தொடரின் இந்த 10வது கண்ணியில் சென்ற பதிவில் குறிப்பிட்டதிலிருந்து மோட்டார் தொழிலால் சென்னை உழைப்பாளிகளின் ஒருவனான எனது வாழ்க்கையிலும் மற்றவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிப்பிட்டுத் தொடர்வது என்றுதான் முதலில் நினைத்து எழுதத் தொடங்கினேன் 1960களில் மத்தியதர வர்க்கத்தின் நாட்டுபற்றுணர்வும் நேரு அமைச்சரவையின் தொழில் வளர்ச்சி பார்வையும் சென்னை நகர வட்டாரம் நவீன தொழில் நகரமாக ஆவதற்குப் பெரிதும் உதவியதால். தொழில்நுட்ப ஞானமுள்ளவர்களால் ஆட்டோ மொபைல் மற்றும் எந்திர உதிரிப்பாகங்கள். செய்யும் சிறு குறு தொழிலகங்கள் உருவாகின, அரசும் தடையில்லா உயரழுத்த மின்சாரம் கொண்ட தொழிற் பேட்டைகள் சென்னையைச் சுற்றி உருவாக்கியது ஆனால் அது நீடிக்காமல் போனது தொழிற் பேட்டைகள் சிறு குறு தொழில்களின் மயானமாக சிதிலமடைந்த கட்டிடங்களாக ஆனது.
இதற்கான காரணங்களைத் தொடர்வது என்றுதான் துவங்கினேன். “மத்தியத்தர வர்க்கத்தின் நாட்டுப்பற்று” என்ற சொற்றொடர் இந்த வரிகளுக்குமேல் என்னை எழுதவிடவில்லை. நாட்டுப்பற்று என்ற சொல்லின் பொருள் இன்று சிதைக்கப்பட்டுக் கிடக்கிறது.. இது பற்றிய என் மனதைப் பெரிதும் பாதித்த ஒரு செய்தி என்னை எழுதவிடவில்லை. அது பற்றி குறிப்பிடு முன்னர் இன்னொன்றைப் பதிவு செய்கிறேன்
என்னிடமுள்ள பெரிய குறை மெதுவாக எழுதுவது. அடித்து அடித்து எழுதுவது ஒன்றை எழுத ஆரம்பித்தால் அதை முடிக்காமல் இன்னொன்றை எழுத முனைவது என்று பல குறைகளுண்டு. .

அப்படி என் மடிக்கணினியில் தொங்கலில் கிடக்கும் எழுத்துக்களின் பட்டியல் வெகு நீளம். என்மனதிலே இடம் பிடித்த தத்துவ ஞானிகள் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆவர் இவர்களிடையே இளமைக் காலத்திலிருந்து முதுமை அடைகிறவரை நடந்த கடித போக்குவரத்தை வைத்து ஒரு நவீன மானுட மனம் உருவாக அவர்களது பங்களிப்பைப் பற்றிய சிறிய நூல் அறைகுறையாக உள்ளது. இவர்களைப் போலவே என் மனதில் இடம் பிடித்த அறிவியல் தத்துவ மேதை மைக்கேல் ஃபாரடே பற்றிய வாழ்க்கை,அதுவும் முடிவுரைக்கு காத்து கிடக்கிறது.
அரசியல் அறத்திற்கு வள்ளுவரைவிட அவ்வை எனும் விறலியே சிறந்த பங்களிப்பு என்ற கட்டுரையும் முடிவை எட்டவில்லை. வள்ளுவர் சொல்லுக்கு நமது விருப்பப்படி பொருனைத் திணிக்காமல் புரிவது எப்படி என்ற கட்டுரையும் விடுதலைக்கு முன்னால் அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்த கணித மேதை ராமானுஜம், சி.வி ராமன் போன்று விடுதலைக்குப்பிறகு ஏன் பங்களிப்பு இல்லாமல் போய்விட்டது என்பதை விளக்க ராமானுஜம் வாழ்க்கையும். காம்ரேட் பெரியாரும் பகுத்தறிவு இயக்கமும் எல்லாமே குறிப்புகளாகவும் அரைகுறையாகவும் கிடக்கின்றன. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனது எழுதுகிற நேரம் குறைவு தேடுகிற நேரம் கூடுதல் தகுந்த சொல்லைத் தேடுவதிலேயே காலம் கடந்துவிடுகிறது.
