எஸ் ஆர்.வி.எஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் திடீரென சங்கத்தை நம்பி வேலை நிறுத்தம் செய்தனர். எஸ் ஆர்.வி.எஸ் தொழிலக வாயிலில் (அண்ணா சாலை புகாரி ஹோட்டல் அருகில் இருந்த வாயில்) அமர்ந்துவிட்டார்கள்., சட்டப்படியே சங்கம் நடத்தும் ஐ.என் டி.யு.சி தலைவர் ரெங்கசாமி நேரடியாக போகாமல் தொழிலாளர்களை சந்தித்து வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறவைக்க முயற்சிக்குமாறு பி.ஜி.கே மேனனை அனுப்பிவைத்தார் .. தலைவர் நிர்வாகத்தைச் சந்தித்து பேசுமுன் வேலை நிறுத்தம் செய்தது தவறு வேலைக்கு போங்கள் திடீர் வேலை நிறுத்தம் சரியல்ல என்று பி.ஜி.கே.மேனன் தொழிலக வாயிலுக்குச் சென்று கூறி வேலைக்குத் தொழிலாளர்களை அனுப்பிவைத்தார். சூழ்ச்சியில் வல்ல நிர்வாகம் மறுநாள் 150 தினக்கூலி தொழிலாளர்களுக்கு வேலை மறுத்து மீதிப்பேருக்கு வேலை கொடுத்தது. விநோதம் என்னவெனில் ஐ. என் டி.யு.சி சங்கம் அமைக்கக் கையெழுத்துப் போட்ட தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்தது அப்பாவித் தொழிலாளர்களை வெளியே நிறுத்திவிட்டது.
எல்லோருக்கும் வேலை கொடு என்று வேலை நிறுத்தத்தைத் தொடர வேண்டும். அல்லது 150 பேருக்கு வேலை கொடு என்று தொழில் தகராறு சட்டப்படி தொழிலாளர் நல இலாகாவை அணுக வேண்டும். ஐ.என்.டி.யு.சி சங்கம் சட்டப்படி அணுகுவது என்று முடிவு செய்தது. வேலை கொடு என்று தினசரி ஆர்ப்பாட்டம் செய்வது காலையிலிருந்து மாலை வரை வாயிலின் இருமருங்கிலும் அமர்ந்து தர்ணா நடத்துவது என்றும் அறிவித்தது. தினசரி காலையில் பி.ஜி.கே. மேனன் அங்குச் சென்று ஆர்ப்பாட்டத்தைத் துவங்கிவைப்பார். கூட்டுறவுச் சங்க தேர்தல் வழக்கிற்கு மேனன் உதவியதால் நானும் அவரோடு இனைந்து அந்த போராட்டத்தில் பங்கெடுத்தேன்.

எஸ். ஆர்.வி எஸ் தொழிலாளர்கள் போராட்டம் எனது சமூக பார்வையை விரிவுபடுத்தியது என்றே சொல்ல வேண்டும்..அன்றைய தேதிகளில் சென்னைக்கு ரயில்,லாரிகள் மற்றும் கப்பல்கள் சுமந்து வரும் பொருட்களைச் சென்னைக்குள் குறிப்பிட்ட விலாசத்தில் கொண்டு சேர்க்கிற தொழிலைப் பெரிய மற்றும் சிறிய வாகனங்கள் மூலம் எஸ் ஆர் வி.எஸ் செய்து வந்தது. இதில் சுமை தூக்கும் பணிக்குத் தினக்கூலி இரண்டு ரூபாய் கொடுத்துவந்தது
அரசு உருவாக்கியிருக்கிற தொழிலாளர் நலச்சட்டங்கள் எதுவும் இவர்களுக்கு பொருந்தாது. நோய்வாய்ப்பட்டால் சிகிச்சையும், குறைந்தபட்ச நட்ட ஈடும் இவர்களுக்கு கிடையாது. அதே சிம்சன் குரூப்பில் பணிபுரியும் நான் அதையெல்லாம் அனுபவித்து வருபவன். எனது சம்பளம் ரூபாய் 250. இதில் 200 சதுர அடி கொண்ட ஒட்டுக்குடித்தன வீட்டிற்குச் சரிபாதி வீட்டுவாடகையாகப் போய்விடும். மீதத்தை வைத்தே வாழவேண்டும் எனது தந்தை எனக்கு உதவினாலும் . அதன் சிரமத்தை நான் உணர்வேன்
எனவே இந்த குறைவான சம்பளத்தில் சுமைப்பணியாளர்களால் வாழ. எப்படி முடிகிறது என்பது எனக்குப் பிடிபடாத ஒன்றாக இருந்தது. அதோடு உழைப்பாளி மக்களைப்பற்றிய தவறான கருத்துக்கள் என் கண்களை மறைத்து வந்தன. அவர்களது முயற்சியின்மையே ஏழ்மைக்குக் காரணம் என்ற தவறான கருத்து என்னை வர்க்க பிரிவினைபற்றிய எதார்த்தங்களை உணரவிடவில்லை. அதாவது அவர்களது ஏழ்மைக்குக் காரணம் முதலாளித்துவ கட்டமைப்பே தவிற இவர்களது முயற்சியின்மை அல்ல என்பதை அன்று வரை நான் உணரவில்லை. குடிப்பழக்கம். அறியாமை மூடநம்பிக்கைகள் ஆரோக்கியமாக வாழ வருவாயை பயன்படுத்ததெறியாமை அடிமை புத்தி இவைகளால் தங்களைத் தாங்களே தண்டித்துக் கொள்பவர்கள் என்றே கருத்தே என்னை ஆட்டிப்படைத்திருந்தது.

