கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போரிட உலக மக்களோடு சீனா கை கோர்த்து நிற்க தயாராக இருக்கிறது” ~~~~~~~ சிங்கப்பூருக்கான சீனத் தூதுவர் ஹோங் ஜீயோஹோங் 18.03.2020 அன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்று இதழுக்கு எழுதிய கட்டுரை ~~~~~~~~
ஜனவரி மாதம் முதலே சர்வதேச சமூகம், கொரோனா பரவுதலைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் பற்றி வருகின்ற கட்டுரைகளில் சில மட்டுமே சீனாவின் முயற்சிகளை அங்கீகரிக்கிறது. பல சீன அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் விதத்திலும் சீன ஜனாதிபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும் உண்மைக்கு புறம்பாகவும் எழுதப் படுகின்றன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிற இந்த நேரத்தில் இதில் எவ்வாறு மீண்டெழுந்து சமூகப் பொருளாதார வாழ்க்கையை மீட்டெடுப்பது என்பதே நம் எல்லோர் கவலையாகவும் இருக்கிறது.
இந்த நேரத்தில் சீனத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன். சீன மக்களின் கடும் முயற்சிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சீனத்தில் நிலைமை வெகு வேகமாக முன்னேறி வருகிறது. இந்த கட்டுரையை எழுதும் மார்ச் 18 ஆம் தேதி அன்று பெரும்பாலான மாகாணங்களில் ஒரே ஒரு உறுதிப்படுத்தப்பட்ட நோய் தொற்று கூட பதிவாக வில்லை. மிகக் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளான வூகான் நகரில் கூட கடந்த சில நாட்களாக ஒன்று அல்லது இரண்டு பாதிப்புகளே பதிவாகிறது. எங்களின் இலக்கு வெற்றிகரமாக நிறைவேறி விட்டதால், வூகானில் அமைக்கப்பட்ட 16 சிறப்பு மருத்துவ மனைகளும் மூடப்பட்டு விட்டது. தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளான இரண்டே மாதங்களில் வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறோம். 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் நாங்கள் செய்துள்ள இந்தப் பணி அதிசயம் அல்ல. எங்கள் பலம் தைரியம் உழைப்பு இவையே இதனைச் சாதித்து உள்ளது. இந்த மகத்தான சாதனையை நிகழ்த்த எங்களுக்கு உறுதுணையாக இருந்தது பின்வரும் சக்திகளே.
1)வலுவான தலைமை:
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீ ஜிங் பிங் மக்களின் பாதுகாப்பே தலையாயது என்று கருதி எப்போதும் செயல்பட்டு வந்தார்.கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது முதல் இதற்கு எதிரான பணியில் முன்னனியில் நின்றார். வசந்தகால திருவிழா காலத்தில் அனைத்து அரசுத் துறைகள் மற்றும் அனைத்து சிவில் சமூகங்களையும் இணைத்து தேசிய அளவில் நோய் தொற்றுக்கு எதிரான ஓர் செயல் திட்டத்தை தயாரித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைக் குழுவை ஒரே மாதத்தில் ஆறு முறை கூட்டினார். அதில் கொரோனா நோய் தொற்றைத் தடுக்க ஒரு ஒருங்கிணைந்த தேசிய அளவிலான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டது. பீஜிங்கிலும் வூகானிலும் அமைக்கப்பட்டிருந்த தொற்று நோய் தடுப்பு முன்னனி செயல் திட்ட மையங்களை பார்வையிட்டார். முன்னணிப் பணிகள் நடைபெறும் களத்திற்கு வந்தது, பணிகளைப் பார்வையிட்டு வழிகாட்டியது ஆகிய தலைமைப் பண்புகள் களத்தில் செயல்பட்டு வந்தோருக்கு பெருத்த நம்பிக்கையை அளித்தது. கொரோனா தொற்றை எதிர்த்து வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை அது நாடு முழுவதும் உருவாக்கியது.
