பிரதமர் மோடி மதுரை பிரசாரக்கூட்டத்தில் பேசியது "தமிழக மாண்புகளை அழிக்க முனையும் ஆபத்தான அரசியல்" | என்.குணசேகரன் எழுதிய அரசியல் கட்டுரை | Prime Minister Modi's Speech at Madurai Rally: "Dangerous politics that seeks to destroy the dignity of Tamil Nadu" - www.bookday.in

தமிழக மாண்புகளை அழிக்க முனையும் ஆபத்தான அரசியல் – என்.குணசேகரன்

“தமிழக மாண்புகளை அழிக்க முனையும் ஆபத்தான அரசியல்”

– என்.குணசேகரன்

பிரதமர் மோடி மதுரையில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்கிற வகையில் பிரச்சாரம் மேற்கொள்வது இயல்பானது. மதுரை வந்த போது திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். பிரதமர் மோடியின் தனிப்பட்ட மதநம்பிக்கை, வழிபாடு கேள்விக்குரியது அல்ல .அது ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற உரிமை.

ஆனால் தனது அரசியல் நோக்கத்திற்கு முருகக் கடவுள் மீதான நம்பிக்கையை அவர் பயன்படுத்த முனைந்தது கடும் விமர்சனத்துக்குரியது.”திமுக அரசு எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால், இறுதியில் வாய்மையே வெல்லும். முருகனே வெல்வார் “ என்று பேசியது மதவாத அரசியல்.

திருப்பரங்குன்றத்தில் நடந்திருக்கிற சங்கப்பரிவாரத்தின் போராட்டங்கள், வழக்குகள் ,தீர்ப்புகள் என அனைத்தும் சங்கப் பரிவாரங்களின் நோக்கத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.அந்தப் பிரச்சனையை தேர்தல் அரசியலாக்கி, இந்து மத உணர்வுகளைப் பயன்படுத்தி வாக்குகளாக மாற்றிடவும் ,சிறுபான்மை எதிர்ப்பை அதில் கலந்து அரசியல் அறுவடை செய்யும் வேலையும் பல மாதங்களாக நடந்து வருகிறது.இந்தப் பின்னணியில் பிரதமர் திருப்பரங்குன்றம் சென்றதும், மதுரைக் கூட்டத்தில் பேசிய பேச்சும் மத நம்பிக்கையை அரசியலாக்கும் சங்கப் பரிவாரத்தின் வேலைக்கு உரமூட்டும் உள்நோக்கம் கொண்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் பல பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் ஒரு முக்கியப் பிரச்சனையை மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மதத்தைப் பயன்படுத்தி அரசியல் நடத்துவதும், ,அதிகாரத்தைப் கைப்பற்றுவதற்கு மத வெறியைத் தூண்டுவதும், அதற்காக மக்களை அணிதிரட்டுவதும் மிக ஆபத்தானது. இந்த ஆபத்தான செயல் திட்டத்தை சங்கப் பரிவாரங்கள் தமிழகத்தில் முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு மாநில அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்திடுவோம்” என்கிற அவர்களது முழக்கத்திற்குப் பின்னால் இந்த உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் அறிந்திட வேண்டும்.

மத அரசியலின் நோக்கம்

மானுட வரலாற்றில் சமய நம்பிக்கை மனிதர்களின் தனிப்பட்ட உணர்வாகவே இருந்துள்ளது. மாறாக,அதிகாரத்தைக் கைப்பற்றுவது,அதனைத் தக்க வைத்துக் கொள்வது மத அரசியலின் நோக்கம்.வெகுமக்கள் அரசியல் உருவாகி,ஜனநாயகத் தேர்தல் முறைகள் உருவான போது அவற்றைக் குலைக்கும் மதம் சார்ந்த அரசியல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மேலோங்கியது.

சமய நம்பிக்கை நல்லிணக்கத்தைப் போற்றும்.போர்,வன்முறைகள் மத அரசியலுக்கானது.சமய நம்பிக்கையில் பகைமை கொண்ட கொந்தளிப்புப் போராட்டங்களுக்கு இடமில்லை.இவை மத அரசியலில் நிறைந்திருக்கும்.

