சென்ற பகுதியில் சோவியத் வெளியீடுகளே என் போன்றவர்களை கம்யூனிச இயக்கத்தில் இரண்டற கலக்கும் கிரியா ஊக்கிகளாக இருந்ததையும், எனது தொழிற் சங்க அனுபவம் மார்க்சீய இலக்கியத்தை புரிந்து கொள்ள உதவியதையும் குறிப்பிட்டிருந்தேன். சோவியத் புரட்சியைப்பற்றி, இன்றைய தலைமுறைக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை. அது வரலாற்று புத்தகங்களில் புதைபொருளாகி விட்டது. அறிவுலகமோ மார்க்சிய இலக்கியத்தை தொடமறுக்கும் தீண்டாமையை கடைப்பிடிக்கிறது. நான் கம்யூனிச இயக்கத்தில் அடியெடுத்து வைக்கிற நேரத்தில் நிலைமை வேறுமாதிரி இருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும், குருஷேவ் கும்பலுக்கும் இடையே நடந்த சித்தாந்த சர்ச்சைகள் பல இந்திய கம்யூனிஸ்ட் முன்னோடிகளை திகைக்க செய்திருந்தது. பூர்ஷுவா ஊடகங்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அழிவிற்கு இந்த சர்ச்சைகள் கட்டியம் கூறுவதாக எழுதி மகிழ்ந்தன.
கம்யூனிச இயக்கத்தின் வரலாறு, மார்க்சிச கோட்பாடு உருவாகும் முறை ஆகியவை பற்றிய தெளிவின்மை, அத்தோடு அரசின் அடக்குமுறை மற்றும் பாட்டாளி மக்களின் வர்க்க விழிப்புணர்வு போதாமை இவைகளும் சேர்ந்து முன்னோடிகளை தயங்க வைத்தது. சில பிரபல கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வரலாற்றில் இது ஒன்றும் புதியதல்ல! மார்க்சிசத்தை உயர்த்திய பெர்ன்ஸ்டீனும், கவுட்ஸ்கியும்தான் ஜெர்மன் மக்களை புரட்சிகரப் பாதையிலிருந்து நழுவ விட்டனர். தனிநபர் வழிபாடு கூடாது என்று எழுதிய ஸ்டாலினுக்கு தனிநபர் துதிபோதை தலைக்கேறி நின்றது. அதை எதிர்த்த குருஷேவ் ஆயுதப் போட்டியில் இறங்கி, சோசலிச நிர்மாணத்தை கோட்டைவிட்டார். ஆனால் இதேகாலத்தில் வியட்நாம் யுத்தம் சோசலிச உணர்வை தட்டியெழுப்புவதாக இருந்தது. அன்று வியட்நாமும், காஸ்ட்ரோவும் சேகுவேராவும், மாவோவின் மேற்கோள்களும் உலக நாடுகளின் இளைஞர்கள் மனதில் சோசலிச புரட்சிக்கான உணர்வை விதைத்தன. மறுபக்கம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ”மாவோ வழிபாடு” குழப்பத்தையும் விதைத்தது.
இந்த சர்ச்சைகளும், தன்னெழுச்சியும், குழப்பங்களும், பின்னடைவுகளும், வழிபாடுகளும் புதியதல்ல. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு அதிலும் மார்க்ஸ்-எங்கல்ஸின் எழுத்துக்கள்,சோவியத் புரட்சியின் படிப்பனைகள் பற்றி லெனின் எழுதியவை போன்றவற்றை படித்து புரிந்தவர்கள் அசரமாட்டார்கள். தவிர முதலாளித்துவ கட்டத்தில் சோசலிசத்தை அடைய சரியான வழியை ஒரு சமூகத்தின் நவீன பாட்டாளி வர்க்கம் தேர்வு செய்கிற வரையில் இந்த போக்குள் நீடிக்கும் என்பதையும் உணர்ந்து கொள்வர். மேலும் எல்லா அறிவியலும் அப்படித்தான் வளர்கிறது என்பதையும் அவர்கள் அறிவர்.
