சிறுகதை : சின்னுவும் கதைப்பாட்டியும்
மலையாளத்தில் – அஷீதா
தமிழில் – உதயசங்கர்
சின்னு வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். மாங்காய் வியாபாரி அங்கே வந்து ” மாம்பழம்.. மாம்பழம் ” என்று கத்தினார்.. தலையில் கூடையை வைத்திருந்தார். அதைப் பார்த்த சின்னு விளையாட்டை நிறுத்தினாள். பிறகு,
“ மாமா மாமா .. கூடையில் என்ன இருக்கு? “
“ பழுத்த மாம்பழம்.. காசுக்கு இரண்டு பழுத்த மாம்பழம்..”
என்று மம்மது மாமா பதில் சொன்னார். சின்னக்குழந்தைகள் கையில் காசு எப்படியிருக்கும்? அதனால் சின்னுவுடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் தலை குனிந்து நின்றார்கள். அப்போது மம்மது மாமா மறுபடியும் பாடினார்,
“ வாங்கிக்கோ.. குழந்தை.. வாங்கிக்கோ குழந்தை.. பசிக்கும் போது சாப்பிடலாமே.. வாங்கிக்கோ குழந்தை..”
சின்னு கையை நீட்டினாள். மம்மது மாமா ஒரு குட்டி மாம்பழத்தைக் கொடுத்தார். அதைப் பார்த்த கமலாக்காக்கா பறந்து வந்தது. மாம்பழத்தைக் கொத்திக் கொண்டு பறந்து போய் விட்டது. சின்னு பின்னால் ஓடினாள். சின்னுவின் பின்னால் நாய்க்குட்டி ஓடியது. நாய்க்குட்டியின் பின்னால் பூனைக்குட்டியும் ஓடியது. கமலாக்காக்கா மரக்கிளையில் உட்கார்ந்தது.
சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. முன்னொரு காலத்தில் கமலாக்காக்காவை நீலாண்டன் குள்ளநரி ஏமாற்றிய கதையை சின்னுவின் காதில் சொன்னது பூனைக்குட்டி.
சின்னு காக்காவிடம் கேட்டாள்,
“ காக்கா காக்கா.. உன்னுடைய கூடு எங்கே? “
கமலாக்காக்கா பதில் சொல்லவில்லை. முன்பு ஒரு குள்ளநரி ஏமாற்றியதை நினைத்துப் பார்த்தது. இனி ஒருத்தரும் தன்னை ஏமாற்ற விடக்கூடாது என்று நினைத்தது.
. அப்போது நாய்க்குட்டி கேட்டது,
“ காக்கா கூட்டில் ஒரு குஞ்சு இருக்கிறது இல்லையா? “
அதைக் கேட்டதும் கமலாக்காக்காவின் கண்கள் நிறைந்து விட்டன. வெகு நேரமாகி விட்டது. இன்னமும் குஞ்சுக்குத் தீனி கொண்டு போய் கொடுக்கவில்லை. இந்த மூன்று பேரும் போய்விட்டால் மாம்பழத்தைக் கொண்டு போய் கொடுக்கலாம். அப்போது பூனை கேட்டது,
“ காக்காக்குஞ்சுக்குத் தீனி கொடுக்கவில்லை என்றால் பசித்து அழும் இல்லையா?”
“ அதைக் கேட்ட கமலாக்காக்காவுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. அது வாயைத் திறந்து கா..கா..கா.. கா.. என்று கரைந்தது.
மாம்பழம் கீழே விழுந்தது. அதை சின்னு தன்னுடைய பாவாடையில் ஏந்திக் கொண்டாள். பிறகு நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் சின்னுவும் ஆடிக் கொண்டே கதைப்பாட்டியிடம் போனார்கள். கதைப்பாட்டி மாம்பழத்தைத் துண்டு போட்டு கொடுத்தாள். எல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு, சின்னு தன் கண்களை விரித்து,
“ காக்கா பாவம் இல்லையா? “
கண்களைத் துடைத்துக் கொண்டே, “ ஆமாம் பாவம்.. தான்..” என்றது பூனைக்குட்டி.
உதடுகளை நக்கித் துடைத்துக் கொண்டே நாய்க்குட்டியும்,
“ ஆமாம் ஆமாம்.. பாவாம் தான் “ என்றது.
நன்றி
பறயாம் நமுக்கு கதகள்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