வேலை நிறுத்தம் செய்து வாயில் கூட்டங்கள் காலை முதல் மாலை வரை நடந்த காலத்தில் அந்த சுமைப்பணியாளர்களோடு நெருக்கமாகப் பழக நேர்ந்தது. அந்த எளிய மக்களின் எளிய வாழ்க்கையை ஓரளவு அறிய முடிந்தது. அவர்கள் மது அருந்துபவர்களாக இருந்தாலும் உடலைக் கெடுக்கிற மாதிரி குடிப்பவர்கள் சிலரே இருந்தனர் அதாவது வாரத்திற்கு ஒரு நாள் பண்டிகை நாளில் குடிப்பவர்களாக இருந்தனர் . பார்சல்களை வீடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதால் சில தர்மவான்கள் டிப்ஸ் கொடுப்பர் அந்த சில்லறை அவர்களது பசி அடங்க அன்றாடம் உதவி விடுகிறது. அவர்களிடம் கேட்டதில் சராசரி ஐந்து ரூபாய் கிடைக்கு மென்றனர். 50 பைசாவிற்குமேல் யாரும் டிப்ஸ் கொடுப்பதில்லை. என்றனர் இருந்தாலும் நிர்வாகம் கொடுக்கிற சம்பளத்தைவிட கனிவாகக் கிடக்கிற காசு அதிகம்.
நிர்வாகம் கொடுக்கும் வாரச் சம்பளம் 12ரூபாய் குடும்ப செலவுக்குப் பயன்படும். இந்த தொழிலாளர்கள் அண்ணாசாலையைச் சுற்றி ஓடும் கூவம் ஆற்றுக்கரையில் குடிசைகளில் வசித்தனர் .அவர்களது தேவைகள் மிகவும் குறைவு எனவே அவர்களது கோரிக்கை வேலை நிரந்தரம் என்பதே முக்கியமாக இருந்தது. இவர்கள் அனைவருமே கிராமங்களிலில்லிருந்து சென்னைக்கு வந்தவர்களே.
கிராமப்புற மக்கள் பல காரணங்களால் சென்னை வருகின்றனர். வறுமை அதில் ஒரு காரணம் . விநோதம் என்னவெனில் கிராமத்தில் மண்குடிசைவாசிகளாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தோடு வலுவுள்ள மக்களாக வாழ்வது எளிது. ஏனெனில் ஆடு மாடு கோழி வளர்ப்பு மீன் பிடித்தல் விறகு பொறுக்குதல் வறட்டி ஏன் தேன் உட்பட இவையெல்லாம் பணச் செலவில்லாமல் பெறமுடியும் உப்பு எண்ணை போன்ற பொருட்களைப் பண்ட மாற்றியே பெறமுடியும். பணமிருந்தால் இன்னும் சிறப்பாக வாழமுடியுமென்று கருதியே பணம் சம்பாதிக்க நகர்ப்புறம் வருகின்றனர். அவ்வாறு வருகிறவர்களுக்கு முதலில் கிடைப்பது சுமை தூக்கும் பணி அல்லது ஹோட்டல்களில் பாத்திரம் கழுவுவது. உடல் வலு இருப்பதால் இந்த வேலை செய்வதற்குச் சிரமப்படமாட்டார்கள் என்பது மட்டுமல்ல கூச்சப்படமாட்டார்கள்.
