1991ஆம் ஆண்டு கட்டவிழ்த்து விடப்பட்ட, மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்திய மக்கள்தொகையின் பல்வேறு பிரிவினர் மீது வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த சீர்திருத்தங்களின் தன்மையையும், அவற்றால் உருவான கொள்கைகளையும் தொடர்ந்து இந்திய இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்து வந்துள்ளன. இந்த முப்பதாண்டு காலத்தில் அந்த புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள், சீர்திருத்தங்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான தொடர்புகள், இந்திய மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் பரந்த தாக்கம் குறித்து ஃப்ரண்ட்லைனிடம் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரி பேசினார்.உரையாடலின் பகுதிகள்:
புதிய தாராளமயச் சீர்திருத்தங்களை இடதுசாரிகள் தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்கள். சீர்திருத்தங்களின் முப்பதாண்டு காலத்தை இப்போது பார்க்கும் போது இடதுசாரிகளின் அந்த விமர்சனம் நிரூபணமாகி இருப்பதாக நீங்கள் சொல்வீர்களா?
நிச்சயமாக! புதிய தாராளமயச் சீர்திருத்தங்களின் நோக்கம் லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்டது. அது மக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்கவில்லை. மக்களை வறுமையில் ஆழ்த்துவது, வறுமை அதிகரிப்பு, அதிவேகமாக விரிவடைகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அனைத்து நாடுகளிலும் உள்நாட்டுத் தேவைகளில் ஏற்பட்டிருக்கும் கூடுதலான வீழ்ச்சி போன்றவற்றின் இழப்பில் லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே இந்த சீர்திருத்தக் காலகட்டம் கவனத்தில் கொண்டிருந்ததை உலக மற்றும் இந்திய அளவில் நமக்குக் கிடைத்திருக்கும் அனுபவங்கள் காட்டுகின்றன. உலகப் பொருளாதார மந்தநிலை, அது மக்கள் வாழ்வின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் போன்றவை இப்போது பேரழிவை ஏற்படுத்தி வருகின்ற தொற்றுநோயால் இன்னும் அதிகமாக்கப்பட்டுள்ளன. மார்க்ஸ் ‘மிகப் பெரிய அளவிற்கு பிரம்மாண்டமான உற்பத்தி, பரிவர்த்தனை வழிமுறைகளை உருவாக்கியுள்ள முதலாளித்துவம் தனது மந்திரங்களால் உருவாக்கப்பட்ட மாயஉலகின் சக்திகளை இனி ஒருபோதும் தன்னால் கட்டுப்படுத்த முடியாது நிற்கின்ற மந்திரவாதியைப் போன்றதாகும்’ என்று ஒருமுறை கூறியதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது.
மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காகவும் இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் நமது விவசாயிகள் தொடர்ந்து போராடி வருவதன் பின்னணியில் முப்பதாண்டுகளாக இந்தியாவில் இருந்து வருகின்ற இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களே இருக்கின்றன. அவை நம்மிடம் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இண்டிகோ தோட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பரான் சத்தியாகிரகம் குறித்த நினைவுகளை எழுப்புகின்றன. பெருநிறுவன ஆதரவு, சிறு உற்பத்தியின் அழிவு (மோடியின் ‘பணமதிப்பு நீக்கம்’), உணவுப் பற்றாக்குறை போன்றவை விரைவிலேயே பெருமளவிற்கு அதிகரிக்கப் போகின்றன.
இந்தியாவில் சர்வதேச நிதி மூலதனம் ஆதிக்கம் செலுத்துகின்ற புதிய தாராளமயக் கருத்தியல் கட்டமைப்புடன் ஒருங்கிணைந்ததாகவே சீர்திருத்தச் செயல்முறைகள் இருக்கின்றன. பொதுச்சொத்துக்கள், அனைத்து பொதுப்பயன்பாடுகள், சேவைகள், கனிம வளங்கள், மக்கள் மீது ‘பயனர் கட்டணம்’ சுமத்தப்படுதல் போன்ற தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளின் மூலம் முதலாளித்துவத்தின் மிக மோசமான கொள்ளையடிக்கும் தன்மையை விலங்குணர்வுகளைக் கட்டவிழ்த்து விட்டதைப் போல முழுமையாகக் கட்டவிழ்த்து விட்டு லாபத்தைக் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதே இங்கே அதன் நோக்கமாக உள்ளது. உலக அளவிலும், இந்தியாவிலும் பெருநிறுவனங்களுக்கு மாபெரும் வரத்தை புதிய தாராளமயம் அளித்துள்ளது. அதன் வளர்ச்சிக்குப் பிறகு பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் வரி உலகளவில் 79 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு நிதியச் சரிவுக்குப் பிறகு, பெரும்பாலான கோடீஸ்வரர்கள் தங்கள் செல்வங்களை மூன்றாண்டுகளுக்குள் மீட்டெடுத்துக் கொண்டதுடன் 2018ஆம் ஆண்டுக்குள் அவற்றை இரட்டிப்பாக்கிக் கொண்டனர். அவர்களால் அவ்வாறு பெறப்பட்ட செல்வம் உற்பத்தியின் மூலமாகப் பெறப்பட்டதாக இல்லாமல் ஊகவணிகங்களின் மூலமாகவே அதிகரித்திருக்கிறது. உருவாகியுள்ள உலகளாவிய ஆழ்ந்த மந்தநிலை பங்குச் சந்தைகளை ஏன் எதிர்மறையாகப் பாதிக்கவில்லை என்பதை விளக்குகின்ற வகையிலேயே அது உள்ளது.
