தொடர் 1: கலாச்சார தொழிற்சாலை – சிலந்தி வலையும் சிந்தனை சிறையும்
நாம் ஒரு புதிய யுகத்திற்குள் நுழைந்திருக்கிறோம். செய்திகள் (Information), தகவல் தொடர்பு (Communication), கேளிக்கை நிறுவனங்கள் (Entertainment Corporations) ஆகிய மூன்றும் புதிய பரிமாணத்தை அடைந்திருப்பதோடு, ஒன்றோடு மற்றொன்று ஒருங்கிணைந்து புதியதொரு கலாச்சார தொழிற்சாலையாக பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது ICE Age (யுகம்) என அழைக்கப்படுகிறது. நமது உணவு, உடை, நுகர்வு ஆகிய அனைத்தையும் இந்த நவீன கலாச்சார தொழிற்சாலைகள் தீர்மானிக்கின்றன.
”கண்ணா, நாம ஏன் இந்த எண்ணெயில விளக்கேத்தறோம் தெரியுமா, ஏன்னா இதுல தான் நறுமணமும் அதிகம், நற்பலன்களும் அதிகம்” என ஒரு விளம்பரம் வருவதை நாம் கவனித்திருப்போம். ஒரு எண்ணெய் நறுமணத்தோடு இருக்க முடியும். ஆனால் அது எப்படி அதிக “நற்பலன்களை” அளிக்க முடியும். அப்படியெனில் கடவுளை விட அதிக சக்தி வாய்ந்ததாக அந்த எண்ணெய் தானே இருக்க முடியும். இப்படி நமது சிந்தனைகளை மழுங்கடிக்கும் விதத்தில் உருவாக்கப்படும் விளம்பரங்கள் ஒரு கண்காணிப்பு காமிராவைப் போல எப்போதும் நம்மை சுற்று வந்துகொண்டே இருக்கின்றன. பிக்பாஸ் ஷோவில் சொல்வதை போல விளம்பரங்களின் பிடியில் இருந்து நம்மால் ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’. வெறும் இருபது முப்பது விநாடிகளில்வரு ம் விளம்பரம் தானே. அவற்றால் என்ன செய்து விட முடியும் என ஒருவேளை நாம் யோசிக்கலாம். ஆனால் அத்தகைய விளம்பர உலகத்தின் பிரமாண்டத்தையோ, அது உருவாக்கும் நுண் விளைவுகளையோ பற்றி புரியாமல் தான் கடந்து போய் கொண்டிருக்கிறோம்.
இந்தியாவில் இண்டர்நெட் வசதியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 751.5 மில்லியன். அதாவது 75 கோடி. இது ஒட்டு மொத்த ஐரோப்பாவின் மக்கள் தொகையை விடவும் அதிகம். இண்டர்நெட் எனில் அது ஒரு நவீன வசதி என்பது மட்டுமல்ல, பெரும் வணிகமும் அதற்குள் ஒளிந்திருக்கிறது. இண்டர்நெட், தொலைக்காட்சி, சினிமா, பயணம், பருவ இதழ்கள் என அனைத்தின் ஊடாகவும் விளம்பரங்கள் (Advertisements) வழிந்தோடிக் கொண்டேயிருக்கின்றன. முதலாளித்துவத்தை பொறுத்தவரை இந்தியா மிகப்பெரும் சந்தை. ஆம். ஒவ்வொருவரையும் ஒரு தனிநபர் எனும் கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு பதிலாக அவரை ஒரு நுகர்வோராக பார்க்க வேண்டும் என்பதே சந்தை பொருளாதாரத்தின் விதியாகும். இங்கு ஒவ்வொரு தனிநபரின் சிந்தனையையும் நுகர்வு மனநிலையாக மாற்ற வேண்டியிருப்பதால், பொருள் உற்பத்திக்கு முன்னதாகவே “இசைவு உற்பத்தியை” செய்ய வேண்டியிருக்கிறது. அதாவது மனித மனதின் ஒப்புதலை பெற வேண்டியிருக்கிறது. அதற்காகவே பெரும் தொகையை கார்ப்பரேட்டுகள் செலவிடுகிறார்கள்.
