கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! (Construction Waste: Management And Recycling in Tamil)- முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! – முனைவர். பா. ராம் மனோகர்

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..!

– முனைவர். பா. ராம் மனோகர்

அன்று ஒரு நாள் காலை, சென்னையில் நான் குடியிருக்கும் பகுதியில், அருகிலுள்ள பூங்காவிற்கு நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த நேரம்!, இரண்டு அரக்க இடி (JCB – BULLDOZER) வாகனங்கள், அழகிய கட்டிடம் ஒன்றினை இடித்து கொண்டிருந்த காட்சியினைக் கண்டேன்.

எங்கு பார்த்தாலும் மண், சிறு இடிபாட்டு கற்கள், தூசி மாசு பரவிக்கிடக்க, அடுத்த புதிய கட்டிடம் உருவாக்க, தேவைப்படும் ஆயத்த பணிகள் அருகில், நடந்து கொண்டிருந்தது. நகரம், மாநகர் ஆகி தற்பொழுது பெரு மாநகரமாக, மாறி வருகிறது. புதிய கட்டுமானப் பணிகள் ஆங்காங்கே அடுக்கு மாடி குடியிருப்பு, மென் பொருள் நிறுவனம், பெரு வணிக வளாகம், என்ற பல்வேறு வடிவ, வண்ண தோற்றங்களுடன், உருவாக்கம் பெறும் நிலை தொடர்கிறது.

நவீன முறையில் நகரமயமாக்கம், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் விரைவாக நடைபெற்று வருகின்றது. உலகில் மிக அதிக வேகத்தில், எதிர் வரும் பத்தாண்டுகளில், இரு மடங்கு அதிக நிலப் பரப்பினை ஆக்கிரமிப்பு செய்யும். நகரமயம் என்பது சூழல் பிரச்சினை ஆகும். பொதுமக்களுக்கு வேலை வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, வணிகம் பெருக்கம் என்ற மேம்பாட்டு கூறுகள் இருப்பினும், பல்வேறு சவால்கள் நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

இவற்றில் இரண்டு முக்கிய சூழல் சவால்கள் என்னவென்றால்,

  • i. கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணல், மற்றும் கிரேவேல் என்ற சிறு ஜல்லி கற்கள் பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. அது, கிட்டத்தட்ட 40% முதல் 50% இயற்கை வளம் சுறண்டுதல், தொடர்ந்து மண் அரிமானம், உயிரின வேற்றுமை இழப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.
  • ii. கட்டிட இடிபாட்டுக்கழிவுகளின், மாசுக்கள் மேலாண்மை ஆகும். ஒவ்வொரு நகரத்தின் 40% கழிவுகள் கட்டிட இடிபாட்டு கழிவு ஆகும்.

இத்தகைய கழிவுகளை, மறு சுழற்சி செய்வதால், புதிய இயற்கை வளம் சுரண்டுவது குறைப்பு மற்றும் புவி வெப்பமயமாதால், பருவ கால மாற்ற விளைவு, கார்பன் உமிழ்தல் குறைவாக இருக்க வாய்ப்பு, ஆகிய நன்மைகள் உருவாகும். எனினும் இது பற்றிய முழுமையான அறிவியல் அறிவு நம்மில் பலருக்கும் இல்லை என்பது உண்மை. மறு சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பயன்படுத்தி கட்டுமானங்கள் உருவாகும்போது கார்பன் உமிழ்வு 40% குறைகிறது.

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! (Construction Waste: Management And Recycling in Tamil)- முனைவர். பா. ராம் மனோகர்

இதனால் “சுழற்சி சூழல் பொருளாதாரம்” (CIRCULAR ECONOMY) முறையில், பசுமை திறன் மிக்க கட்டுமானங்களை நாம் ஏற்படுத்த வாய்ப்புகள் இருக்கின்றன. கட்டிட கழிவுகளை, மறுசுழற்சி செய்யும் 34 மையங்கள் தற்பொழுது இந்தியாவில் உள்ளன. இவற்றின் திறன் மிகு செயல்பாடுகள் பற்றி அறிவதற்கு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த மறுசுழற்சி மையங்கள் தமது செயல்பாடுகளுக்கு,உள்ளூர் நிர்வாகம், நகராட்சிகள் ஆகியவற்றினை தொடர்ந்து நம்பி இருக்கின்றன. மறு சுழற்சி மையங்கள், நகராட்சிகள் வழங்கும் போக்குவரத்து செலவு தொகை 70%, மற்றும் மறுசுழற்சி செய்த பொருட்கள் விற்பனை தொகை 30% மட்டும் பெறுகின்றன.