தொடரின் 10வது கண்ணியில் எனக்கு மன உளைச்சலைக் கொடுத்த அந்த செய்திபற்றி பதிவு செய்வது முதலில் குறிப்பிட்டதை அடுத்து எழுதுவது என தீர்மானித்து எழுதுகிறேன்.
சென்னை சிட்டிசன் மேட்டர்ஸ் என்ற வலைத்தளத்தில் படங்களுடன் சென்னை அர்மீனியன் தெருவில் பாழடைந்துகிடக்கும் கோகலே ஹால் பற்றி வந்த அந்த செய்தி என் மனதைப் பெரிதும் பாதித்துவிட்டது. அந்த செய்தி எனக்குக் கொடுத்த மன உளைச்சலை வாசகர்களால் உணர இயலாது என்பதையும் அறிவேன். இருந்தாலும் மானுடம் சம கால நிகழ்வுகளைக் காணும் பொழுது வரலாற்றோடு ஒப்பிட்டு உள்ளொளி பெறுவதையும் அறிவேன் அந்த வகையில் அதனுடைய வரலாறு என் போன்றோருக்கும் பழைய நினைவுகளை மனதிலே ஓடவிடுகிறது. இளைய தலைமுறைக்கு மனதை விசாலமாக்க உதவுமென்று கருதியே பதிவு செய்கிறேன்.
அந்த கட்டிடத்தைப் பற்றி வரலாற்றுச் செய்திகள் ஏராளமுண்டு அந்த வரலாறுகள் சொல்லாத தகவல்களையே இங்கே நினைவூட்டுகிறேன். 1914ம் ஆண்டில் இந்திய இளைஞர் சங்கம் (Y.M.I.A) 1916ம் ஆண்டு அதன் தலைமையகமாக இந்த கட்டிடம் எழுந்தது. அன்று இளம் கிருத்துவர் சங்கம் என்ற அமைப்பிற்குப் போட்டியாக இது உருவாக்கப்பட்டதாக வரலாறு பதிவு செய்கிறது. நெருங்கி அன்றைய நிகழ்வுகளைப் பரிசீலித்தால் இந்த அமைப்பு ஜாதி-மத வேறுபாடின்றி சுயாட்சி வேட்கையைப் பிரதிபலிக்கும் அமைப்பாக உருவானது என்பதே உண்மையாகும்.