மறுபுறத்தில் பார்க்கும் போது, உலகளவில் வருமானம் ஈட்டுகின்றவர்களில் எண்பது சதவிகிதம் பேரால் தங்களுடைய 2008ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு இன்னும் திரும்ப இயலவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்துறை, தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மீதான தாக்குதல்களால் 1979இல் அமெரிக்காவில் நான்கு தொழிலாளர்களில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்த தொழிற்சங்கங்கள் இன்றைக்கு பத்து பேரில் ஒருவரை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு குறைந்து விட்டன.
ஜெஃப் பெசோஸின் விண்வெளிப் பயணத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனலின் சமத்துவமின்மை பிரச்சாரத்திற்கான உலகளாவிய தலைவரான தீபக் சேவியர் ‘நாம் இப்போது வானளாவிய சமத்துவமின்மையை அடைந்துள்ளோம். பெசோஸ் பதினோரு நிமிட தனிப்பட்ட விண்வெளிப் பயணத்திற்கு தயாரான ஒவ்வொரு நிமிடமும் பதினோரு பேர் பசியால் இறந்திருக்கக்கூடும். இது மனிதர்களின் முட்டாள்தனமாக இருக்கிறதே தவிர, மனிதர்களின் சாதனையாக இருக்கவில்லை’ என்று கூறினார்.
நியாயமற்ற வரி முறைகள், பரிதாபகரமான தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் பணக்காரர்களுக்கு முட்டுக் கொடுக்கப்படுகிறது. இந்த தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து சுமார் 1.8 லட்சம் கோடி டாலர் என்ற அளவிற்கு அமெரிக்க கோடீஸ்வரர்கள் பணக்காரர்களாகியுள்ளனர். கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான பெரும் மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தால் மட்டும் ஒன்பது புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.தொற்றுநோய் வந்ததிலிருந்து உலகப் பொருளாதாரத்தைத் தூண்டி விடுவதற்காக பதினெட்டே மாதங்களில் பதினோரு லட்சம் கோடி டாலர் தொகை செலவிடப்பட்டது – அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 83.4 கோடி டாலர் மத்திய வங்கிகளால் செலவிடப்பட்டன. அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை, பசி, பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் இவ்வாறு செலவழிக்கப்பட்டுள்ள தொகையே இந்த தலைமுறையின் மிகப்பெரிய பங்குச் சந்தை தூண்டுதலுக்கும் காரணமாகியுள்ளது. அந்தக் கோடீஸ்வரர்கள் அனைவரும் அவ்வாறாகத் தூண்டி விடப்பட்ட பங்குச் சந்தையில் ஈடுபட்டனர். ஆழ்ந்த பொருளாதார மந்தநிலையின் மத்தியில் இவ்வாறான பங்குச் சந்தை ஏற்றம் என்பது ஒரு குமிழியைப் போன்றதாகும். அந்தக் குமிழியால் முடிவில்லாமல் விரிவடைய முடியாது. அது வெடித்துச் சிதறும் போது பொருளாதாரம் மேலும் சீரழிந்து, பல நாடுகள் நாசமான நிலைக்குத் தள்ளி விடப்படக்கூடும்.
நேருவியன் சகாப்தம் எதிர் நிகழ்காலம்
1980கள் வரை நேருவியன் காலத்து பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரிகளும் விமர்சித்து வந்துள்ளனர். பொருளாதாரக் கொள்கைகள் மீது உங்களுடைய தற்போதைய விமர்சனம் முந்தைய விமர்சனங்களிலிருந்து எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது?
