நிகழ்வுகள் உள்ளூர் எழுத்தாளர்கள் கவிஞர்கள் மூலம் நடத்தப்பட்டது.
மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகம் வாங்கி சென்றதை பார்க்கும் போது இனி ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற புத்தகக் கண்காட்சியை பென்னாகரத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது. வாசகர்களும் தொடர்ச்சியாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.
மூன்று நாள் முடிவில் புத்தக விற்பனை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நடந்துள்ளதாக புத்தக கடைக்காரர்கள் தெரிவித்தது மனதிற்கு இதமாக இருந்தது.
மூன்று நாட்களும் ஒரு குடும்ப விழாவை எப்படி ஒருங்கிணைத்து நடத்த வேண்டுமோ அதே போன்ற உணர்வுடன் ஒருங்கிணைத்து அனைவரின் நட்பையும் அன்பையும் பெற்று சிறப்பாக நடத்துவதற்கு ஃப்யூவிஷன் கிளப் பொறுப்பாளர்கள் முன்வந்தது மிகுந்த மனநிறைவைத் தருவதாக இருந்தது.

இந்த இனிய நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற்றவ அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டதோடு பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் வருகை தந்தது சிறப்பு அம்சமாகும். கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நூலகங்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக அளிப்பதற்கு தொண்டு நிறுவனங்கள் தனிநபர்கள் முயற்சித்தது இந்த புத்தக கண்காட்சியில் சிறப்பு அம்சமாக இருந்தது.
நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு முழுமையாக வழிகாட்டிய தகடூர் புத்தக பேரவையின் தலைவர் இரா. சிசுபாலன் அவர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரிந்திருந்த அனைத்து சான்றோர் பெருமக்களும் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னோடு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு இரவு பகல் பாராமல் உழைத்திட்ட ஃப்யூவிஷன் கிளப் பொருளாளர் மணிவண்ணன் மற்றும் தேவகி உட்பட கிளப் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி.
மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து புத்தக கண்காட்சி வெற்றி பெற செய்வதற்கு விளம்பரங்கள் கொடுத்த விளம்பர நிறுவனங்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நான் மிகுந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடத்துவதற்கான முயற்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கூத்தப்பாடி பழனி
தலைமை ஆசிரியர்,
பென்னாகரம்.
06.09.2021 திங்கள் கிழமை மாலை 5.30 மணிக்கு பாரதி புத்தகாலயம், ஸ்டேட் பேங்க் ரோடு, ஈரோட்டில் எழுத்தாளர் வே. சங்கர் எழுதிய “டுட்டுடூ” (சிறார் நாவல்) புத்தக வெளியீடு குறைந்த எண்ணிக்கையிலான வாசகர்களின் முன்னிலையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி நடைபெற்றது.
புத்தக ஆர்வலரும் வாசகருமான திரு.ரமேஷ் அவர்கள் வந்திருந்த வாசகர்களை வரவேற்று நூல் ஆசிரியரைப் பற்றியும் நூலைப் பற்றியும் சிறந்தமுறையில் அறிமுகம் செய்து வைத்து வரவேற்புரை நல்கினார்.
தொடர் நிகழ்வாக திரு.ரமேஷ் அவர்கள் “டுட்டுடூ” சிறார் நாவலை வெளியிட முதல் பிரதியை நூல் ஆசிரியரின் நெருங்கிய நண்பரான திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

அடுத்த பிரதியை பாரதி புத்தகாலயத்தின் செல்லப்பிள்ளையும் நெடுநாளைய வாசகருமான திரு.பாபு அவர்கள் வெளியிட அதை பசுமை உலகம் பொறுபாளர் திரு.மனமோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலின் சிறப்பு குறித்தும் கதையின் சாராம்சம் குறித்தும் பாரதி புத்தகாலயத்தின் விற்பனையாளர் திருமதி.ராணி அவர்கள் சிறப்புரை ஆற்றியது நூல் வெளியீட்டு விழாவின் முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது.

சிறார் இலக்கியத்தின் கூறுகள் குறித்தும் சிறார் இலக்கிய நூல்களை குழந்தைகளின் மத்தியில் கொண்டு செல்லவேண்டியதின் அவசியம் குறித்தும் திரு.சந்தோஷ்குமார் அவர்கள் பேசியது சிறப்பு.
வந்திருந்த வாசகர்களில் திரு.மகேஷ், திரு.பாலஜவகர் மற்றும் திரு.ஸ்டீபன் ராஜா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
”டுட்டுடூ” சிறார் நாவலின் ஆசிரியர் வே. சங்கர் அவர்கள் தனது ஏற்புரையில் இந்நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் குறித்தும் அது எவ்வாறு வடிவம் பெற்றது என்பதனையும் விலாவாரியாகப் பேசினார்.

இறுதியாக, பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தோழர்.இளங்கோ அவர்கள் நன்றி நவிழ புத்தக வெளியீட்டு விழா எளிமையாகவும் சிறப்பாகவும் நிறைவுற்றது.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பால சாகித்ய புரஸ்கார் தாமிர விருதும், 50 ஆயிரம் ரொக்கம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறார் இலக்கியத்திற்காக ஒன்றிய அரசால் அளிக்கப்படும் சாகித்ய அகடாமி விருதுதான் பால சாகித்ய புரஸ்கார் விருது. இதில் 2020ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழ்மொழி பிரிவில் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து, பேசிய எழுத்தாளர் எஸ். பாலபாரதி, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலை தடுப்பதற்காக நான் எழுதிய மரப்பாச்சி பொம்மை நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும்.
பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளேன். இந்த நூல் முதல் பதிப்பு விற்று தீர்ந்து மீண்டும் மறுமதிப்பு வெளியிடப்பட்டது. மரப்பாச்சி பொம்மை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான அநீதி தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பதிப்பகத்தார்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சென்னை: கல்விச் சிந்தனைகள் குறித்த வளமையான புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் கூறினார்.
செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ‘கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (செப்.1) சென்னையில் நடைபெற்றது. பேரா. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூலை மேனாள்துணைவேந்தர் பேரா. க.அ.மணிக் குமார் வெளியிட முதல் பிரதியை கே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ‘கல்விச் சிந்தனைகள் நூல் திரட்டு’ விற்பனையை தொடங்கி வைத்து கே.நந்தகுமார், அயல்நாட்டு கல்வியாளர்கள், சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடிதேடி படிப்பது என்ற நிலை மாற வேண்டும். தமிழில் முதல் தரமான புத்தகங்கள் வேண்டும். ‘கற்றல் என்பது யாதெனில்; கல்வி 4.0’ போன்று நல்ல நல்ல நூல்களை ஆயிஷா நடராசன் போன்றவர்கள் எழுத வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

பேரா.க.அ.மணிக்குமார் குறிப்பிடுகையில், “பல்கலைக் கழக பேராசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல் தரத்தோடு இந்த நூல் உள்ளது. திறமையான ஆசிரியர்களை ஊக்குவித்தால் மிகச்சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும்” என்றார்.
“வகுப்பறைகள் மறைந்து, மனிதநுண்ணறிவை கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டி உள்ளது. தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது. தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மாணவர் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. ஒன்றரை வருடம் கல்விச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு, பயிற்சிகள் இன்றி கணித அடிப்படைகளை மறந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். கற்றல், கற்பித்தல் இயல்பாக இருக்காது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்ந்து கற்பிக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “காலையில் எழுந்து பல் தேய்க்க பழகியவர்கள், இப்போது செல் தேய்க்க பழகிவிட்டோம் என்பன போன்ற வாக்கியங்கள் வாசிப்பை நகர்த்தி செல்கிறது. 2010க்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதி மனிதர்களாகவும், பாதி கருவி களாகவும் உள்ளனர். இந்த அழகையும் ஆபத்தையும் உணர வேண்டும். தமிழக கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டி உள்ளது. அதற்கு இந்நூல் உதவும்” என்றார்.“தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக, ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க ‘அகஸ்தியா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு மட்டுமின்றி மாணவர் சமூகத்திற்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் குறிப்பிட்டார்.

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராஜன், “கடந்த ஒன்றரை வருடத்தில் ஆன்லைன் வாயிலாக முறைசாரா கல்வி பயின்று மாணவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். எனவே, கல்வி 4.0வை ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார்.“இந்தியாவிலேயே கியூஆர் கோடு என்ற முறையை பாடத்திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தமிழக பாடத்திட்டம் முதலில் குழந்தையை குழந்தையாக அணுகும். அடுத்து மாணவனாக, தேடலில் ஈடுபடும் நிபுணனாக, எதிர்காலத்தை திட்டமிடுபவராக உயர்த்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டத்திற்குள் இவ்வளவையும் வைக்கும் அளவிற்கு அரசு பள்ளி ஆசிரியர்களிடம் திறமை உள்ளது. செயல்திறன் மிக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ள சூழலில், கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு தொழில் நுட்பத்தையும் கைக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், பாரதி புத்தகாலய நிர்வாகிகள் க.நாகராஜன், ப.கு.ராஜன், சுரேஷ் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் பேசினர்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0