பன்மத்துவத்தை மதவெறி அரசியல் அனுமதிப்பதில்லை. இதர நம்பிக்கையாளர்களோடு பகைமை கொண்டு அவ்வப்போது அது ஆயுதபாணியாக தாக்குதலில் இறங்கும்.சமய நம்பிக்கை பன்மத்துவம் போற்றும்;இதர நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்திடும்.அது நாத்திகர்க்கும் மரியாதை அளிக்கும்.இந்திய சிந்தனையில் பிரிக்க இயலாத ஒரு தத்துவம் சார்வாகம் எனும் பொருள்முதல்வாத சிந்தனை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைதி,தியானம்,இறைசிந்தனை,அறநெறிகளில் சமய நம்பிக்கையின் அழுத்தம் இருக்கும்.மத அரசியல் பகை மூட்டும் கோரிக்கைகள் கொண்டு ஆரவாரமான பேரணிகள்,திரட்டல்கள்,ஆவேசப் பிரச்சாரங்கள் என சமுக அமைதியைக் கெடுக்கும்; பிளவை ஏற்படுத்தும்.

உண்மையான சமய நம்பிக்கை மற்றவர்களை துன்புறுத்துகிற மூட வழக்கங்களை புறந்தள்ளும். மத அரசியல் கேடான சடங்குகள்,சம்பிரதாயங்களை தங்களது அரசியலுக்கு மக்களைத் திரட்டப் பயன்படுத்தும்.நிதிபலம்,அரசியல் செல்வாக்குடன் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் குருஜிகள்,சாமியார்களை உண்மையான நம்பிக்கையாளர்கள் ஏற்பதில்லை.

மத அரசியலால் மானுட இழப்புகள்

மத அரசியல் சொல்லொணா இழப்புகளை மானுடத்திற்கு இழைத்துள்ளது.தங்களது புனித நகரமாகக் கருதப்பட்ட ஜெருசலேமை இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமிருந்து மீட்பதற்கு 1096 முதல் 1291 வரை 200 ஆண்டுக்காலம் ஐரோப்பிய கிறித்துவப் படைகள் சிலுவைப் போர்களை நடத்தின. இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், யூதர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.சில இடங்களில் அங்கு வாழ்ந்த கிறித்துவர்களும் கொல்லப்பட்டனர். இந்தப் போர்களின் தாக்கம் இன்று வரை தொடர்கிறது.மேற்காசியாவில் குண்டுகளின் சத்தம் இன்னமும் அடங்கவில்லை.

ஐரோப்பாவில் கிறித்துவ தேவாலயத்தின் அதிகாரத்திற்கும், அரசுக்கும் மோதல்கள் இருந்தன.நீடித்த இந்த மோதல்களின் இறுதிக் கட்டத்தில் அரசும்,தேவாலயமும் சமூகத்தில் வகிக்க வேண்டிய பங்கு குறித்த எல்லைக் கோடுகளைத் வரையறுத்துக் கொண்டன. அரசு மத விவகாரங்களில் தலையிடாது;அரசு, நிர்வாக செயல்பாடுகளில் தேவாலயம் தலையிடாது. அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் மதத்தின் தலையீடுகள் கூடாது; மதநம்பிக்கை, மதசுதந்திரம்,வழிபாட்டு முறைகளில் அரசியல் தலையிடக்கூடாது எனவும் பொதுவான கோட்பாடுகள் பின்பற்றப்பட்டன.இவ்வாறு மதச்சார்பின்மைக் கோட்பாடு உருவானது.இதற்குப் பிறகுதான் ஐரோப்பிய சமூகங்களில் வளர்ச்சி ஏற்பட்டது. உலகம் முழுவதும் மதச்சார்பின்மைக் கோட்பாடு பொதுவாக ஏற்கப்பட்டது.

தத்துவயியலாளர் ஜான் லாக் முதற்கொண்டு பல மனிதநேயவாதிகள் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் இறை நம்பிக்கை இருப்பதுதான் உண்மையான மத சுதந்திரம் என்றனர்;பெரும்பான்மை மத சர்வாதிகாரத்திற்கு இடமில்லை என்று பிரகடனம் செய்தனர்.மதச்சார்பின்மைக்கும் மேலாக சமூக மாற்ற சிந்தனையை முன்னெடுத்தவர் காரல் மார்க்ஸ்.