ஆம்! நேருவியன் காலத்தில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை நாங்கள் கடுமையாக விமர்சித்திருக்கிறோம். இந்தியாவில் சுதந்திரத்திற்கான மிகப்பெரிய போராட்டத்தின் போது மக்களிடம் ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்குத் துரோகம் செய்யும் வகையிலேயே பெருமுதலாளித்துவத்தின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுக் கூட்டணியாக அமைந்திருந்த இந்திய ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொருளாதார வளர்ச்சிப் பாதை அமைந்திருந்தது. அந்தக் காரணத்தாலேயே எங்களின் விமர்சனம் அதுபோன்று அமைந்தது. வறுமை, பசி, வேலையின்மை, கல்வியறிவின்மை ஆகியவற்றை அகற்றுவதற்குப் பதிலாக அவையனைத்தும் அதிகரிக்கவே செய்தன. ‘சோசலிச மாதிரியிலான சமூகம்’ என்பதாகவே நேருவியன் சகாப்தத்தின் பிரச்சாரங்களும், பேச்சுகளும் இருந்து வந்தன. ஆயினும் அப்போது நடைமுறையில் முதலாளித்துவப் பாதையே வளர்த்தெடுக்கப்பட்டது. லாபத்தைப் பெறுவதற்காக மனித சுரண்டலைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே முன்னேற முடியும் என்பதாகவே முதலாளித்துவத்தின் வரையறை இருக்கிறது.
தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மீது வைக்கப்படுகின்ற இப்போதைய விமர்சனம் முற்றிலும் வித்தியாசமானது. நேருவியன் காலத்தில் என்னவெல்லாம் நமக்குச் சாதகமாகச் சாதிக்கப்பட்டனவோ, அவையனைத்தும் இப்போது மிகவேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அப்போது மேற்கொள்ளப்பட்ட திட்டக்குழு, ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறையை நிறுவி அவற்றிற்கு நமது பொருளாதாரத்தில் ‘உயர்நிலை’ கொடுக்க முயல்வது போன்ற செயல்பாடுகளே சுதந்திரமான பொருளாதார அடித்தளத்தை இந்தியாவிற்கு அமைத்துக் கொடுத்தன. மோடி அரசாங்கம் பின்பற்றி வருகின்ற தீவிரமான புதிய தாராளமயக் கொள்கைகள் ஈவிரக்கமின்றி அந்த அடிப்படைத்தளத்தை முழுமையாகச் சிதைத்து வருகின்றன. தொழில்துறை மீது மட்டும் நின்றுவிடாமல் அந்த தாக்குதல் விவசாயத்தையும் இப்போது ஆக்கிரமித்துள்ளது. விவசாயம் புதிய வேளாண் சட்டங்களால் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பொதுத்துறைக்கு இருந்த பங்கு தனியார் முதலாளித்துவத் துறை வளர்ந்து முன்னேறுவதற்கே இறுதியில் பலனளித்தது என்ற போதிலும் மேற்கத்திய மூலதனத்தின் பொருளாதாரப் பினாமியாக ஆவதிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கின்ற அரணாக அது செயல்படவே செய்தது. இந்தியாவின் சுதந்திரமான பொருளாதார அடித்தளங்களையும், நமது தேசியச் சொத்துக்களையும் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய புரிதலில் இருந்துதான் இடதுசாரிகளின் பொதுத்துறைகளுக்கான இன்றைய ஆதரவு வந்திருக்கின்றது.
இந்தியா ஒளிர்கிறதா அல்லது துயரப்படுகிறதா
பொருளாதார தாராளமயமாக்கல் மூலம் ஏராளமான வருமானமும், செல்வமும் உருவாகியுள்ளது என்று நம்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். உழைக்கும் மக்களின் பொருளாதார வறுமையின் அடிப்படையில் பார்க்கும் போது அந்தக் கருத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது இல்லையா?புதிய தாராளமயச் சீர்திருத்தங்களின் விளைவாக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிவேகமாக விரிவாக்கம் கண்டுள்ளன. ‘ஒளிரும் இந்தியா’ துயரத்தில் தொடர்ந்து ஆழ்ந்திருக்கின்ற இந்தியாவின் தோள்களிலேயே தொடர்ந்து சவாரி செய்து வருகிறது. ‘ஒளிரும் இந்தியா’வின் ஒளிர்வும், ‘துயரமான இந்தியா’வின் சீரழிவும் தலைகீழான தொடர்பில் அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள நூறு கோடீஸ்வரர்கள் 2020 மார்ச் மாதத்திலிருந்து தங்கள் செல்வத்தை ரூ.12,97,822 கோடி என்ற அளவிற்கு அதிகரித்துக் கொண்டுள்ளனர். அந்த நூறு பேரிடம் இதுபோன்று சேர்ந்துள்ள தொகையான 13.8 கோடி ரூபாய் இந்திய ஏழைமக்களுக்கு தலா ரூ.94,045க்கான காசோலையை வழங்கிடப் போதுமான அளவில் உள்ளது.
