சிறுகதை: காக்காவின் தீர்ப்பு (Kakkavin Theerpu Short Story in Tamil) | Crow Judgement Story | அஷீதா (Ashitha) | உதயசங்கர் (Udhayasankar)

சிறுகதை: காக்காவின் தீர்ப்பு | மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்

காக்காவின் தீர்ப்பு

மலையாளத்தில் – அஷீதா
தமிழில் – உதயசங்கர்

 

ஒரு நாள் பூனையும் நாயும் சண்டை போட்டன. பூனை ஆற்றில் முகம் பார்த்தது. தன் உடலெங்கும் நாக்கினால் நக்கி சுத்தப்படுத்தியது.

“ என்ன ஒரு அழகு! பார்த்தியா.. நீண்ட கண்கள், இளம் பழுப்பு நிறத்தில் தோல்ச்சட்டை, பெரிய வால், மென்மையான கைகளும் கால்களும், நடக்கும்போது சத்தமே கேட்காது. நான் ஞீம்ம் ஞீம்ம் என்று சிணுங்கினாலும் சரி உறுமினாலும் கேட்பவர்கள் மயங்கி விடுவார்கள் “

ஆற்றங்கரையில் படுத்திருந்த நாய்க்குட்டி அதைக் கேட்டது. அதுக்குக் கோபம் வந்தது. உடனே எழுந்து ஆற்றுக்குள் குதித்துக் குளித்தது. வெளியே வந்து உடலை உதறிக் கொண்டே பூனைக்குட்டிக்கு முன்னால் வந்து நின்றது.

“ உன்னோட நீண்ட கண்களையும் பெரிய வாலையும் வைத்து என்ன பயன்? என்னுடைய எஜமானன் என்னைப் பார்க்காமல் ஒரு நாளும் உறங்கவே மாட்டார். சின்னு அக்காவிடம் கேட்டுப்பார்.. அப்போது தெரியும் உனக்கு.. என்னுடைய மடங்கிய காதுகளையும் பழுப்பு நிறக்கண்களையும் பாரு..”

என்று சொன்ன நாய்க்குட்டி இரண்டு கால்களிலும் நின்று கொண்டு சவால் விடுத்தது. வாக்குவாதம் முற்றி ரகளையாகிப் போனது. இரண்டும் அடிபிடி நடத்தி மண்டையை உடைத்துக் கொள்வார்கள் என்ற நிலை வந்தது.

அப்போது கசுமலா காக்கா தலையிட்டது.

“ ஹேய்.. ஹேய்.. நண்பர்களே! உங்களுக்குள் அடித்துக் கொண்டு சாகப்போகிறீர்களா? “

என்று சொன்னது. நாய்க்குட்டி,

“ அப்படி என்றால் நீ சொல்லு.. எங்கள் இருவரில் யார் அழகு? “

என்று கேட்டது.

“ ஆமாம் சொல்லு..இன்னிக்கு முடிவு தெரிஞ்சாகணும் நான் இல்லை என்று நீ சொன்னே அவ்வளவு தான் உன்னை ஒரு வழி பண்ணிருவேன்..” என்று பூனைக்குட்டியும் முதுகை வளைத்துத் தூக்கிக் கொண்டு சவால் விட்டு கேட்டது.

கசுமலா காக்காவின் நிலைமை சிக்கலாகி விட்டது.

நாய்க்குட்டி எதுவும் பேசவில்லை. ஆனால் பல்லைக்காட்டிக் கொண்டு நின்றது. உறுமவும் செய்தது. என்ன செய்வது? நாய்க்குட்டி தட்டில் மிச்சம் வைக்கிற சோறைச் சாப்பிட்டுச் சுத்தம் செய்வது கசுமலா காக்கா தான். வயிறு நிறைய நாய்க்குட்டிக் கொடுக்கும். பூனைக்குட்டியை நம்ப முடியாது. சத்தமில்லாமல் பின்னால் வந்து தாவிப் பிடிப்பதில் பலே கில்லாடி.

முடிவில், கசுமலா காக்கா தன்னுடைய தொண்டையைச் சரி செய்து கொண்டு இப்படிச் சொன்னது,

“ நண்பர்களே! இந்த அழகு.. அழகுன்னு சொல்வதில் பெரிய அர்த்தம் இல்லை.. உண்மையான அழகு நீண்ட கண்களிலோ, மடங்கிக் கிடக்கிறக் காதுகளிலோ இல்லை..”

“ பிறகு..”

நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஒன்றுபோலக் கேட்டார்கள். அப்போது கசுமலா காக்கா என்ன சொன்னது தெரியுமா? ,

“ உண்மையான அழகு இதயத்தில் இருக்கிறது.. அப்படிப் பார்த்தால் சின்னு தான் மிக மிக அழகு.. சின்னுவின் இதயத்தின் அழகு தான் அவளுடைய கண்களில் தெரிகிற கவர்ச்சி..”

அதைக் கேட்ட நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் ஏற்றுக் கொண்டார்கள். உடனே அவர்கள் இரண்டு பேரும் சின்னுவைத் தேடி ஓடினார்கள்.

*****************

நன்றி :

பறயாம் நமுக்கு கதகள்

உதயசங்கர் (எழுத்தாளர்) - Tamil Wiki

தமிழில் – உதயசங்கர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *