குழந்தைகளே தங்களுக்கும் தங்கள் வயதையொத்தவர்களுக்கும் கதைகள் எழுதினால் எப்படி இருக்கும்?
பெரியவர்கள் உருவாக்க முடியாத கற்பனைக் காட்சிகள்… கதாபாத்திரங்களின் பெயர்கள்… கதை மையங்கள்… கதை நிகழும் இடங்கள் என பல்வேறு வியப்புகள் கிடைக்கும்.
அப்படித்தான் திருச்சி – சமயபுரம் எஸ்.ஆர்.வி பள்ளி மாணவர்கள் எழுதிய கதைகளைப் படிக்கையில் கிடைத்தது. விதவிதமான பாடுபொருட்கள். அக்கதைகளைத் தொகுக்கும்போது அவற்றிலிருந்து இருந்து நான் பெற்றவை ஏராளம்.
கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியோடு கலை சார்ந்த செயல்திட்டங்களில் என் ஓய்வு நேரங்களை அளிக்கிறேன். அதற்கான வாய்ப்பினை வழங்கியவர் எழுத்தாளர்.ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.
ஆர்.கே.நாராயணன் ரீடர்ஸ் கிளப் எனும் குழுவில் குறிப்பிட்ட ஐம்பது மாணவர்களோடு தொடர்ந்து உரையாடினேன். கதை என்பது என்ன… கதையின் பாடுபொருள்களை எங்கிருந்து பெறுவது… கதையில் இடம்பெற வேண்டிய / இடம் பெற கூடாதவை… ஒரு காட்சியை எப்படி விவரிப்பது…. மொழி நடை எப்படி அமையலாம்… இப்படி ஏராளம் பேசினோம்.
ஏதேனும் ஒரு கதையைப் படித்து அதன் பலம் , பலவீனங்களை அலசினோம். எழுதப்பட்ட ஒரு கதையைச் சொல்லிப் பார்த்தோம். பலமுறை கேட்டு சலித்த கதையை எழுதிப் பார்த்தோம். இப்படி ஏராளமான பயிற்சிகள். உரையாடல்கள்.
அதன்விளைவாக மாணவர்கள் தொடர்ந்து கதைகள் எழுதினார்கள். அவற்றில் மிகப்பிடித்த 30 கதைகளை ‘மாயமரம்’ எனும் தலைப்பில் தொகுத்து நூலாக்கினோம். இந்தத் தொடர்பயிற்சியை தொடர்ந்து ஊக்குவித்து ஆதரவளித்தவர் பள்ளியின் சி.இ.ஓ திரு. துளசிதாசன் அவர்கள்.
அதை கடந்த வாரம் அப்பள்ளியில் 20 வது ஆண்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. நீதியரசர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், என மாணவர்களுக்கு யாரையெல்லாம் முன்னுதாரணமாகக் காட்ட வேண்டுமோ அவர்களே் சிறப்பு விருந்தினராக வந்திருந்த கொண்டாட்டத்தில் மாயமரம் நூலை வெளியிட்டார்கள். நீதியரசர் மகாதேவன் அவர்கள் வெளியிட எழுத்தாளர்கள் பத்மாவதியும், ச.தமிழ்ச்செல்வனும் பாஸ்கர் சக்தியும் பெற்றுக்கொண்டனர்.
நீதியரசர், திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) உள்ளிட்டோர் நிறைந்திருந்த மேடையில் கதை எழுதிய 30 பேரும் கதாசிரியர்களாக தங்கள் நூலோடு நின்ற பெருமிதத் தருணம். நெறியாளரான என்னையும் அங்கு கெளரவப்படுத்தினர்.
கதைகள் குழந்தைகளின் கற்பனையாற்றலை மெருகேற்றுவதோடு கற்றலையும் மேம்பட உதவும் என்பதில் அப்பள்ளியின் நிர்வாகம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது. அதுவே, இம்மாபெரும் பணிக்கான அடித்தளம். நண்பர் ஆனந்தகுமரேசன் திரைத் தொடர்பாகவும் சூழலியாளர் முகமது அலி இயற்கைத் தொடர்பாகவும் இன்னும் பலர் தங்கள் துறை சார்ந்தவர்களும் மாணவர்களோடு உரையாடியும் பயிற்சி அளித்தும் வருகின்றனர். இப்பணிகள் அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.
– விஷ்ணுபுரம் சரவணன்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