கொரோனா தொற்று நோயை எதிர்கொள்ள எங்களுக்கு இருந்த இரண்டாவது பலம் எங்கள் நிறுவன பலம். ஹீபி மாகாணத்தின் தலைநகரான வூகானில் நோய் தொற்று பரவிய சில நாட்களிலேயே நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆதரவு குவிந்தது.41,600 பேரைக் கொண்ட 330 மருத்துவக் குழுக்கள் உடனடியாக ஹீபி மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பதினாறு சிறப்பு மருத்துவ மனைகள் அதில் இரண்டு அதிநவீன சிறப்பு மருத்துவ மனைகள் உருவாக்கப்பட்டது. வூகான் மருத்துவ மனைகளில் இருந்த 5000 இடங்கள் 23 000 இடங்களாக அதிகரிக்கப்பட்டது.
ஹிபி மாகாணத்தின் நகரங்களோடு இதர பத்தொன்பது மாகாணங்களில் இருக்கும் நகரங்கள் ஒன்றுக்கு ஒன்று உதவிடும் வகையில் இணைக்கப்பட்டது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து ஆறு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 500 மில்லியன் மருத்துவ உபகரணங்கள் பெறப்பட்டது. இதன் மூலம் துவக்க நேரத்தில் இருந்த மருத்துவ சேவைப் பற்றாக்குறை மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை முற்றாக துடைத் தெறியப்பட்டது.
இத்தகைய முயற்சிகள் காரணமாக நோய்வாய்பட்டோரை கவனிக்க ஆளில்லை என்ற நிலை, புதிய நோய் தொற்றைக் குறைதல், மரணங்கள் குறைதல் என்ற நிலையை எட்டினோம். அதேசமயம் தேசம் முழுவதும் அனைத்து மாகாணங்களிலும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக நோய் தொற்று தடுப்பில் நல்ல விளைவை எட்டினோம்.
வூகான் மாகண மக்கள் பெரும் சுமையைத் தாங்கிக் கொண்டனர். அவர்கள் பெரும் விலை கொக்க வேண்டி இருந்தது. சமூகத்திற்குள் நோய் தொற்று பரவுவதை தடுக்க, சீனப் புத்தாண்டு தொடங்கி சுமார் அறுபது நாட்கள் அவர்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டி இருந்தது. நிலையான சமூக ஒழுங்கை பேணிக் காத்தனர். இவ்வாறு தனிமைப்பட்டு இருந்தது வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சிற்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த தனிமைப் படுத்துதல் காரணமாக வூகான் மக்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவித்தார்கள் என்று வெளியில் இருப்பவர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. வூகானுக்கு ஜின்பிங் நேரில் வந்து போது குறிப்பிட்ட வார்த்தைகள் இதனை எடுத்துக் கூறப் பொருத்தமானவை. “கொரோனா வைரஸ் தொற்று நோயுக்கு எதிரான போராட்டத்தில் வூகான் மக்களை கதாநாயகர்கள். வூகின் மக்கள் தியாகம் சீன வரலாற்றில் நிலைத்து நிற்கும்” என்றார்.
சிவில் சர்வீஸ் பணியாளர்கள் மருத்துவ சேவையில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர் வீட்டில் இருக்க வைக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள். இதில் பலர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். சிலர் மரணத்தையும் தழுவினார்கள்.
வென்சூன் என்ற நகரம் 2008 ஆம் ஆண்டு பூகம்பத்தில் பெரும் பாதிப்பை அடைந்தது. 87000 பேர் மரணம் அடைந்தார்கள். அதிலிருந்து தப்பிப் பிழைத்தவர் சீசா. செவிலியராக வூகானுக்கு பணியாற்ற வந்தார். திருமணம் இல்லாத அந்த 24 வயது யுவதி நான் “வென்சூனில் இருந்து வருகிறேன். நான் யுவதி ஒண்டிக் கட்டை தான்” (இந்தப் பணி நிமித்தம் செத்து மடிந்தாலும் கவலை இல்லை. என்பதை உணர்த்தும் விதத்தில்) என்று சொல்லிக் கொண்டே சேவகம் செய்தாள்.