அக்டோபர் புரட்சியின் படிப்பினைகளும், குழந்தைத்தனமான கம்யூனிசம் பற்றி லெனின் எழுதியவைகளும் சித்தாந்த போரில் உறுதி கொண்டு பங்கெடுக்க வேண்டுமேயொழிய ஓடலாகாது என்பதை எனக்கு உணர்த்தியது. சிந்தன், பரமேஸ்வரன், ஹரிபட் போன்றோடுனா தொடர்பு, உண்மை எதுவென்று தேடவேண்டுமே தவிர இதுவே உண்மை என்று ஒன்றை பிடித்து தொங்கக் கூடாது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது. இதை எழுதுகிற பொழுது என்னை அறியாமலே வரலாற்றுப் புத்தகங்களில் புதைக்கப்பட்டிருக்கும் அக்டோபர் புரட்சி பற்றிய சில குறிப்புகள் என்மனதிலே ஓடின.
ஏகாதிபத்தியத்தின் நுரையீரல்களாக இந்தியாவும், சீனாவும் இருந்ததால் மார்க்ஸ்-எங்கெல்ஸைப்போல லெனினும் அக்கறை செலுத்தினார். அன்னாளில் 1903லிருந்து 1909 வரை லெனின் லண்டனிலிருந்து செயல்பட்டு வந்தார். 1905ல் இந்திய புரட்சியாளர்களில் ஒருவராக இருந்த ஷியாம்ஜி கிருஷ்ணவர்மா என்பவர் லண்டனில் ஒருவீடு வாங்கி இந்தியா ஹவுஸ் என பெயருமிட்டு இந்திய மாணவர்களுக்கான விடுதியாக நடத்தினார். இது மாணவர் விடுதியாக இருந்தாலும், இந்திய விடுதலைக்கு போராடும் புரட்சிக்காரர்கள் கூடுமிடமாகவும் இருந்தது. பிறநாடுகளின் புரட்சியாளர்களும் இங்கு வருவதுண்டு. அந்தவகையில் லெனினும் இங்கு வந்துபோவது உண்டு. 1909ம் ஆண்டு சவர்க்காரை லெனின் சந்தித்து பேசியுள்ளார் என்பதை சவர்க்கார் பற்றிய வலைத்தளம் கூறுகிறது. லெனினது வழிமுறையே சரியானது என்ற கருத்து சவர்க்காருக்கு இருந்தது என்பதை அவரது எழுத்துக்களே காட்டும். அதே சவர்க்கார்தான் பின்னாளில் இந்துத்வா அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்தினார். மஹாபாரதம் போதித்த அறமற்ற அரசியல்வழியை கட்டியமைத்தார்.
சென்னையைத் தாக்கிய எம்டன்
1917ல் முதல் உலகயுத்தம் சோவியத் புரட்சியால் முடிவிற்கு வந்தது என்று சொல்வதைவிட ஐரோப்பிய அமெரிக்க தொழிலாளர்கள் கட்டியமைத்த இரண்டாம் அகிலம் – அது சித்தாந்தரீதியில் போர்க்களமாக இருந்தாலும், யுத்த எதிர்புணர்வை விதைப்பதில் அகிலம் வெற்றி பெற்றது என்றே சொல்லவேண்டும். இந்த எதிர்ப்புணர்வு ஐரோப்பிய நாடுகளின் ராணுவத்தினரையும் தொற்றிக் கொண்டது. அத்தகைய எதிர்ப்புணர்வு தொற்றாத ராணுவமாக ராஜவிசுவாசத்துடன் இந்திய ராணுவம் மட்டுமே இருந்தது. இதனை அறிந்தே பிரிட்டீஷ் அரசு 1.5 லட்சம் இந்திய ராணுவ வீரர்களை போரின் மேற்கு முனையாக இருந்த பிரான்ஸ் எல்லையில் நிறுத்தி வெற்றி கண்டது. அறுபதாயிரம் இளம் இந்திய ராணுவ வீரர்கள் பிரிட்டீஷ் மன்னர்பிரானின் மகுடத்தைக்காக்க தங்கள் உயிரை ஈந்தனர்.
