கொரோனா வைரஸ் உலக உலகமுழுவதும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிற இந்நிலையில் இந்தியாவை பொருத்தவரை 21 நாள் ஊரடங்கு(144) என்று அறிவித்து இருந்தாலும் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்தே ஊரடங்கை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால்

1)வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது, வீட்டில் அனைவரும் அனைத்து இருத்தல் வேண்டும்.
2)மணிக்கு ஒரு முறை கிருமி நாசினியால் கைகளால் சுத்தம் செய்திட வேண்டும்.
3)முகத்தில் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
வைரஸ் தொற்று நோயினால் நம்மை பாதுகாக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது தான். அந்த அறிவிப்புகள் பொருத்தமானதா என்றால் பொருத்தமானது தான். ஆனால் ஒரு குடும்பத்தின் தேவை என்ன என்று இதுவரைக்கும் மத்திய அரசும், மாநில அரசும் உருப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

எனது குடும்பத்தில் கடந்த 24ஆம் தேதியில் ரூபாய் 1000க்கு ஒரு மூடை அரிசி என்பது வாங்கப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 4 நபர்களுக்கு ஒரு படி அரிசி என்பது செலவாகிறது. வாங்கிய அரிசியோ இன்னும் இரண்டு நாளில் காலியாகிவிடும் . அதேபோல் வாரத்திற்கு குறைந்தது சமைப்பதற்கான அத்தியாவசியமான மளிகைப் பொருள் கணக்கில் கொண்டால் 500 ரூபாய் என்பது தேவை.
அரிசி 2 மூடை – ரூ 2000
மளிகை(5 வாரம்) – ரூ 2500
பால் – ரூ 500
மொத்தம். – ரூ 5000 உணவிற்காக ஒரு குடும்பத்திற்கு தேவை ரூபாய் ஐந்தாயிரம் என்று கணக்கில் வைத்துக் கொள்வோம்.
இவைதவிர
இன்று குழந்தைகள் இருக்கின்ற வீட்டில் இதனுடைய தேவை அதிகமாக இருக்கும். ஏனென்றால் குழந்தைகள் தனக்கு விருப்பமான உணவுப் பொருட்களை கேட்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
இருபது நாளில் வீட்டிலேயே இருப்பதால் அனைத்து மக்களினுடைய நுகர்வு என்பது அதிகமாக இருக்கும்.
மின்சாரம் என்பது தொடர்ந்து இயங்குவதால் அதனுடைய தொகை என்பது அதிகரிக்கும். *வளர்ப்பு பிராணிகள் (ஆடு, மாடு, இதர) இருக்கின்ற வீட்டில் அவற்றிற்க்கான செலவினங்கள்.
இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல், அன்றாடம் வேலை செய்து தனது குடும்பத்தைப் பராமரித்து வந்தவர்களின் நிலை என்ன?
இந்தப் விலைப்பட்டியலில் கூட 144 தடை உத்தரவுக்கு முன்பு ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை 110 விற்பனை செய்யப்பட்டது. இன்று 120 இவை போன்று பல்வேறு காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இது தான் இந்தியாவில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து உழைக்கும் மக்களின் இன்றைய பொருளாதார சூழ்நிலையாக இருக்கும்.
அரசு செய்தது என்ன
தமிழக அரசு ரூபாய் 1000 பணமும், 25 கிலோ அரிசி(19 1\2 கிலோ தான் கிடைத்தது) பருப்பு, எண்ணெய் வழங்கப்பட்டது.
மத்திய அரசோ கைத்தட்ட சொல்லியும், இரவில் ஒன்பது மணிக்கு விளக்கு பிடிக்கச் சொல்லியுள்ளன.
தமிழக அரசு கூட தொடர்ச்சியாக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்கள் வீட்டில் அருகிலேயே கிடைப்பதற்கான அத்தனை முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்ற அறிவிப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அருகிலேயே கிடைப்பதற்கான முயற்சிகள் இருந்தாலும்கூட அதை வாங்குவதற்கான மக்களிடம் பொருளாதார வசதி உள்ளதா என்று அரசுக்கு தெரியுமா? அதே போன்று நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்த ஊரடங்கை நீட்டிப்பதற்கான வழிவகையாகத் தான் பார்க்க முடிகிறது. எப்படி இருப்பினும் இந்த அரசுகள் மக்களினுடைய பொருளாதாரத் தேவையையும், கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒரு உருப்படியான திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
– ம.கண்ணன்