“மதம் மக்களின் அபின்” என்ற மார்க்ஸ் கூற்று இன்றளவும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மதத்தை மார்க்ஸ் அவதூறு செய்வதாக பிரச்சாரம் செய்கின்றனர். அது உண்மையல்ல. மதம், ”ஒடுக்கப்பட்ட ஜீவனின் பெருமூச்சு; இதயம் இல்லாத உலகின் இதயம்” என்று மார்க்ஸ் கூறினார்.துயரம் மிகுந்த வாழ்வில் மதம் மக்களுக்கு ஒரு வலி நிவாரணியாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி,துயர வாழ்க்கைக்குக் காரணமான சமூக எதார்த்தத்தை மாற்றி புதிய பொன்னுலகம் படைக்க மார்க்ஸ் வழிகாட்டினார்.இதனை மனிதர்கள் ஒன்றுபட்டு சாதிக்க மார்க்ஸ் வலியுறுத்தினார். மாற்றத்திற்கான மனிதச் செயல்பாட்டினை வலியுறுத்தியதுதான் அவரது சிறப்பு. சுரணடசமூகத்தை மாற்றுவதற்கு மத நம்பிக்கையாளர்களும் முன்வர வேண்டுமென்பது மார்க்சியப் பார்வை.

இவ்வாறு பல கோணங்களில் எழுந்த கருத்தியல் காரணமாக அரசாங்கங்களின் அடிப்படைக் கோட்பாடாக மதச்சார்பின்மை ஏற்றுக் கொள்ளப்பட்டது.அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் அரசு மத விவகாரங்களில் தலையிடாது எனும் கொள்கை உறுதியானது.அனைத்து மதத்தினரின் நலன்களுக்காகவும் அரசு செயல்பட வேண்டும் என்பது சட்டப்பூர்வமானது.

இந்தியாவில் மதம் சார்ந்த அரசியல்

இந்தியாவில் மதச்சார்பின்மை இந்திய நிலைமைகளுக்கேற்ப பின்பற்றப்பட்டது. விடுதலைப் போராட்டம் அனைத்து மதப் பிரிவினர்களையும் ஒன்றுபடுத்தியது. இந்த ஒற்றுமையின் ஊடாக இயல்பாகவே மதச்சார்பின்மை எண்ணங்கள் செல்வாக்கு பெற்றன.பிறகு அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிநாதமாக மதச்சார்பின்மைக் கோட்பாடு அமைந்தது.

இந்திய நடைமுறைகள் மேற்கத்திய மதச்சார்பின்மையிலிருந்து வேறுபட்டவை.மத நல்லிணக்கம்,மத உரிமைகள் காப்பது அரசின் கடமை.மதத்தின் பெயரால் குறிப்பிட்ட பிரிவினர் ஒடுக்கப்படுவதை அரசு அனுமதிக்காது.நால்வருண முறையின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமைக் கொடுமைகளை அனுபவிக்க அரசு இடம் தராது.மதத்தின் பெயரால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாவதை அரசு வேடிக்கை பார்க்காது.சாதி,பாலின ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தும் சமய பரப்புரைகளை அரசும்,சட்டங்களும் அனுமதிக்காது.இவ்வாறெல்லாம் அரசாங்கங்கள் செயல்படுகிறதா , கடந்த காலத்தில் அவ்வாறு செயல்பட்டு வந்துள்ளதா என்பதெல்லாம் முக்கியமான கேள்விகளே!. இருப்பினும்,மேற்கண்ட நடைமுறைகள் மதச்சார்பின்மையின் அங்கமாகவும், அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடுகளாகவும் இருந்து வருகின்றன.

மதத்தை அரசியலில் கலந்து பெரும்பான்மை மக்களை சிறுபான்மையினருக்கு எதிராகத் திரட்டுவது,நமது மண்ணில் வேரூன்றியுள்ள பரந்த மனப்பான்மையை சீரழிக்கும்.சிறுபான்மை மதம் சார்ந்து வெறுப்பு அடிப்படையில் மக்களைத் திரட்டுவதும் கேடுகளை விளைவிக்கும்.

மத அரசியல் மக்களை ஒன்றுபடுத்தாது; சமுகங்களைப் பிளவுபடுத்தும். இதற்கு இந்தியா மற்றும் உலக நாடுகளின் வரலாறுகள் ஏராளமான சான்றுகளைக் கொண்டுள்ளன.