‘தொற்றுநோய்க் காலத்தில் ஒரு மணி நேரத்தில் முகேஷ் அம்பானியால் சம்பாதிக்க முடிந்ததை திறன் எதுவுமற்ற தொழிலாளி ஒருவர் செய்து முடிப்பதற்கு பத்தாயிரம் ஆண்டுகள் தேவைப்படும். அதாவது முகேஷ் அம்பானி ஒரு நொடியில் செய்ததைச் செய்து முடிக்க அந்த தொழிலாளிக்கு மூன்று ஆண்டுகள் ஆகும்’ என்று ஆக்ஸ்பாமின் சமீபத்திய இந்திய துணை அறிக்கையான ‘அசமத்துவ வைரஸ்’ (The Inequality Virus) குறிப்பிடுகிறது.மறுபுறத்தில் 2020 ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 1,70,000 பேர் வேலை இழந்துள்ளனர் என்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பொதுமுடக்கத்தின் போது இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு முப்பத்தைந்து சதவிகிதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. 2009ஆம் ஆண்டு முதல் அவர்களுடைய சொத்து தொன்னூறு சதவிகிதம் அதிகரித்து இப்போது 42290 கோடி டாலர் என்ற அளவிலே உள்ளது. உண்மையில் தொற்றுநோய்களின் போது இந்தியாவின் முதல் பதினோரு கோடீஸ்வரர்களிடம் அதிகரித்துள்ள சொத்தை பத்து ஆண்டுகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அல்லது சுகாதார அமைச்சகத்தின் பட்ஜெட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேல்மட்டத்தில் உள்ள இருபது சதவிகிதத்தினரில் 93.4 சதவிகிதம் பேருக்கு மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்திற்கான பகிரப்படாத ஆதாரங்கள் கிடைக்கின்றன. அவற்றை கீழ்மட்டத்தில் உள்ள இருபது சதவிகிதத்தினரில் ஆறு சதவீதத்தினரால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடிகின்றது. இந்திய மக்களில் 59.6 சதவிகிதம் பேர் ஒரே அறையில் அல்லது அதற்கும் குறைவான இடத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
அரசாங்கச் செலவினங்களின் பங்கின் அடிப்படையில் உலகின் மிகக்குறைந்த சுகாதார பட்ஜெட்டில் இந்தியா நான்காவது இடத்தைக் கொண்டிருக்கிறது. தொற்றுநோய்களின் போது அதிகரித்த இந்தியாவின் முதல் பதினோரு கோடீஸ்வரர்களின் சொத்திற்கு வெறுமனே ஒரு சதவீத வரி மட்டும் விதிக்கப்பட்டிருந்தால்கூட, அதிலிருந்து கிடைத்திருக்கும் தொகை ஏழை, விளிம்புநிலை மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்கி வருகின்ற ஜன் ஔஷதி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற ஒதுக்கீட்டை 140 மடங்கு உயர்த்துவதற்குப் போதுமான அளவிலே இருந்திருக்கும்.
சீர்திருத்தக் காலம் இந்தியாவில் மக்களை மையமாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் லாபத்தை மையமாகக் கொண்டதாக இருந்ததால் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் கடுமையாக அதிகரித்துள்ளன. பிரதமர் மோடி செல்வத்தை உருவாக்குபவர்களை மதிக்க வேண்டும் என்று நம்மிடம் அறிவுறுத்துகிறார். உண்மையில் செல்வம் என்பது உழைக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பைப் பணமாக்குவதைத் தவிர வேறாக இல்லை எனும் போது மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திற்கும் அதனை உருவாக்கியவர்களைத்தான் நாம் மதிக்க வேண்டியுள்ளது.