லீயூ என்பவரும் ஓர் இளம் தலைமுறை செவிலியர். தன் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட வூகான் வந்து விட்டார். “இந்த மருத்துவ சேவையின் போது எனக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் எனது உடலையும் இந்த நோய் தடுப்பு மருத்துவ ஆராய்ச்சிக்கு தருகிறேன்” என்று கூறிக் கொண்டே சேவை செய்தார். சீனா இரண்டு மாதத்தில் இந்த கொடிய நோய் தொற்றை கட்டுப்படுத்தியதில் இத்தகைய மகத்தான மக்கள் தியாகம் பல அடங்கியுள்ளது.
கொரோனா தொற்று நோயில் இருந்து மீண்டெழுந்தவுடன் அரசின் அடுத்த இலக்கு இயல்பு வாழ்க்கையை திரும்பக் கொண்டு வருவது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது. ஒட்டுமொத்தமாக எல்லா மாகாணங்களிலும் நிலைமை சீரடைந்து வரும் சூழலில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் ஒவ்வொரு வகை யுக்தியை கையாளுகிறது. குறைவான நோய் தொற்று அபாயம் இருந்த பகுதிகள் முற்றிலும் மீண்டெழுந்து விட்டது. நடுத்தர அபாயம் இருந்த பகுதிகளில் நிலைமை வேகமாக சீரடைந்து வருகிறது. இதுவரை 100 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளுக்காக மாகாணம் விட்டு மாகாணம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதுமான பாதுகாப்பு வசதிகளை கடைபிடித்தமையால் பிரயாணத்தின் போது யார் ஒருவரும் நோய் தொற்றுக்கு ஆளாகவில்லை.
பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் அதேநேரத்தில் நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதளபாதாளத்திற்கு சென்று விட்டது.பல தொழிற்சாலைகள் மீண்டும் உற்பத்தியை துவங்கி விட்டன. கோவிட் 19 ன் தாக்கம் சீனப் பொருளாதாரத்தின் மீது தற்காலிகமானதே. அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் எந்த மாறுதலும் இல்லை.
சீனா சர்வதேச சமூக ஒத்துழைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. கோவிட் 19 பரவத் தொடங்கியது முதல் உலக சுகாதார நிறுவனத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது. கோவிட் 19 வைரஸின் மரபணு ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்டு உள்ளது. ஈரான் ஈராக் மற்றும் இத்தாலிக்கு சீனா தனது மருத்துவ நிபுணர்கள் குழுக்களை அனுப்பி உள்ளது. பல சர்வதேச அமைப்புக்களோடு வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் பேசி வருகிறது. கொரோனா தொற்று நோய் தடுப்பு சிகிச்சை தொடர்பாக எங்களிடம் உள்ள தொழில்நுட்ப ஆவணங்களை 100 க்கும் மேற்பட்ட நாடுகள் 20 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புக்களுக்கு பகிர்ந்து வருகிறோம்.
இது தவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலக சுகாதார நிறுவனம் வழியாக பல்வேறு நாடுகளுக்கு முகக் கவசம் மருந்துகள் மற்றும் நோய் தடுப்பு சாதனங்கள் வாங்க 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளோம். கொரோனாவை எதிர்த்து போராடிவரும் நாடுகளுக்கு சீனாவின் இந்த சேவை தொடரும். வைரஸ் மனித சமூகத்தின் எதிரி. ஆனால் வெல்ல முடியாதது அல்ல.கோவிட்19 போன்ற எல்லைகள் கடந்த நெருக்கடிகள் தோன்றும் போது உலகத்திற்கு தேவை நம்பிக்கை. ஒற்றுமை. ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுதல் ஒருவர் மீது ஒருவர் விரலை நீட்டுதல் அல்ல. வைரஸ் எல்லை கடந்தது. நாடு கடந்து தாக்குப்பிடிக்கிறது. இது, மனிதர்கள் ஓர் சமூகமாக தங்களுக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் கைகோர்த்து நின்று பிரச்சினைகளை வென்று உலகத்தில் வாழ வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
– தமிழில்:பேரா. நா.மணி