1947 இந்தியப் பிரிவினையின் போது சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் தாங்கள் பிறந்து வளர்ந்த வாழ்விடங்களிலிருந்து இடம் பெயர்ந்து.அகதிகளாக வெளியேறினர்.வன்முறையில் 20 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சோக வரலாற்றை மக்கள் எந்நாளும் மறக்கக் கூடாது.மற்ற காரணங்கள் இருந்தாலும்,சமய நம்பிக்கை என்கிற எல்லையைத் தாண்டி,மத அரசியல் கோர வடிவம் எடுத்ததால் ஏற்பட்ட வரலாற்றுத் துயரம் இது.

சமய நூல்களின் சாரம்

மத அரசியல் சார்ந்து மக்களைத் திரட்டுகிறபோது,சமய நூல்களின் கருத்துக்கள் போராட்ட முழக்கங்களாக மாற்றப்படுகின்றன. சமய நூல்களின் கருத்துக்களைத் திரித்து,மலிவான அரசியலுக்கு அவை பயன்படுத்தப்படுகின்றன.பெரும்பாலான சமய நூல்கள் இறை நம்பிக்கையை தனிப்பட்ட உணர்வாகவே கருதுகின்றன.

இதர நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் சமய நூல் கருத்துக்கள் ஏராளம். அப்படியே சாத்திரங்கள் பகைமையை போதிப்பதாக இருந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டுமென்ற குரலும் தமிழகத்தில் எழுந்தது. திருநாவுக்கரசர் பாடிய புகழ்பெற்ற பாடல் வரிகள் சிறந்த சான்று:

“சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?”

இது சாதிப்பிரிவினைக்கான கண்டனம் மட்டுமல்ல,இதர மதங்களின் இறை நம்பிக்கையை சகிக்காத மத அரசியல்வாதிகளுக்கும் சாட்டையடி!

திருமூலரின் “அன்பே சிவம்” என்ற புகழ்பெற்ற வாக்கியம் நம்பிக்கைப் பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது.அப்பர்,சம்பந்தர் போன்றோர் சிவபெருமான் மீதான நம்பிக்கையை “அன்பே,சிவனே” என அழைக்கின்றனர்.இங்கு இறை நம்பிக்கையின் விழுமியமாக அன்பு போற்றப்படுகிறது. இதர நம்பிக்கையாளர்களிடமும் அன்பு பாராட்டும் உயர் பண்பாடாக இது விளங்குகிறது. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவர் வரிகள் பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.பக்தி இயக்கத்தின் சாரமே “யாரும் உயர்வல்ல, யாரும் தாழ்வல்ல”என்ற நெறி சார்ந்த சமத்துவ நோக்குதான்.மத அரசியலில் அன்புக்கு இடமில்லை.அதிகாரமே அதன் இயங்குதளம்.அதிகாரத்திலிருந்து, மாற்று மதத்தினரையும் ,அதே மதத்தைச் சார்ந்த மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் ‘இதரர்கள்’ என்று கூறி அவர்களை ஒதுக்குவதுதான் மத அரசியலின் தலையாய நோக்கம்.

மதச் சாயம் பூசி கோரிக்கைகளை முன்வைத்து வெறுப்புப் பரப்புரைகள்,பேரணிகள்,ஆர்ப்பாட்டங்கள்,வன்முறைகள்,படுகொலைகள் போன்றவற்றை சங்கப் பரிவாரங்கள் நடத்துகின்றனர். இவற்றை தமிழகத்தின் மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட ஆன்மீக சிந்தனையாளர்களும் ஏற்க மாட்டார்கள்.மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது நமது முற்போக்கான பாரம்பரியத்திற்கு முரணானது.

தமிழகத்தில் மாநில அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக மற்றும் சங்கப் பரிகாரங்கள் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளனர். தமிழகத்தின் மத நல்லிணக்க வரலாற்றை அழிப்பதற்கு அவர்கள் வைத்துள்ள கூட்டணி தான் இது. தேர்தலில் இந்தக் கூட்டணி முறியடிக்கப்பட வேண்டும்.

========================================================.

எழுதியவர்:

– என்.குணசேகரன்
மத்தியக்குழு உறுப்பினர் 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *