மறைந்து விடுமோ!!? மகேந்திர கிரி இயற்கை வளம்!!….
– முனைவர் பா. ராம் மனோகர்
இயற்கை, வன வளம், காடுகள், வன விலங்குகள் என்பது இந்திய நாட்டில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நிலை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு நாட்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பெற நிகழ்ச்சிகள், போட்டிகள், பேரணிகள், போன்றவற்றை அரசு துறைகள் மற்றும் அரசு சாராத நிறுவனங்கள், பள்ளி கல்லூரி ஆகியவை தொடர்ந்து நன்கு நடத்திவருகின்றன..
ஆனால், இவையெல்லாம் வெற்று சடங்குகள் போல் ஆகி விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. ஆம். ஒரு புறம் நாட்டின் வளர்ச்சி என்ற நோக்கத்தில் கட்டுமானங்கள், மனித கேளிக்கை பொழுது போக்கு பூங்காக்கள், சூழல் சுற்றுலா என்ற நிலையில் இயற்கை வளங்களை மாற்றம் செய்து, உள்ளூர், மாவட்ட, மாநில நிர்வாக வருவாய்க்கு ஒரு வழியாக நோக்கம் கொண்டு திட்டங்கள் உருவாக்கி வரும் நிலையும் இயற்கை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வேதனை, வருத்தத்தினை அளித்து வருகின்றது என்பது மிகையில்லை.
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரம் (அக்டோபர் 2 முதல் 8 வரை) சிறப்பாக அனுசரித்து வரும் இந்த வேளையில் நாம் ஒரு அழகிய இயற்கை வளம் நிறைந்த ஒரு இந்திய மாநிலமாக விளங்குகின்ற ஒடிசா வின் கஜபதி மாவட்டத்தில் அமைந்துள்ள மகேந்திர கிரி மலை பாதிக்கப்படும் நிலை பற்றி அறிந்து கொள்வோம். ஆம், இந்த இயற்கை வளம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. இப்பகுதியில் சவோரா, கொங்கோ என்ற இரு வேறு பழங்குடி இனத்தவர் வசித்து வருகின்றனர். 1348 தாவர சிற்றினங்களும், 400 க்கு மேற்பட்ட விலங்கு, பறவை சிற்றினங்கள் இங்கு உள்ளன.

இந்திய யானை, வங்காள புலி, சிறுத்தை, காட்டு பன்றி, வரி கழுதை புலி ஆகிய வன விலங்குகள், ஒடிசா மாநிலத்தின் இரண்டாம் உயர மலைப்பகுதி யான மகேந்திர கிரி காடுகளில் வசிக்கின்றன. மேலும் வெள்ளை கண் தேன் பருந்து, சாம்பல் வண்ண தலை மீன் கழுகு, சிறிய மீன் கழுகு, பனை காடை, மயில், காட்டு கோழி, சாம்பல் கொம்பு மூக்கன் ஆகிய அரிய பறவைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.
ஏராளமான மூலிகைகள், ஆர்ச்சிட் வகை மலர் செடிகளும் இங்கு இருப்பதன் மூலம் உண்மையில் ஒடிசா மாநில இயற்கை வளத்தின் அரிய நிலையினை நாம் உணர இயலும். 1980 ஆம் ஆண்டு இறுதியில் இந்திய வன விலங்கு கல்வி ஆய்வு மையம் (WILD LIFE INSTITUTE OF INDIA), இங்கு ஆய்வு மேற்கொண்டு, இப்பகுதியினை இந்திய நாட்டின் மிக முக்கிய உயிரின வேற்றுமை நிறைந்த பகுதிகளில் ஒன்றாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்த தகவல் மகிழ்ச்சி அளிக்க க்கூடிய ஒன்றாகும்.
குறிப்பாக 1986 ஆம் ஆண்டில் மகேந்திர கிரி மலைப்பகுதி உயிரின வேற்றுமை முக்கிய பகுதியாக, உணரப்பட்டலும், 2014 ஆம் ஆண்டு நிபுணர் குழு மீண்டும் ஆய்வு செய்து அறிவிப்பு வெளிவர உரிய நடவடிக்கை எடுத்தது. ஒடிசா விண்வெளி பயன்பாட்டு மையம், 4716 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முழுமையான வன பகுதியில், 42.54 சதுர கிலோமீட்டர் பகுதி முக்கிய உள்பகுதியாகவும் (CORE ZONE) மற்றும் 1577 சதுர கிலோமீட்டர் நடுநிலை பகுதியாக (BUFFER ZONE), 3095 ச. கி. மீ இடைநிலை பகுதி என அளவீடு செய்துள்ளது.





இத்தகைய சூழலில், 2022 ஆம் ஆண்டு, மகேந்திர கிரி மலை பகுதி “உயிரின வேற்றுமை முக்கிய பகுதி” (BIODIVERSITY HOT SPOT) என அறிவிக்கப்பட்டது. எனினும் சமீப காலமாக அந்த இயற்கை வளப் பகுதியில் வளர்ச்சிப பணிகள் என்ற பெயரில் சுற்றுலா ஹோட்டல், தங்குமிடம் போன்றவை, அங்கு அமைந்துள்ள, கோயில் ஒன்றின் தொடர்புடைய கட்டுமானங்கள் அதிகரித்து விட்டன.
இயற்கை என்பதை ரசிக்க, மகிழ்ச்சி அடைய மட்டும் என்ற எண்ணத்தினையும் அந்த இடங்களில் புதிய கட்டுமான வளர்ச்சி பணிகள் துவக்குவதையும் அரசு, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இயற்கை என்பதை அறிவியல் பூர்வமாக சிந்தித்து அதுவே உயிரினங்களின் ஆதாரம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை ஆதாரங்கள், நம் நாட்டின் உண்மையான உடைமை என்றும் அவற்றை மாற்றியமைப்பதால் சுற்றுசூழல் சமநிலை பாதிப்பு அடைந்து விடும் என்றும் தேவையற்ற திட, திரவ கழிவுகள் அதிகம் உருவாகிவிடும். இயல்பாக, இயற்கை மாசுபாடு அடைந்து விடும் ஆபத்து உள்ளது.
மனித வாழ்க்கையில், நாகரீகம், அறிவியல் மூலம் வளர்ச்சி மேம்பாடு நிச்சயமாக தேவை என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் இயற்கை வள ஆதாரங்கள் பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றி ஒரு புறம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துக்கொண்டு, மறு புறம் அவற்றை மெதுவாக முற்றிலும், அழிக்கும் நிலையில் திட்டங்கள் தீட்டப்படுவது வருத்தத்திற்குரிய நிகழ்வுகள் ஆகும். மகேந்திர கிரி மலை ஒடிசா மாநில பெருமை மட்டுமே அல்ல.
அது இந்திய நாட்டின் உயிரின வேற்றுமை வளத்தின் எடுத்துக்காட்டு அதனை சிதைத்துவிடாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், கல்வியாளர்கள் இயற்கை பகுதிகள் பற்றிய முழு அறிவு பெற்று அவற்றை பாதுகாக்க அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். உலகமெங்கும் பருவ கால மாற்றங்கள் விளைவு தீவிரமாகும் இந்த வேளையில் நம்மிடம் இருக்கும் அரிய இயற்கை உடைமைகளை இழந்து போகாமல் காப்பாற்ற முன்வருவோமா!!??? சிந்திப்போம்!!
எழுதியவர் :

✍️ முனைவர் பா. ராம் மனோகர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
