வெள்ளிக்கிழமையன்று கார்கிலில் கடையடைப்புக்கு ஒரு மாணவர் அமைப்பு அறைகூவல் விடுத்திருந்த நிலையில் தெருக்கள் வெறிச்சோடிக்கிடக்கும் காட்சி. படம்: தி இந்து தில்லிப் பதிப்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துடனிருந்த லடாக் பகுதி, தனியே யூனியன் பிரதேசமாக மாறி 11 மாதங்கள் கடந்தபின்னரும், தற்காலிக தங்குமிடங்களில் மிகக் குறைந்த ஊழியர்களுடன் யூனியன் பிரதேச நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிதாக அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் நியமனம் மேற்கொள்ளப்படவில்லை, முறையான வங்கி இல்லை, தலைநகர் எது என்பதிலும் தகராறுடன் நிலைமைகள் நீடிக்கிறது.
சுமார் 9,800 அடி உயரத்தில் உள்ள இப்பீடபூமியில் தேசிய சுகாதார பணிக்குழு (National Health Mission) சார்பில் மருத்துவர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மாதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதித் தொகுப்புடன் மருத்துவர்கள் நியமனத்திற்காக விளம்பரம் செய்யப்பட்டு, நாட்டில் குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் விண்ணப்பித்திருந்தவர்களில் 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். எனினும் இவர்களில் இதுவரை 15 பேர் மட்டுமே பணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
புதிய பணிநியமனங்கள் ஸ்தம்பித்திருக்கிறது
ஜம்மு.காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருப்பதுபோலவே, லடாக் யூனியன் பிரதேசத்திற்கும் பொதுத் தேர்வு ஆணையம் (Public Service Commission) தனியே அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, யூனியன் பொதுத் தேர்வு ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது. இதுவரையிலும் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி ஒருவர்கூட பணிநியமனம் செய்யப்படவில்லை.
லடாக், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபின்னர், ஊழியர் பணியிடங்கள் காலியாக இருப்பது சுமார் ஐயாயிரத்தை நெருங்கி இருக்கிறது.
“லடாக்கிற்கு என்று தனியே பொதுத் தேர்வு ஆணையம் அவசியத் தேவையாகும். அப்போதுதான் இங்கேயுள்ளவர்கள் பணியில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்,” என்று கார்கிலில் உள்ள லடாக் சுயாட்சி மலை வளர்ச்சிக் கவுன்சில், தலைமை நிர்வாகக் கவுன்சிலர் (Chief Executive Councillor), ஃபெரோஷ் கான், கூறினார்.
ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஊழியர்கள்
கடந்த வாரம், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்திலிருந்து, மாற்றுப்பணி (on deputation) அடிப்படையில், 118 அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் லடாக்கில் மிகவும் குறைவான ஊழியர்களுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கல்வித்துறை, பாசனத் துறை, வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, நீர்ப்பாசனத் துறை, உயர் கல்வித்துறை ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநரின் ஆலோசகர் உமாங் நருலா கடிதம் எழுதியதை அடுத்து இம்மாற்றல்கள் நடந்துள்ளன.
அந்தக் கடிதத்தில், “லடாக் யூனியன் பிரதேசம், பல்வேறு மட்டங்களிலும் ஊழியர் பற்றாக்குறையின் காரணமாக கடுமையான முறையில் பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கின்றன. சில இயக்ககங்களும், துறைகளும் தலைவர்கள் இல்லாமல் இருந்து வருகின்றன. இது லடாக்கில் அரசுப் பணிகளை செயல்படுத்துவதில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகாரபூர்வ பதிவுருக்களின்படி, பல இயக்குநர்கள் ஐந்து துறைகளுக்குப் பொறுப்பு வகித்து வருகிறார்கள். பேரிடர் மேலாண்மை போன்று பல துறைகள் வெறுமனே தாள்களில்தான் காணப்படுகின்றன.
லடாக் யூனியன் பிரதேசத்தை நிர்வகிப்பதற்கு, ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஊழியர்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்பு இருந்து வருகிறது.
‘லடாக்கில் படித்த, பயிற்சிபெற்ற இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து, நியமனம் செய்வதற்குப் பதிலாக, அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலிருந்து ஆட்களை மாற்றுப்பணியில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்,” என்று சஜாத் கார்கிலி கூறினார். இவர் 2019 மக்களவைத் தேர்தலின்போது சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டவர்.
வங்கியின் செயல்பாடுகளிலும் பிரச்சனை
சென்ற ஆண்டு அக்டோபரில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டபின்னர், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே வங்கிகளிலிருந்த மின்விசிறிகள், சோபா செட்டுகள் முதலானவற்றைப் பிரித்துக் கொள்வதிலும்கூட சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் வங்கி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அதிகாரபூர்வ வங்கியாகத் தொடரும் அதே சமயத்தில், புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் குடியேற்றச்சட்டம் வெளியார்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள தடை விதிக்கிறது. வெளியார் என்ற வரையறையில் இப்போது லடாக் பகுதியைச் சேர்ந்தவர்களும் வந்துவிடுகிறார்கள். இப்போதும் லடாக் பகுதியில் ஜம்மு-காஷ்மீர் வங்கியின் சார்பில் சுமார் இரண்டு டஜன் கிளைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை லே மற்றும் கார்கில் போன்று மிகவும் உயரத்தில் உள்ள இடங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர் வங்கி சமீபத்தில் பணியிடங்கள் நிரப்புவதற்காக வெளியிட்டிருந்த விளம்பரத்தில் லடாக் பகுதியினர் விண்ணப்பித்திட தடை விதித்திருக்கிறது. எனவே, இப்போது லடாக் பகுதியிலும், இதேபோன்று லடாக் குடியேற்றச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
(கட்டுரையாளர், தி இந்து நாளிதழில், ஜம்மு-காஷ்மீர் பகுதி இதழாளர்)
(நன்றி: TheHindu, 26.07.2020, New Delhi Edition)