மோடி அரசாங்கம் திட்டக்குழுவை மட்டும் ஒழித்திருக்கவில்லை. அது மக்களின் வறுமை நிலைகளை அளவிடுவதற்காக சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா பின்பற்றி வந்துள்ள அடிப்படை ஊட்டச்சத்து விதிமுறைகளையும் கைவிட்டிருக்கிறது. அந்த ஊட்டச்சத்து விதிமுறை கிராமப்புறங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 2,200 கலோரிகள் மற்றும் நகர்ப்புற இந்தியாவில் 2,100 கலோரிகள் தேவை என நிர்ணயித்திருந்தது. அந்த விதிமுறை அளவுகளின்படி 1993-94இல் இந்தியாவில் கிராமப்புறங்களில் 58 சதவிகிதமானவர்களும், நகர்ப்புறத்தில் 57 சதவிகிதமானவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்ததாக தேசிய மாதிரி கணக்கெடுப்பின்கீழ் [National Sample Survey] நடத்தப்பட்ட விரிவான மாதிரி கணக்கெடுப்பு காட்டுகிறது. 2011-12ஆம் ஆண்டிற்கான அதேபோன்ற அடுத்த கணக்கெடுப்பு முறையே 68 மற்றும் 65 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்ததாகக் காட்டியுள்ளது. அடுத்த விரிவான மாதிரி கணக்கெடுப்பு 2017-18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த கண்டுபிடிப்புகளில் இருந்த உண்மைகள் அனைத்தும் மோடி அரசால் மறைக்கப்பட்டு நசுக்கப்பட்டன. உலகம் போற்றுகின்ற நமது தரவுத்தள நிறுவனங்களையும் இந்த அரசு அழித்து வருகிறது. ஊடகங்களில் கசிந்துள்ள தரவுகள் கிராமப்புற இந்தியாவில் தனிநபர் நுகர்வுச் செலவில் (உணவு மட்டும் அல்ல) ஒன்பது சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. தொற்றுநோய் தாக்கப்படுவதற்கு முன்பே கிராமப்புற, நகர்ப்புற இந்தியாவில் நிலவுகின்ற வறுமை இதற்கு முன்னெப்போதுமில்லாத அளவிலே அதிகரித்திருப்பது தெளிவாகத் தெரிந்தது. அதற்குப் பிறகு நிலைமை மிகவும் மோசமாகி விட்டது.
இன்றைய உலகளாவிய பசி குறியீடு ‘தீவிரமான பிரிவில்’ இந்தியாவை உள்ளடக்கி வைத்திருக்கிறது. மக்களிடையே குறிப்பாக குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் மற்றும் பிற குறியீடுகள் அபாயகரமாக அதிகரித்திருப்பதை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு – 5 (NFHS-5) காட்டுகிறது. சமீபத்தில் வெளியான உலகளாவிய குறியீட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளைப் பொறுத்தவரை இந்தியாவின் நிலை இரண்டு தரவரிசைகள் குறைந்திருக்கின்றது. கடந்த ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை ஆறு கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து 13.4 கோடி என்ற அளவிற்கு அதிகரித்திருப்பதாக பியூ ஆராய்ச்சி மையம் மதிப்பீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அதிகரித்த உலக ஏழைகளின் எண்ணிக்கையில் 57.3 சதவிகிதம் பங்கு இந்தியாவிடம் உள்ளது. நம்முடைய நடுத்தர வர்க்கத்தினரில் 59.3 சதவிகிதம் பேர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது இடதுசாரிகளின் அழுத்தம்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாக சீர்திருத்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன என்று நம்பப்படுகிறது. புதிய தாராளமயத்திலிருந்து குறிப்பிடத்தக்க விலகலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகள் பிரதிபலித்தனவா?
பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறுத்தி வைத்திருக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவை மட்டுமே அளித்த போது ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் [CMP] புதிய தாராளமய சீர்திருத்த செயல்முறை தொடர்வதற்கான திட்டம் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்ததால்தான் அவ்வாறு நடந்தது. மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்தியக் குடியரசின் நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், அத்தகைய குடியரசின் அஸ்திவாரங்களைப் பலவீனப்படுத்துகின்ற, குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்ற வகையில் வகுப்புவாத சக்திகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையிலும் மட்டுமே இடதுசாரிகளின் அந்த ஆதரவு இருந்தது.
ஆம் – இடதுசாரிகளின் அழுத்தத்தாலேயே குறைந்தபட்ச பொது செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் செயல்திட்டம் மிகவும் முக்கியமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிச் சட்டம், வன உரிமைச் சட்டம், உணவு உரிமை, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம், தகவல் அறியும் உரிமை, கல்விக்கான உரிமை போன்றவற்றை அடக்கியதாக இருந்தது. அப்போது அவ்வாறு செய்யப்படவில்லையெனில் அது போன்ற நடவடிக்கைகள் ஒருநாளும் நடைமுறைக்கு வந்திருக்காது.
இந்திய அரசியலமைப்பு சில அடிப்படை உரிமைகளையும், உத்தரவாதங்களையும் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. இந்தியா வளரும்போது அதுபோன்ற உரிமைகளும், உத்தரவாதங்களும் விரிவடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கின்றனர். வேலை வாய்ப்பு உரிமை என்பது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்றாலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம் குறைந்தபட்சம் கிராமப்புறங்களில் மக்களின் வேலை வாய்ப்புரிமையை உறுதி செய்தது. அதற்கென்று சில வரம்புகள் இருந்த போதிலும், ஆளும் வர்க்கங்களிடம் அதைச் செயல்படுத்த வேண்டாமென்ற முயற்சிகள் இருந்த போதிலும் அதனால் கிராமப்புற வேலைக்கான உரிமையை விரிவாக்கம் செய்ய முடிந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதிக்கான சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்தே அதேபோன்று நகர்ப்புற வேலையுறுதியையும் அமல்படுத்த வேண்டும் என்று இடதுசாரிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். கல்வியும் அதேபோல அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை அல்ல என்றாலும், கல்விக்கான உரிமை நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும்கூட, குறைந்தபட்ச நீட்டிப்பாக அது இருந்திருக்கிறது. மக்களுக்கான உரிமைகள், உத்தரவாதங்களுக்கான விரிவாக்கங்களாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைச் சட்டம் போன்றவை இருந்தன. அந்த வகையில் பார்க்கும் போது இந்த சட்டங்கள் அனைத்தும் இடதுசாரிகளின் அழுத்தம் இல்லாமல் புதிய தாராளமயத்தின் கீழ் மிகச் சாதாரணமாக வர முடியாத சட்டங்களே ஆகும்.