கடந்த ஓரண்டில் மட்டும் விளம்பரங்களுக்காக மட்டும் செலவிடப்பட்ட தொகை 1,55,386 கோடி ரூபாய் ஆகும். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 18 கோடி, ஒவ்வொரு நிமிடத்திற்கும் 30 லட்சம். பொருள் உற்பத்திக்கு ஆகும் செலவைப் போலவே பெருமளவில் “இசைவு உற்பத்திக்காகவும்” செலவிடுகிறார்கள் கார்ப்பரேட்டுகள். அதனால் தான் அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ” எந்த கடைக்கு வேணாலும் போய் நகை வாங்கிகோங்க, எங்க கடையில் வந்து விலையை செக் பண்ணிட்டு போங்க, ஏன்னா, காசு ஒன்னும் சும்மா வரலீங்க” என நம்மிடம் கரிசனம் காட்டுகிறார் ஒரு நகைக்கடை முதலாளி. முகம் தெரியாத நம் மீது அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை. அவர் கடையில் நகை வாங்குகிறோமோ இல்லையோ, அவர் கடைக்கு மக்களை வரவைக்க வேண்டும் எனும் வியாபார தந்திரம் தான் அது. முதலில் உள்ளே வரட்டு. அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் எனும் வணிக நம்பிக்கையும் இருப்பதால் தான் அப்படி ஒரு விளம்பரத்தை அவரால் எடுக்க முடிகிறது. சில விநாடிகளில் வந்து போகும் ஒவ்வொரு விளம்பரமும் இத்தகைய நுணுக்கத்தோடு தான் எடுக்கப்படுகிறது. பொருளின் மீதான ஈர்ப்பை உருவாக்க மனித மனங்களை தகவமைக்க வேண்டிய அவசியம் மூலதனத்திற்கு உள்ளது. லாபம், லாபம், மேலும் லாபம் எனும் தாகத்தோடு அலைந்து திரியும் மூலதனம் தான் இத்தகைய பிரமாண்டமான கலாச்சார தொழிற்சாலைகளை கட்டமைத்திருக்கிறது.
இத்தகைய நவீன கலாச்சார தொழிற்சாலை பல இயங்கு தளங்களை (App) உருவாக்கி நம்மையும் ஒரு சிலந்தி வலையைப் போல அவற்றோடு பிணைத்திருக்கிறது. பயன்பாட்டில் உள்ள App களின் எண்ணிக்கை சுமார் 33 லட்சம் எனும் அளவில் இருக்கும் என சொல்லப்படுகிறது. மசால் தோசை வேண்டுமா, எழுதுவதற்கு ஒரு நல்ல பேனா வேண்டுமா, சினிமாவிற்கு போக வேண்டுமா, லேசான தலைவலிக்கு மருந்து வேண்டுமா என எது வேண்டுமானாலும் அவற்றை App கள் உங்கள் வீட்டின் வாசலுக்கு கொண்டு வந்து தருகின்றன. அப்பாக்களை விடவும் ”ஆப்” களே நமக்கு நெருக்கமாகவும், நமது தேவைகளை பூர்த்தி செய்பவையாகவும் உள்ளன. ஒரு மணி நேரத்தில் ”ஆப்” களின் மூலம் நடைபெறும் வர்த்தகம் 104 கோடி, ஓராண்டிற்கு சுமார் 39 லட்சம் கோடி என்பதிலிருந்து அதன் வர்த்தக பரப்பையும், அதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அனைத்தையும் “பண்டமாக” மாற்றுவதோடு, அனைத்து உறவுகளையும் உணர்ச்சிகளற்ற வெறும் “பண உறவாக” மாற்றி விடுகிறது முதலாளித்துவம் என்றார் மார்க்ஸ். உயிரோட்டமான அவரது கூற்று எவ்வாறு மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை சமகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. செய்திகள் என்பவை வெறும் செய்திகள் அல்ல. அவை பண்டமாக மாற்றப்பட்டிருக்கின்றன. செய்தி உலகம் எவ்வாறு இயங்குகிறது. அடுத்த கட்டுரையில் காண்போம்.
கட்டுரையாளர்:

கட்டுரையாளர், மார்க்சிய கருத்துரையாளர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Culture Factory is simple, short, informative, attractive to read. Congratulations, Good timely to middle and working class. Congratulations Comrade.
தொடர்ந்து எழுதுங்கள் தோழர்.