குடியே குடியைக் கெடுக்கும் என்ற முழக்கம் எல்லை மீறிப் பேசப்படுவதால் ஏழைகளின் எதார்த்த வாழ்வை உணரமுடியாமல் போய்விடுவதை உணர்ந்தேன். சத்துள்ள உணவைப் பெறுகிற முறையில் வருமானமின்மையே நகர்ப் புற ஏழைகளின் பிரச்சினை என்பதை அன்று உணர்ந்தேன். இன்றும் புள்ளிவ்ரங்களை அலசினால் சத்தற்ற உணவே ஏழைகளின் வாழ்வின் எமன் என்பதை உணரமுடியும். தானியம் எண்ணை மாமிசம்,காய்கறி, பழங்கள் என்ற ஐந்து வகை உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட அளவு தினசரி சேர்க்கிற அளவிற்கு வருமானம் இருக்க வேண்டும் என்ற உண்மையை மறைக்க .குடி குடியைக் கெடுக்கும் என்ற பிரச்சாரம் சுரண்டும் வர்க்க அரசியலின் ஆயுதமாகிவிடுகிறது.

2020ம் ஆண்டிலும் உலக நாடுகளின் சராசரி குடி அளவை விட இந்தியாவின் குடி அளவு குறைவாக இருக்கிறது உலகளவில் தனி நபர் சராசரி வருடத்திற்கு 8.3 லிட்டர் மது அருந்துவதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியப் புள்ளிவிவர இலகா கொடுக்கிற புள்ளிவிவரப்படி (2011- 12) ஐந்து லிட்டர் மது அருந்துவதாக தெரிகிறது . உலக சுகாதார கழகம் அன்மையில் தரும் தகவல்படி மொடா குடியர்கள் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் உயர் வருமானம் உள்ளவர்களின் மது குடிப்பு பரவுவதால் குடிகாரர்களின் எண்ணிக்கை கூடுகிறது. உடல் ஆரோக்கியம் குறைவாக இருப்பதாலும் மதுவின் தரக்குறைவாலும் ஏழைகள் பாதிக்கப்படுகின்றனர் மதுவின் கெடுதல்களைப் பற்றிய தகவல்கள் பரவ அரசு முயற்சி செய்வதோடு ஏழைகளின் உணவு சத்துள்ளதாக அமைய வருவாயை உத்தரவாதம் செய்யவேண்டும் என்கிறது.
இதையே கம்யூனிஸ்ட் மொழியில் சொன்னால் உழைப்பைச் சந்தை சரக்காகக் கருதும் சுரண்டல் புத்தியோடு அரசு தொழிலாளர்களின் பிரச்சினையை அணுகக் கூடாது என்பதாகும்.
எஸ்.ஆர்.வி.எஸ் தினக்கூலி தொழிலாளர்கள் முதல் 10 நாள் வாயில் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் நாளாக நாளாக எண்ணிக்கை குறைந்தது இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாலும் நாடாளுமன்றத் தேர்தலில் குருமூர்த்தி காங்கிரஸ் வேட்பாளராக இருந்ததால் அண்ணாவிற்கு ஆதரவாக நாங்கள் பிரச்சாரம் செய்ததாலும் முதலமைச்சரானவுடன் எங்களைப் பாராட்டிய அண்ணா உதவுவதாகக் கூறியிருந்தார் அந்த வகையில் எஸ்.ஆர்.வி.எஸ தொழிலாளர்களின் வேலை பறிப்பு நீதிமன்ற விசாரணைக்கு அரசு அனுப்பியது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இப்படி நடப்பது அரிது. ஆனால் நீதிமன்றத்தில் சிம்சன் நிர்வாகம் வழக்கை வாய்தாக்களாக ஆக்கித் தள்ளித் தள்ளி 1970 வரை தீர்ப்பை வழங்கவில்லை. அந்த வழக்கு என்ன ஆயிற்று வேலை கிடைத்ததா அந்த தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பது தனி வரலாறு இதற்கிடையில் ஐ. என் டி யு சி நம்புவது சரியல்ல என்பதால் மாற்றுப் பாதை தேடலானேன். ஏன் சி.பி.ஐ அலுவலகம் போகாமல் சி.பி.எம் அலுவலகம் சென்று சிந்தனை சந்திக்கப் போனேன் என்பதற்கான காரணங்களை அடுத்த பதிவில் குறிப்பிடவிரும்புகிறேன்.
( தொடரும்)
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 6 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 7 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர்: சென்னையும், நானும் – 8 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 9 ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