புதிய தாராளமயத்தை நோக்கி இந்தியா திரும்பியதன் தாக்கங்கள் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் மீது எவ்வாறாக இருந்தன? அதற்கும் சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?பெருநிறுவன நலன்கள் மற்றும் வகுப்புவாத அரசியலின் வெறித்தனமான கூட்டணி 2014ஆம் ஆண்டு வெளிப்பட்டது. தேசிய சொத்துக்களைக் கொள்ளையடிப்பது, பொதுத்துறையை பெருமளவிற்குத் தனியார்மயமாக்குவது, பொதுப் பயன்பாடுகள், கனிம வளங்கள் ஆகியவற்றின் மூலம் லாபத்தைப் பெருக்குவதைத் தீவிரமாகப் பின்பற்றுவது என்பதாக அது இருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அது சலுகைசார் முதலாளித்துவத்தையும், அரசியல் ஊழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள், மனித உரிமைகள் மீதான இரக்கமற்ற தாக்குதல்களும் சேர்ந்து கொண்டுள்ளன. கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் தேசவிரோதமாகக் கருதி, மக்களை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களின் கீழ் தேசத்துரோகம் செய்ததற்காக கண்மூடித்தனமாக கைது செய்வது போன்ற செயல்முறைகள் அரசியலமைப்பையும், மக்களுக்கு அது வழங்குகின்ற உத்தரவாதங்களையும் அவமதிப்பதாகவே இருக்கின்றன.இதுபோன்ற செயல்பாடுகள் இந்தியாவை ‘தேர்தல் எதேச்சதிகாரம்’ கொண்ட நாடு என்று உலகம் அறிவிக்கும் வகையில் வழிவகுத்துக் கொடுத்துள்ளன. உலகப் பொருளாதார சுதந்திரக் குறியீடு இந்தியாவை 105ஆவது இடத்தில் வைத்துள்ளது, கடந்த ஆண்டு இருந்த 79ஆம் இடத்தைக் காட்டிலும் மிகவும் மோசமான இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மனித சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 94ஆம் இடத்திலிருந்து 111ஆவது இடத்திற்குப் பின்னோக்கி நகர்ந்துள்ளது. ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் கடந்த ஆண்டு 129ஆம் இடத்திலிருந்த இந்தியா 131ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிக துயரத்துடன் இவ்வாறு அதிகரித்து வருகின்ற எதேச்சாதிகாரம் ‘ஆட்சியுடன் பெருநிறுவனங்களின் இணைவு’ என்ற முசோலினியின் பாசிசத்தின் அச்சுறுத்தும் வரையறைக்கு நெருக்கமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது கோவிட்-19 தொற்றால் அந்தப் புதிய தாராளமயமே மிகவும் மோசமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிற நிலைமையில் அதன் எதிர்காலம் மற்றும் அதற்கான மாற்று என்னவாக இருக்கும்?
கோவிட் தொற்றுநோய், மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான நமது சுகாதாரப் பராமரிப்பின் போதாமையால் ஏற்பட்டுள்ள அவலங்கள் என்று அனைத்தும் மிகக் கடுமையாக இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சிக்கன நடவடிக்கைகள் துவங்கி ஊதியக் குறைப்புக்கள், வேலையிழப்புகள் மற்றும் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சிறு உற்பத்தியை அழித்தல் என்று மக்களைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துவதன் மூலம் லாபங்களை அதிகரித்துக் கொண்டுள்ள உலகளாவிய புதிய தாராளமயப் பாதையின் ஒரு பகுதியாகவே இன்றைக்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆழ்ந்த பொருளாதார மந்தநிலை இருக்கிறது. பொருளாதார நடவடிக்கையின் அனைத்து வழிகளையும் அது ஆக்கிரமித்துள்ளது. பெருநிறுவனங்களின் லாபத்திற்காக இந்திய விவசாயத்தையே இப்போது அழித்து வருவது, ஒப்பந்த விவசாயம் மற்றும் அதன் விளைவான உணவுப் பற்றாக்குறை போன்றவை அதை வெளிப்படுத்துவதாகவே இருக்கின்றன.
