மரணத்தின் குருதிச்சித்திரம்
மரணத்தின் தெருக்களில்
உணரப்படாத சில வலிகளின்
நெடியடிக்கும் வாசனையை
வதை முகாம்களே
உற்பத்தி செய்கிறது…
அடி தாங்க முடியாதவர்களின்
காயத்தின் பிசுக்குகளை
கரைக்கமுடியாத மெழுகென
கெட்டியாய்
சேமித்துவைக்கிறது காலம்…!
கொலைக்கூடங்களின் மடியில்
ஒருவனைக் கிடத்த
பெருங்குற்றங்களின் நிரூபணம்
அவசியமில்லை
அற்ப காரணங்களே
போதுமாயிருக்கிறது…
குரல் உயர்த்தினாலும்
குற்றத்தின் சின்னதாய் ஒரு
சிராய்ப்பிருந்தாலும் போதும்
கில்லட்டின்களின் முத்தங்கள்
பரிசளிக்கப்படுவது நிச்சயம்…
இரக்கமற்றவர்களால்
தாழிட்ட அறைகளுக்குள்
அடித்துக் கொல்லப்பட்டு
கிடத்தப்படும்
பிரேதங்களைக்கொண்டு
உறவுகளால்
தங்களின் கூடாரங்களில்
இயலாமைகளின் பாடலை மட்டுமே
ஒப்பாரியாய் இசைக்க முடிகிறது…!
வரம்பற்ற அதிகாரத்தின் போதை
எதையும் செய்யத்துணியும்…
வெளித்தெரியா ரணங்களை
உடலுக்குள் திணித்து
கொப்பளிக்கும் குருதியில்
வன்மத்தின் சித்திரமெழுதும்…!
எழுதமுடியா வதைகளின்
மரணத்திற்குமுன்
மண்டியிட்டு கெஞ்சும் வலிகள்
உலகின் செவிகளுக்குள்
சென்று சேர்வதற்குள்
அதிகாரத்தின் இருண்ட பள்ளங்களில்
அவை ஓசைகளின்றி
மூடிப் புதைக்கப்படுகிறது…!
எனினும்…
எங்கோவோர் மூலையில்
அராஜகத்தை தோண்டியெடுத்து
துணிந்து கூண்டிலேற்றுபவனின்
சபதங்கள் யாவும்
தீர்ப்பின் நாள் வருதற்குள்
வாய்தாக்களின்
காலத் தேய்மானங்களால்
நீர்த்துப்போய்
மூப்படைந்து
உதிர்ந்து போகிறது…!
சந்துரு…
படுகைகள் உணர்த்தும் பாடம்
என்னிலிருந்து என்னை
இறக்கி வைத்துவிட்டு
முகவரியின்றி
நடக்கும் வேளைகளில்
முகமறியாதவர்களின்
கூட்டத்தில்
கவனிப்பாரற்று
அனாதையாய் கிடக்குமென்
அறிவை காண்கிறேன்…
செல்லுமிடமெல்லாம்
முன் வரிசையில் நின்று
முகம் காட்டிய என் ஒப்பனைகள்
வேடமற்றவர்களின்
எதிரில்
நிறமற்று நிற்பதை கவனிக்கிறேன்…
என்னிலிருந்து
மேலும் என்னை
விலக்கிவைத்து நடக்கையில்
ஒருவருக்கும்
பயன்படாத எல்லைகளில்
ஊனமுற்று கிடக்கிறது
எல்லையற்றதெனும் நினைப்பில்
எக்காளமிட்டுத் திரிந்த
என் அதிகாரம்…
நதி புரட்டும் வேகத்தில்
உருளும் கூழாங்கற்களுக்கு
ஒரே இடம்
நிரந்தரமில்லையென்பதை
நதி வறண்ட காலத்தின்
படுகைகள்
எளிதாய் உணர்த்திவி்டுகிறது…
சந்துரு…