“கேட்டி வில்காக்ஸ் மேற்கிலிருந்து வந்த செம்பரிதி” – பெண் கல்வி மேன்மையடைய உழைத்தவரின் வரலாறு
அமெரிக்க நாட்டில் பிறந்து பட்டப் படிப்பை முடித்ததோடு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சியும் பெற்ற கேட்டி வில்காக்ஸ் ஒரு சிறந்த கல்வியாளர் ஆவார்.
1915 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வந்ததோடு மதுரையில் உள்ள கேப்ரன் ஹால் பெண்கள் பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடங்கினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை படிக்க அனுப்புவதற்கு பெற்றோர் தயங்கிய சூழ்நிலையில் மாலை வேளையில் அருகில் உள்ள சேரிப் பகுதிகளுக்கு சென்று பெண் குழந்தைகளை படிக்க தூண்டினார். மதுரையின் வடகரையில் நாய்ஸ் மெட்ரிக் பள்ளியையும், ஓசிபிஎம் உயர்நிலைப் பள்ளியையும் 1937 ஆம் ஆண்டு தொடங்கினார்.
தமிழகத்தில் பெண்களுக்கான கல்லூரி பாளையங்கோட்டை திருச்சி சென்னை போன்ற நகர்களில் மட்டும்தான் இருந்தது. மதுரையிலும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படிக்கும் மாணவிகளுக்காக கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைத்தார். இன்றைக்கு மதுரையின் மையப்பகுதியில் உள்ள மதுரா கோட்ஸ் (ஹார்வி மில்) இயக்குனர் ஜேம்ஸ் டோக்கை திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவர் டோக் உதவியோடு பல்வேறு பகுதிகளில் நிதி உதவி பெற்று 1948 ஆம் ஆண்டு மதுரையின் முதல் பெண்கள் கல்லூரி டோக் பெருமாட்டி கல்லூரி தொடங்கப்பட்டது. 81 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இக்கல்லூரி இன்று 3000 பேருக்கு மேல் படிக்கக்கூடிய கல்லூரியாக உருவாகியுள்ளது. இதன் மூலம் மதுரையில் பெண்கல்வி தழைத்தோங்க இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியதாக அமைந்தது. தனது வாழ்நாளின் பெரும் பகுதியை மதுரையில் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காகச் செலவிட்டார்.
ஒரு அயல்நாட்டவராக இருந்தாலும், தமிழ் மண்ணோடும் இங்கிருக்கும் பெண்களின் கல்வித் தேவைகளோடும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் தங்கி, பல தடைகளைத் தாண்டி பெண்கல்விக்கு வித்திட்ட இவரை, மதுரையின் பெண் கல்வியின் முன்னோடியாக இன்றும் போற்றுகின்றனர். இந்த நூலில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க அரிய புகைப்படங்கள் இடம் பற்றி இருப்பது மிகுந்த கவனம் பெறுகிறது.
மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் எழுத்தாளர் ‘சித்திரவீதிக்காரன்’ கேட்டி வில்காக்ஸ் அம்மையார் குறித்த வரலாற்று நூலை தமிழ் மக்களுக்கு படைத்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.
இந்த நூல் கேட்டி வில்காக்ஸ் அம்மையாரின் வாழ்வையும், அவர் மதுரைக்கு வந்த விதம், பெண்கல்விக்காக அவர் சந்தித்த சவால்கள் மற்றும் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த பயணத்தையும் ஆவணப்படுத்துகிறது. மதுரையின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு ஆளுமையான கேட்டி வில்காக்ஸின் பங்களிப்பை, புதிய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் நோக்கில் சித்திரவீதிக்காரன் இந்த நூலை எழுதியுள்ளார்.
மதுரையின் வரலாற்றிலும், பெண்கல்விச் செயல்பாடுகளிலும் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய ஆவணமாக இந்த நூல் உள்ளது என்றால் மிகையல்ல.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கேட்டி வில்காக்ஸ் மேற்கிலிருந்து வந்த செம்பரிதி |
| ஆசிரியர்: | சித்திரவீதிக்காரன் |
| வெளியீடு: | மதுரா பதிப்பகம் மதுரை-626006 தொடர்பு எண்: 9047117841 |
| விலை: | ₹.35 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 MJ. பிரபாகர் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