அன்றைய தேதிகளில் சென்னை எப்படி இருந்தது என்பதை சில ஆவணங்கள் காட்டுகின்றன. எம்டன் என்ற ஜெர்மன் ராணுவ கப்பல் சென்னை துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோலிய எரிபொருளை குண்டுவீசி தீக்கிரையாக்கி தப்பிச் சென்றது. சென்னையிலிருந்த பணக்காரர்கள் சென்னையைவிட்டே ஓடினர். சென்னை நகர உழைப்பாளி மக்களே ஜெர்மன் ராணுவம் நுழைந்தால் விரட்டியடிக்க தயாராய் இருந்தனர். அந்த சென்னை உழைப்பாளி மக்களை நாம் நினைவு கூறுவோமாக.
அடிமை புத்தியை புதைத்த பீட்டர்லூ படுகொலை
சோவியத் உணர்வின் வேர்களான மகத்தான சோவியத் புரட்சிக்கு வரலாற்று சக்தியாக இருந்தது இங்கிலாந்து நாட்டு தொழிற் புரட்சியாகும். இது நவீன பாட்டாளி வர்க்கத்தை தோற்றுவித்த புரட்சியுமாகும்.
இங்கிலாந்தை தொழிற் புரட்சிக்கு வித்திட்ட நாடு என்று வரலாறு கூறும். பொருளுற்பத்தியில் இயந்திர சக்தியை புகுத்தியதால்தான் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஈவு இரக்கமற்ற பணப்பட்டுவடா முறையை திணித்து, பணக்காரர்கள் தங்கம் வெள்ளி வடிவில் சொத்து குவித்த முறையே தொழிற் புரட்சி எனப்படுகிறது.
16, ஆகஸ்டு 1819. இங்கிலாந்து நாட்டு நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த மான்செஸ்டர் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டனர். அடர்ந்த காட்டில் அசையாமல் நிற்கும் மரங்களாய் கைகட்டி நின்றனர். அவர்களது கண்கள் துளிக்கூட பயமின்றி உறுதியை வெளிப்படுத்தியது. எப்படைவரினும், அசையோம், மிரட்டலுக்கு அஞ்சோம் என்று அந்த கண்கள் அறிவுறுத்தின. வேலை நிறுத்தத்தை மேற்கொண்டு நிராயுதபாணிகளாக நின்ற அவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்தனர். பிரபுக்கள் மட்டுமே கொண்ட நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதித்துவம் கேட்டனர். அன்றைய நாடாளுமன்றம் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. அன்று இங்கிலாந்தை ஆண்ட மன்னன் குதிரைப்படையையும், மக்களை வெட்டி சாய்க்கும் கொடூரத்தால் டெவில்ஸ் ஓன் ஆர்மி (சாத்தானின் சொந்த படை) என்று பெயரெடுத்த கலாட்படையையும் ஏவி நிராயுதபாணியாக நின்றவர்களை விரட்டி, கொன்று குவித்தான். (இப்படைதான் 1857ல் இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தை நசுக்கியது ) திடலில் ரத்த ஆறு ஓடியது. அந்த தாக்குதலில் எவ்வளவு பேர் செத்தார்கள், எவ்வளவு பேர் முடமானார்கள் என்ற கணக்கு இன்று வரை சர்ச்சையில் உள்ளது. எதையும் எளிதில் மறந்துவிடும் மக்களுக்கு ஒரு கவிதையோ, ஓவியமோ இருக்குமானால் அந்த நினைவுகள் அழியாது தொடரும். அத்தகைய கவிதைகளும், ஓவியங்களும் மக்களின் உணர்வுகளை மேன்மைப்படுத்திவிடும்.
மகாகவி ஷெல்லியின் எழுச்சி கீதம்
பீட்டர்லூ படுகொலை இங்கிலாந்து நாட்டு தொழிலாளர்களின் மனதை விட்டு அகலாமல் போனதற்கு மகாகவி ஷெல்லி எழுதிய அரஜகத்தின் முக மூடி என்ற அரசியல் நெடுங்கவிதையே ஆகும்.
ஷெல்லியின் மாஸ்க் ஆஃப் அனார்க்கி என்ற கவிதை வரிகளில் சிலவரிகள் தமிழில்.
(கவித்துவம் எனும் ஞானதிருஷ்டியால் (Vision of poecy) ஷெல்லி பார்த்ததாக கவிதை தொடங்குகிறது)
அரசன் என்ற முகமூடி அணிந்தது அராஜகம்!
செங்கோலுடன் ராஜமகுடம் தரித்தது!
-அதன் புருவங்களில் “நான் கடவுள், அரசன் , சட்டம்”
என்ற எழுத்துக்கள் வரையப்பட்டிருந்தன.
கூலிக்கு அமர்த்திய கொலைகாரர்கள் “நீயே கடவுள், நீயே சட்டம், நீயே அரசன் ”என்ற துதித்தனர்.
-ஓ பலவானே! உன் வருகைக்கு காத்திருக்கும் மெலிந்தோர் நாங்கள்,
எங்களது பணப்பை காலி, எங்களது வாள்கள் குளிரில்
-எங்களுக்கு புகழைத் தாருங்கள்! குருதி தாருங்கள்! தங்கம்
தாருங்கள்!
வக்கீல்கள், பாதிரிமார்கள், ஒரு பல பட்டரை கூட்டம்
புருவங்கள் தரையைத் தொட, குனிந்தன.
நீயே சட்டம், நீயே கடவுள் என்று முனகின.
பிறகு எழுந்து உரத்த குரலில்
அராஜகமே நீயே அரசன் நீயே கடவுள், நீயே பிரபு என்று சேர்ந்து பாடின.
உனக்கு படிகிறோம், உனது,பெயர்புனிதமாகட்டும் என்றன-
ஓ இங்கிலீஷ் மனிதா இழப்பதற்கு எதுவுமில்லாதவனே
இது அடிமைத்தனம் என்று உணர்,
—அறிவியல், கவிதை, சிந்தனை இம்மூன்றும்
உனது கைவிளக்கு என்று உணர்
|
—-எது சுதந்திரம்? நீ அடிமைத்தனம் அறிவாய்-
அது கொடுமையாளனுக்கு பயன்பட
ஒரு கூண்டில் உனது உறுப்புக்களை
பேணுவதற்குரிய கூலியைப் பெற உழைப்பது
அது அவர்களுக்காக வாழ்வது நீ விரும்பியோ விரும்பாமலோ
அவர்கள் பாதுகாப்பிற்கும் செழிப்பிற்கும்
குனிந்து நெய்தல், உழவு, வாள் மண்வெட்டி செய்திடுதல்
அது உனது குழந்தைகளை பலகீனப்படுத்தி
தாய்களை பட்டமரம்போலாக்கி குளிர்காலபுயலில்
செத்து மடியவிடுவதாகும்.
அது பணக்காரன் தனது காலடியில் கண் பார்வையில்
கிடக்கும் கொழுத்த நாய்களுக்கு
வீசுகிற உணவிற்காக பசித்து கிடப்பதாகும்,.
அது உனது உழைப்பிலிருந்து ஆயிரம் மடங்கு ஆவி வடிவில்
முந்தியகொடுமையாளர்களை விட
தங்கத்தை எடுக்க அனுமதிப்பதாகும்.
உன்கையிலிருக்கும் தாள் பணம், ,
பூமியில் உனக்குரியதை காட்டுகிற போலி ஆவணம்
அது உணர்வால் அடிமை ஆவது,
உனது உறுதி உனது கட்டுப்பாட்டில் இல்லாமல்போவது
மற்றவர்கள் கட்டுப்பாட்டிற்கு விடுவது,—–
நாட்டுக்கு நேர்ந்தஅந்த படுகொலை எழுச்சிபோல்
குமுற வைக்கும் தூரத்தே வெடிக்கப் போகும்
எரிமலையை கட்டியம் கூறும்
இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அடக்கு முறையின் அழிவை
இடி முழக்கமாக்க ஒவ்வொரு இதயத்திலும் மூளையிலும் ரிங்காரம் செய்யும்.
தூங்கும் போது விழுந்த பனித்துளியை
உதறியெழும் சிங்கம் போல்
வெல்ல முடியாத எண்ணிக்கையில் சிலிர்த்தெழுங்கள்
நீங்கள் பலர், அவர்கள் சிலர்.
(தொடரும்)
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 6 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 7 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர்: சென்னையும், நானும் – 8 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 9 ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 15ஐ வாசிக்க
தொடர் 16ஐ வாசிக்க
தொடர் 17ஐ வாசிக்க
தொடர் 18ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 18 (மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன்) | வே .மீனாட்சிசுந்தரம்