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் புதிய தாராளமய சீர்திருத்தங்களின் திவால்நிலை உலகளவில் அதிகமாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளை ஆய்வு செய்த தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை, ‘திறமையற்ற, வளர்ச்சிக்குப் பாதகமான நிலையை சமத்துவமின்மை எட்டியுள்ளது’ என்று முடித்திருக்கிறது. ‘சமத்துவமின்மையின் விலை’ என்ற தன்னுடைய புத்தகத்தில், மேல்தட்டில் உள்ள முதல் ஒரு சதவிகிதம் மற்றும் மற்ற தொன்னூற்றியொன்பது சதவிகித மக்களைப் பற்றி ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் பேசுகிறார். ‘நமது பொருளாதார வளர்ச்சி சரியாக அளவிடப்படுமானால் அது நமது சமூகம் ஆழமாகப் பிரிக்கப்படுவதால் அடையக்கூடியதை விட அதிகமாகவே இருக்கும்’ என்று அவர் முடித்திருக்கிறார்.புதிய தாராளமயத்திற்கு வெறுப்பை ஊட்டுகின்ற சலுகைத் தொகுப்புகளை பெருமளவிற்கு அரசு செலவினங்களின் மூலம் அனைத்து முன்னேறிய நாடுகளும் அறிவித்துள்ளன. உள்நாட்டுத் தேவைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதையே அவை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு அரசாங்கச் செலவினங்களை அதிகரிப்பதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல, ஆனாலும்….” என்று கூறி சமீபத்தில் தன்னுடைய உரையைத் துவங்கியிருக்கிறார்.
ஆனாலும் தன்னுடைய கூட்டாளிகள் வாங்கிய மிகப் பெருமளவில் செலுத்தப்படாத கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கும் மோடி அரசு அரசாங்கச் செலவினங்களை அதிகரிப்பதற்கு மறுக்கிறது. அன்றாடம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் ஒட்டுமொத்த பணவீக்கம் ஆகியவற்றின் மூலம் மக்கள் மீதே அதிகச் சுமைகளைச் சுமத்தி வருகிறது. உள்நாட்டு தேவைகளைக் குறைத்து, பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகரிக்கின்றது.
இந்த சீர்திருத்தப் பாதையைத் தீவிரமாகச் சுயபரிசோதனை செய்து, நமக்கான முன்னுரிமைகளை நாம் மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும்: விவசாயம், உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடு செய்தல், பொருளாதாரம் மற்றும் சமூகரீதியாக நமக்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான பொது முதலீடுகளை வேலை வாய்ப்பையும், உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்கும் வகையில் அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
தேசியவாதக் கட்சி என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி 1990களின் தொடக்கத்தில் வகுக்கப்பட்ட புதிய தாராளமயப் பாதையிலே தொடர்ந்து நகர்ந்து வருகிறது. புதிய தாராளமய சீர்திருத்தங்கள் பற்றிய அந்தக் கட்சியின் பார்வை வேறு எந்த கட்சியையும் விட தீவிரமானதா?
எப்போதுமே இரட்டை நாக்கில்தான் பாஜக பேசி வருகிறது. அது சொல்வதும், செய்வதும் இரண்டு முற்றிலும் வேறுபட்ட விஷயங்களாகவே இருந்து வருகின்றன. தேசியவாதக் கட்சி என்று தன்னைக் கூறிக் கொண்டு ஒரு காலத்தில் சுதேசி போன்ற முழக்கங்களை எழுப்பியும், எதிர்க்கட்சியாக இருந்தபோது உலக வர்த்தக அமைப்பை எதிர்த்தும் பேசி வந்த அந்தக் கட்சியின் செயல்பாடுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் முற்றிலும் தலைகீழாக மாறி விட்டன.
குறிப்பாக 2014 முதல் புதிய தாராளமய சீர்திருத்தங்களைத் தீவிரமாகவே பாஜக அரசு செயல்படுத்தி வருகின்றது. இதுபோன்ற தீவிரம் முன்பு அதனிடம் காணப்படவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் [ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்] அமைப்பின் அரசியல் அங்கமாகும்.
இந்தியாவில் வெறித்தனமான சகிப்புத்தன்மையற்ற பாசிச ‘ஹிந்துத்துவா ராஷ்டிரா’வை நிறுவுவதற்கான தனது அரசியல் திட்டத்தையே இப்போதும் ஆர்எஸ்எஸ் பின்பற்றி வருகிறது. இந்திய சுதந்திரத்தின் போது அதை அடையத் தவறி விட்டதால், அரசியலமைப்பால் நிறுவப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசிற்கு குழிபறித்து, அதனுடைய இடத்தில் பாசிச ‘ஹிந்துத்வா ராஷ்டிரா’வை எழுப்புவதற்கு அது தொடர்ந்து முயன்று வருகிறது.
