பேய்க் கோபுரம் (Devils Tower) – ஏற்காடு இளங்கோ
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்று வயோமிங் (Wyoming) ஆகும். வடகிழக்கு வயோமிங்கின் பியர் லாட்ஜ் ரேஞ்சர் மாவட்டத்தில் பேய்க் கோபுரம் (Devils Tower) அமைந்துள்ளது. இது ஒரே பாறையால் ஆன ஒரு குவிமட்ட வடிவம் கொண்டது. இந்த அமைப்பு ஒரு புவியியல் அற்புதமாகப் புகழப்படுகிறது. இது கருப்பு மலைகளால் (Black Hills) சூழப்பட்டுள்ளது. இது வடக்கு சமவெளி பழங்குடி இந்தியர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்க மக்களால் புனிதமாகக் கருதப்படுகிறது.
இது எப்படி தோன்றியது என்பது பற்றி உள்ளூர் மக்கள் பல கதையைச் சொல்கின்றனர். ஆனால் புவியியல் அறிஞர்கள் இது எரிமலை நடவடிக்கையால் தோன்றியது என்கின்றனர். சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருகிய எரிமலைக் குழம்பு ஏற்கனவே இருந்த கடினமான பாறை அமைப்புகளுக்குள் தள்ளப்பட்டது. இது மில்லியன் கணக்கான ஆண்டுகளாகக் குளிர்ந்த பிறகு நெடுவரிசையாக உடைந்தது.
தற்போது இது ஒரு அற்புதமான கல் நினைவுச் சின்னமாக நிற்கிறது. இந்தக் கோபுரம் அடிப்பகுதியிலிருந்து 867 அடி (264 மீட்டர்) உயரம் கொண்டது. அதே சமயத்தில் இது பெல்லி ஃபோர்ச் நதிக்கு மேலே 1,267 அடி உயிரத்தில் உள்ளது. மேலும் இதன் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 5,112 அடி உயரத்தில் உள்ளது. இதன் மேல் பகுதி தட்டையானது. இது 1.5 ஏக்கர் (0.6 ஹெக்டேர்) பரப்பளவைக் கொண்டுள்ளது.
கருப்பு மலையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக வந்த செய்தியை உறுதிப்படுத்த ஒரு ஆய்வுக் குழு 1875 ஆம் ஆண்டு அங்கு சென்றது. இக்குழுவின் தலைவராக கர்னல் ரிச்சர்ட் இர்விங் டாட்ஜ் (Richard Irving Dodge) இருந்தார். அப்போது இந்த கோபுரத்திற்கு “டெவில்ஸ் டவர்” என்று பெயரிட்டார். ஆனால் உள்ளூர் மக்கள் கரடியின் வீடு, கரடியின் தங்குமிடம், கரடியின் டிப்பி, மரப் பாறை, பெரிய சாம்பல் கொம்பு மற்றும் பழுப்பு எருமைக் கொம்பு போன்ற பூர்வீகப் பெயர்களில் அழைத்து வந்தனர்.
வில்லியம் ரோஜர்ஸ் மற்றும் வில்லார்ட் ரிப்லி ஆகியோர் 1893 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று முதன் முதலாக அந்த கோபுரத்தின் மீது ஏறினர். 1895 ஆம் ஆண்டில் திருமதி ரோஜர்ஸ் என்பவர் தனது கணவர் பயன்படுத்திய ஏணியின் மூலம் கோபுரத்தின் உச்சியை அடைந்தார். இதன்மூலம் கோபுரத்தின் மீது ஏறிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டால் அமெரிக்காவின் முதல் தேசிய நினைவுச் சின்னமாக டெவில்ஸ் டவர் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலிந்து சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இவர்களில் சுமார் 5,000 பேர் பேய்க் கோபுரத்தின் மீது ஏறுகின்றனர். தற்போது கோபுரத்தின் மேல் ஏறுவதற்கு 220 க்கும் மேற்பட்ட பாதைகள் உள்ளன.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அருமையான பதிவு . நன்றி. மேலதிகத் தகவல்கள் தெரிந்துகொள்ள தூண்டியது.