எனினும் இம்முறையில் பொருளாதார லாபம் இல்லை. இந்த நிலையில், மேலும் 35 மையங்கள் உருவாக்க திட்டம் உள்ளது. ஆனால், பொருளாதார அளவில் அதிக போக்குவரத்து தொகை சுழற்சி மையங்களுக்கு தருவது குறைவு செய்யவும், சுழற்சி மையங்கள், நகராட்சிகளை சார்ந்து இல்லாமல், தாமே சுயமாக செயல்பாடு மேற்கொள்ளும் அளவில் மைய அலுவல்கள் மாற்றியமைத்தால் நன்று.

இன்றைய நிலையில் செயல்படும் மறு சுழற்சி மையங்கள், நகராட்சி குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகை யாக, தரும் சுமார் 10-15 ஆண்டுகள், குறிப்பிட்ட நிலத்தில் இயங்கும். தனியார் நடத்தும் இந்த மையங்கள், குறிப்பிட்ட குத்தகை காலத்தில், இயங்கி, தமது மையத்தின் நிர்மாண செலவு உட்பட்டு, வருமானம் ஈட்ட வேண்டிய, கட்டாயத்தில் இருக்கின்றன. கட்டுமான கழிவுகளை ஆங்காங்கே வீடு கட்டுமிடங்களில், சேகரித்தல், கழிவு கொட்டுமிடம் பராமரிப்பு ஆகிய பணிகளை நகராட்சி மேற்கொள்ள வேண்டும். இந்த செலவுக்காக, கட்டிடக் கழிவுகளை, அங்கு உருவாக்குபவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையினை கட்டணமாக பெறவேண்டும்.

ஆனால் சுழற்சி மைய நிர்வாகம், கழிவுகளை சேகரிப்பு மையங்களிலிருந்து, எடுத்து செல்லும் போக்குவரத்து, பராமரிப்பு செய்து, மறுசுழற்சி பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய வேண்டிய பல பணிகள் மேற்கொண்டு, போக்குவரத்து தொகை, விற்பனைலாபம் மட்டும் பெறகின்றன. மேலும் சட்ட பூர்வமற்ற கழிவு கொட்டுமிடங்களில், கொட்டிய கழிவு போட்ட முகமறியா, இனம் காண இயலாத நபர்களிடம் அபராதம் பெற வாய்ப்புகள் இல்லை.

சுழற்சி மையங்களுக்கு போதுமான அளவு கட்டிட கழிவுகள் கிடைப்பது குறைவு, இதன் காரணமாகவே வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நகரங்களிலும், மாநகர் பகுதிகளிலும் கட்டுமான பணிகள் கண்காணிக்கவும், முறையற்ற கழிவு குவியல் பற்றிய உரிய ஒழுங்கு நடவடிக்கை தொடரவும், பணி செய்ய அலுவலர்கள் இல்லை. மேலும், கடும் நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.

நகராட்சி நிர்வாகம் மறுசுழற்சி மையங்களுடன், சரியான ஒப்பந்தங்கள் மேற்கொண்டு சுழற்சிக்கான பராமரிப்பு செலவு குறைக்க முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் மறுசுழற்சி செய்த கட்டுமான பொருட்கள் விற்பனை சந்தை வளம் பெற மறு சுழற்சி மைய நிர்வாகம் உரிய விழிப்புணர்வு செயல்பாடுகள் தொடர்ந்து பொது மக்களிடம் மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

கட்டிடக் கழிவுகள்: மேலாண்மையும் மறுசுழற்சியும்..! (Construction Waste: Management And Recycling in Tamil)- முனைவர். பா. ராம் மனோகர்

முறையற்ற கட்டிட க் கழிவுகள், கொட்டுவதை தவிர்க்கவும், கண்காணிக்கவும் உள்ளாட்சி நிர்வாகங்கள் தேவையான பணியாளர்கள் நியமனங்கள் செய்வது இல்லை. எனவே டெல்லி மாநகர் அருகில் உள்ள குருகிராம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்சாவட் ஆகிய நகராட்சி நிர்வாகங்கள் தனியார் ஒப்பந்தம் மூலம் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்கின்றன. இதன் காரணமாக, சரியான கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சுற்றுசூழல் பிரச்சினைகளுக்கு, டெல்லி நகரத்தில் உள்ள சுற்றுசூழல் அறிவியல் ஆய்வு மையம் (CENTRE FOR SCIENCE & ENVIRONMENT) தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பல்வேறு பரிந்துரைகள் வழங்கியுள்ளது.