உலகமயமாக்கப்பட்ட இந்த உலகில் அத்தகைய நோக்கத்தில் வெற்றி பெறுவதற்கு சர்வதேச ஆதரவு நிச்சயம் தேவைப்படும். குறைந்தபட்சம் சர்வதேச சமூகத்தின் தீவிர எதிர்ப்பு தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான சிறந்த வழி, புதிய தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் தீவிரமாகச் செயல்படுத்துவதே. உலகளாவிய மற்றும் உள்நாட்டு மூலதனம், பெருநிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் வகையில் புதிய பகுதிகளை வழங்குவதன் மூலம் அவர்களுடைய ஆதரவைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவே முயல்கிறது.
வலதுபுறத் திருப்பம்
புதிய தாராளமயத்தை நோக்கி இந்தியா திரும்பியதன் தாக்கங்கள் உலக அரசியலில் அதன் அணுகுமுறை, பங்கின் மீது என்னவாக இருக்கும்?
உலகளாவிய அரசியல் வலதுசாரித் திருப்பம் என்பது நீண்டகால உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டதாகும். லாப அதிகரிப்பு மட்டங்களில் ஏற்பட்டுள்ள மந்தநிலை உலகளாவிய முதலாளித்துவத்தின் நலன்களை எதிர்மறையாகப் பாதித்திருக்கிறது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் வளர்ந்து வருகின்ற தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக உணர்வுகளைத் தூண்டி இனவெறி, இனப்பாரபட்சம், வெறுப்பைப் பரப்புதல், ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை நசுக்குதல் போன்ற சீர்குலைக்கும் போக்குகளை இந்த வலதுசாரி அரசியல் திருப்பம் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் இத்தகைய வலதுசாரித் திருப்பம் வகுப்புவாத துருவமுனைப்பைக் கூர்மைப்படுத்தப்படுவதன் மூலமும், ஆர்எஸ்எஸ்சின் பாசிசத் திட்டங்களை முன்னெடுக்க உதவும் மத சிறுபான்மையினருக்கு எதிரான நச்சு வெறுப்பு, வன்முறை பிரச்சாரங்களின் மூலமும் வெளிப்படுகின்றது. இயல்பாகவே அது பாசிசம் நோக்கிய சர்வாதிகாரத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுக்கிறது.
குறிப்பாக 2014ஆம் ஆண்டு உருவான பெருநிறுவன-வகுப்புவாத உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அது சலுகைசார் முதலாளித்துவத்தின் மிக மோசமான வெளிப்பாட்டிற்கு இட்டுச் செல்கிறது. சலுகைசார் பெருநிறுவனங்கள் மிகச் சாதாரணமாக தங்கள் செல்வத்தைக் குவிப்பதைக் காண முடிகிறது. இந்தியாவின் தேசியச் சொத்துக்களை பெருமளவில் கொள்ளையடிப்பதற்காக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டம், கட்டுப்பாடற்ற புதிய தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த திட்டத்தின் பகுதியாக, ஆர்எஸ்எஸ் திட்டத்தின் முன்னேற்றத்தைக் காட்டுவதாகவே இருக்கிறது.
இத்தகைய கட்டுப்பாடற்ற புதிய தாராளமயக் கொள்கை சர்வதேச உறவுகளில் இந்தியாவிற்கான பங்கை சர்வதேச நிதி மூலதனத்தின் துணையுறுப்பாக, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமியாக உறுதிப்படுத்துகின்றது. ஒரு காலத்தில் வளரும் நாடுகளின் தலைமையாகவும், அணிசேரா இயக்கத்தின் சாம்பியனாகவும் இருந்த இந்தியாவின் பெருமை இப்போது வெறுமனே வரலாற்றுப் பதிவுகள் என்ற நிலைமைக்கு இறங்கி வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக புதிய தாராளமய சீர்திருத்தங்களைத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்ற இந்த பெருநிறுவன-வகுப்புவாத இணைப்பு அரசியல் சாசனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்பதிலிருந்து இந்தியாவை வெறித்தனமான சகிப்புத் தன்மையற்ற ‘ஹிந்துத்துவா ராஷ்டிரா’வாக உருமாற்றம் செய்வதற்கான ஒட்டுமொத்த தொகுப்பின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது.
https://frontline.thehindu.com/cover-story/interview-sitaram-yechury-neoliberalism-economic-reforms-at-30-a-corporate-communal-nexus-has-emerged/article36288863.ece
நன்றி: ஃப்ரண்ட்லைன்
தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.