1916ம் ஆண்டு என்பது முதல் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலமாகும் லட்சக்கணக்கான இந்தியச் சிப்பாய்கள் ஐரோப்பியப் போர் முனையிலே ராஜவிசுவாசத்தோடு போரிட்டு ஆயிரக் கணக்கில் மடிந்து கொண்டிருந்த காலம். அன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இரண்டாவது அகிலம் என்ற பாட்டாளி வர்க்க இயக்கத்தில் யுத்த எதிர்ப்பு விவாதப் பொருளாகி யுத்த எதிர்ப்பு மேலங்கியிருந்தது இது காலணி ஆதிக்கவாதிகள் நடத்துகிற யுத்தம் என்ற எதிர்ப்புணர்வு ஐரோப்பிய அமெரிக்க ராணுவத்திலும் பரவி ஒரு சில இடங்களில் பதுங்குகுழி அமைதி உருவான காலம். வெடிச்சத்தம் கேட்கும் எதிரும் புதிருமாக நின்று சுடாமல் வாணத்தை நோக்கிச் சுட்டு வெடிமருந்துகளை காலி செய்வர்
இதில் வெகுவாக பாதித்தது ஜெர்மன் ராணுவ தலைமை கிழக்கு முனையில் போல்ஷிவிக் புரட்சியால் சண்டையைத் தொடர் இயலவில்லை. மேற்கு முனையில் ராஜவிசுவாசத்தோடு இந்தியச் சிப்பாய்கள் போரிட்டனர். வேறு வழியில்லாமல் ஐரோப்பிய சாம்ராஜ்யவாதிகள் பிரிட்டீஷ் தலைமை தாங்கிய ஏகாதிபத்திய வாதிகளிடம் சரணடைந்தனர்
அந்த நேரத்தில் இந்திய இளைஞர் சங்கம் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் உருவாக்கிய ராஜவிசுவாசத்தை உடைத்து தேசப்பற்றை விதைத்த இயக்கம் Y.M.I.A குடியிருந்த கோகலே ஹால் ,இன்று சொத்து தகராறு காரணமாக சிதிலமடைந்து கிடப்பதைக் காண்பவர்கள் கண்கள் கலங்காமல் இருக்குமா?
இந்த மண்டப கூடத்தில் நேருமுதல் ராஜாஜி வரை எல்லா அரசியல்கட்சி தலைவர்களும் பேசியதை வரலாறு பதிவு செய்துள்ளது அது பதிவு செய்யாத சில தகவல்களைப் பதிவு செய்கிறேன் மக்கள் கலை இலக்கிய அமைப்புகள் சோசலிச கலை இலக்கியத்தை பரப்புமிடமாகவும் இது இருந்தது. விடுதலைக்குப் முன்பும் பின்பும் இந்த மண்டபம் அரசியலும், சமூக விழிப்புணர்வும் பெற உதவியது. இந்த மண்டபத்தில் நடக்கும் ஹோட்டல் தொழிலாளர் சங்க ஆண்டுவிழா கூட்டங்கள் மிகவும் சிறப்பானவை இந்த கூட்டங்களில் ராஜாஜி, அண்ணா, மா.பொ.சி கலந்து உரையாற்றியதைக் கண்டு கேட்டிருக்கிறேன்

இந்த மண்டபத்தை நினைக்கிறபொழுது நான உணர்ச்சிவயப்பட காரணங்கள் பல அதில் இரண்டை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் டபிள்யு. ஆர். வரதராசன்- சரஸ்வதி திருமணம் நடந்த இடம். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ. பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. மற்றது 1975ல் அவசரக்கால அறிவிப்பைத் தமிழகத்தில் அமுலாக்க மறுத்த தி.மு.க ஆட்சிக்காலம் கோகலே மண்டபம் அவசரக் கால எதிர்ப்பை காட்டும் இயக்கங்களின் கூட்டம் நடக்குமிடமாகவும் இருந்தது.
தோழர் இ.எம்.எஸ் கூட்டம் என் தலைமையில் நடந்தது அவரது ஆங்கில பேச்சை நான் மொழி பெயர்க்க நேர்ந்தது அவரது பேச்சில் நான் பலவற்றைச் சொல்லாமல் விழுங்கிவிட்டேன். கூட்ட முடிவில் இ.எம்.எஸ் ஜோக்காக சொன்னார் இந்திராகாந்தியைவிட அதிகமாகப் பேச்சை சென்சார் நான் செய்த தாக குறிப்பிட்டு என்னைத் தேற்றவும் செய்தார்.
ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கம் வரை இந்த மண்டபம் உதவியிருக்கிறது அந்த வரலாற்றுச் சின்னம் சிதிலமடைந்து கிடப்பதைப் பார்க்கிறபொழுது ரத்தக் கண்ணீர் வடிப்பதை தவிர்க இயலவில்லை.
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 6 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 7 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர்: சென்னையும், நானும் – 8 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 9 ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்