அவையாவன, சிறிய கட்டிட கழிவு உற்பத்தியாளர்களுக்கு குறைவாக கட்டணம் வசூல் செய்வது நன்று. ஏனெனில் அதிக கட்டணம் செலுத்த இயலாமல் அவர்கள் முறையற்று கழிவு கொட்டுதல் தடுக்க முடியும். மேலும் மிக பெரிய கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அதிக கட்டணம் செலுத்த ஏற்பாடுகள் செய்யலாம்.

கட்டிடங்களின் கழிவுகள், முறையாக பிரித்து, மறுசுழற்சி செய்ய ஏற்றபடி இருந்தால் நன்றாக இருக்கும். இல்லையேல் கூடுதல் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். கட்டிடக் கழிவுகள் மறு சுழற்சி மையங்கள் உருவாக்கும் கட்டுமான உற்பத்தி பொருட்களின் தரம் உறுதிப்படுத்துதல் அவசியம் ஆகும். மேலும் இவ்வகை மறுசுழற்சி கட்டிட கட்டுமானத் திற்கான உற்பத்தி பொருட்கள் யாவும், சற்று மேம்பட்ட முறையில், புதிய கண்டுபிடிப்புகள் போல மக்களின் ரசனை, ஆர்வம், பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருக்க முயற்சி செய்வது அவசியம் ஆகும்.

அதனால் அதன் வணிகம் சந்தையில் விற்பனை பெருக வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் விட மறுசுழற்சி கட்டுமான பொருட்களின் தரம் சோதித்து,
நிர்ணயம் செய்வது மிக முக்கியம் ஆகும். ஏனெனில் உச்ச நீதிமன்ற கட்டிடம் ஒன்று 2019 ஆம் ஆண்டில் பிரச்சனை சந்தித்த நிலை வருந்துதற்குரியது. மறுசுழற்சி கட்டுமான பொருட்கள், கட்டிட ஆற்றல் திறனுக்கு ஏற்றவாறு இல்லாத நிலையில் காண்கிரீட் கலவை, மாற்றங்கள் கை கொடுத்தது.

அதில் 1.8 மில்லியன் மறுசுழற்சி கற்கள், 25,000 டன் மண்ணை காப்பாற்றின.எனவே, கடுமையாக சோதனை மேற்கொண்ட இந்த மறுசுழற்சியால். வெற்றி கிட்டியது. கட்டுமான மறுசுழற்சி நிறுவனங்கள் உறுதியான சோதனை கருவிகளை க் கொண்டு பொருட்களை ஆய்வு செய்து, தரத்தினையும் உறுதி செய்வது நன்று. பொதுவாக சுற்றுசூழல் பிரச்சினை என்பது இயற்கை ஒட்டிய சூழலில் மட்டும் அல்ல.

செயற்கை கட்டுமானங்கள், அவற்றால் வரும் மாசு, போக்குவரத்து பிரச்சினைகள் ஆபத்தான விபத்து உண்டாகும் அலட்சிய செயல்பாடுகள், ஆகியவற்றை அனைத்து உள்ளூர் நிர்வாகம் சிந்தித்து செயல்பட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதே போல் மறுசுழற்சி கட்டுமான பொருள், கட்டிட கழிவு மேலாண்மை பற்றிய அறிவு, விழிப்புணர்வு நம் அனைவரிடமும் இருப்பது அவசியம் ஆகும். பல்வேறு சுற்று சூழல் பிரச்சினைகள் இருப்பினும் நாடு நகர மயமாகிகொண்டிருக்கும், இந்த நவீன காலத்தில் கட்டிட கழிவு மற்றும் மறுசுழற்சி பற்றி அனைவரும் சிந்தித்து பார்ப்போம்.

கட்டுரையாளர்:

– முனைவர். பா. ராம் மனோகர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *