மண்ணில் உயிரோடு உலாவி, மனிதர்களுடன் இரண்டறக் கலந்த, நம் ஆதி மூதாதைகளில் கொலை செய்யப்பட்ட, தற்கொலை செய்துகொண்ட, பாலியல் வன்புணர்வு செய்து உயிரை மாய்த்துக்கொண்ட, கணவனின் சிதையிலேற்றப்பட்ட, பெண்களை தெய்வங்களாக்கி வணங்கி வழிபாடு செய்து தன் குற்றக் கரைகளையெல்லாம் கழுவிக் கொண்டதாய் இறுமாப்போடு அலையும் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்களால் நிறுவப்பட்டதுதான் இன்று நாம் வழிபடும் கிராம நாட்டுப்புற குலதெய்வங்கள் யாவும் என்பதை மண்ணில் வாழும் வழிபடும் மக்களின் வாய்மொழி வழியே கதைகள் வழியே காட்சிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.
ஏறத்தாழ அறுபது பெண் தெய்வங்களின் கதைகளை வாசிக்கும் போதே கண்களில் நீர் பெருகியோடுகிறது. துளியளவு உண்மையும் பெருமளவு புனைவும் கலந்து செய்த கலவையென்பது ஒவ்வொரு கதைகளிலும் உள்ளிடை வெளியாய் புலனாகிறது. ஆனாலும் அந்த கொஞ்சூண்டு உண்மையும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையும் ஆண்களின் உலகம் எவ்வளவு அநீதியானது என்பதை நேர்மையின் துலாக்கோலால் அளந்துள்ளார் ஆசிரியர். பாதிக்கப்பட்ட பெண்கள் யாவரும் வழிபாடு செய்யச் சொல்லி மிக எளிமையான தண்டனையை கொடூர ஆண்களுக்கு தருவதாக சொல்வதில் ஒரு மோசடித்தனம் இருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.
ஆணாதிக்க கொழுப்பெடுத்த உதடுகள் வழியேதான் இப்பொய்ச்செய்திகள் செவிவழியே போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். எந்தக் கதையிலும் ஆண்களுக்கான தண்டனையென்பது இல்லவே இல்லை. அத்தனை அயோக்கியத்தனம் ஆண்களின் பிம்பங்கள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இனி குலதெய்வ வழிபாடென்பது கொலை வழக்காய் கூராய்வு செய்யப்பட வேண்டியது என்பது இக்கதைகள் வாயிலாக தெரிகிறது.
பொதுவாகவே சிறுதெய்வ வழிபாடென்பது, பெருந்தெய்வவழிபாட்டைப் போல் அதீத மூடநம்பிக்கைகளும். சாதீய இறுக்கமும் மிகுந்ததாகும். சிறு புள்ளியளவு உள்ள உண்மையை காலங்கள் தோறும் கைமாற்றியதில் புனைவின் பெருஞ்சித்திரங்களாக விளைந்து நிற்கின்றன. நிறுவனப்படுத்தப்பட்ட பெருந்தெய்வங்களை கூட அனைத்து தரப்பு மனிதர்களும் வழிபட சட்டங்கள் வழிவகை செய்துவிட்டது. ஆனால் கிராம நாட்டார் தெய்வங்களை எளிய சாதியினர் வழிபட முடியாதபடி சாதித்தடைகள் பெரும்பாம்பென முறுகி கிடக்கின்றன. கண்டனூர் தேரோட்டமும் மேல்பாதிமங்கலம் கோவில் கதவடைப்பும் இன்றும் சாட்சியங்களாக திகழ்கின்றன.

சேரி மாரியம்மனும் ஊர் மாரியம்மனும் இன்றுவரை ஒன்றுகூடுவதில்லை. இன்றும் கூட ஆண்கள் மட்டுமே வழிபடுகின்ற பலியிட்ட உணவை தின்று செரிக்கின்ற ஏராளமான கோவில்கள் பெண்ணடிமைத்தனத்தின் ஒரு கூறாக இருக்கின்றன. சனங்களுக்கு எதிரானவை சனாதனமெனில் அவை பெருந்தெய்வங்களுக்கு நிகராகவே சிறுதெய்வங்களிடமும் மண்டிக் கிடக்கின்றன. நாட்டார் தெய்வங்களாயினும் சமத்துவமான வழிபாடு சாத்தியமில்லையெனில் அதுவும் எதிர்க்கப்பட வேண்டியவையே.
தொகுப்பாசிரியர் பெரும்பாலான கதைசொல்லிகளின் சாதிகளை பட்டவர்த்தனமாக பதிவு செய்திருக்கிறார். இதைத்தான் கிராம தெய்வங்களின் சகவாச தோசமென்பது இதைத் தவிர்த்திருக்கலாம். முடிவாக ஒரு கட்டுரையை இணைத்திருக்கிறார். காலங்காலமாக பலியிடப்பட்ட பெண்களின் சாட்சியமாக பேசுவார் என்று பார்த்தால் சிறுதெய்வ வழிபாடு சிறந்ததா? பெருந்தெய்வ வழிபாடு சிறந்ததா? என்று பட்டிமன்ற பாணியில் சிறு தெய்வ வழிபாடே சிறந்தது என்று தீர்ப்பெழுதி நிற்கிறார்.
கைகால் வெட்டுப்பட்ட, தீக்கிரையாக்கப்பட்ட, கிணற்றில் தள்ளிவிடப்பட்ட, தலை துண்டிக்கப்பட்ட, வன்புணர்வு செய்து கழுத்து நெறித்து கொல்லப்பட்ட, பெண்களுக்கு தெய்வந்தான் சாட்சி சொல்ல வேண்டியதில்லை ,அவை ஒருபோதும் சாட்சி சொன்னதேயில்லை. காடுகளுக்குள் திறந்தவெளியில் நிற்கும் ஒவ்வொரு சிலையின் பீடத்திற்குள்ளும் முணுமுணுத்துக்கொண்டிருக்கும் பெண்களின் துயர்மிகு வலியை மொழிபெயர்த்து உலகிற்கு மனிதர்களாகிய நாம் சொல்லுவோம் மானுடத்தின் சாட்சியென.
தெய்வமே சாட்சி நூலை எழுதிய தோழர் ச.தமிழ்ச்செல்வன்அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
நூல்: தெய்வமே சாட்சி
ஆசிரியர்: ச.தமிழ்ச்செல்வன்
பக்கம்: 160
விலை: 160
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க லிங்கை கிளிக் செய்க: Thamizhbooks.com