தம்ம பதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிவிக்ரகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்த பீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
மனித வாழ்க்கைக்குத் தேவையான அறத்தை மிக எளிமையாகவும் நேர்த்தியான கவிதை வடிவத்திலும் பாலி மொழியில் எழுதப்பட்டுள்ள தம்மபதம் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் கவிதை வடிவில் எளிமையானதாகவும் ஆழமானதாகவும் பொருள் செறிந்து வெளிவந்திருக்கும் இந்த நூல் அறத்தை ஒவ்வொரு மனமும் நல்முறையில் உணர்ந்துகொண்டு பின்பற்றிச்செல்ல உதவுகிறது.
இதிலுள்ள கருத்துக்கள் இன்றைய நுகர்வுக் கலாச்சாரமாக மாறிவிட்ட உலகத்திற்கு பொருந்துமா என்ற ஐயப்பாடு எழலாம். ஆனால் ஒவ்வொரு மனங்களுக்குள்ளும் அவரவர்கள் தம்மையே சோதித்துப் பார்க்க இந்த நூல் உதவி செய்யும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லாவிதமான செயல்களிலும் உங்களை முழு ஈடுபாட்டோடு ஈடுபடுத்திக் கொள்ள தம்மபதம் கை கொடுக்கும்.
இந்நூலில் இணைகள், விழிப்பு, மனம் ,பூக்கள், அறிவிலிகள், அறிவர், போற்றத்தக்கோர் , ஆயிரங்கள் ,தீமை, தண்டித்தல் , முதுமை, புத்தர், மகிழ்ச்சி, பிரியம் ,சினம், நீதி, யானை ,அவா,பிக்கு, அறவோர் என்ற தலைப்புகளின் கீழ் எளிமையான கவிதை வடிவில் மனங்களின் தேவைகளையும் ஆசைகளையும் சுமந்து செல்லும் ஒவ்வொரு மனிதனையும் விழிப்புணர்வு அடைய வைக்கவும் உள்முக வெளிச்சத்தை உணர்ந்து கொள்ளவும் உதவும் தலைப்பில் அருமையாக அமைந்துள்ளன.
அறிவியலின் பாதையில் கருவிகளின் துணைகொண்டு அவசர வாழ்வில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினரிடம் பரிவு கருணை பெரியோரை மதித்தல் அறத்தின் மீதான ஆர்வம் சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் குறைந்துவருவதை பரவலாக அறிய முடிகிறது. வன்முறையும் பழிவாங்கும் போக்கும் அதிகரித்து மனங்கள் நிலைகொள்ளாத தவிப்பில் அலையும் மேகங்களைப்போல அவ்வப்போது தம்மை உருமாற்றிக் கொண்டேயிருக்கின்றன.
இத்தகு சூழலில் மனதினை ஆற்றுப்படுத்தவும் உலகியலின் நெறிகளை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவும் அறத்தின் வழியில் வாழ்வை வழிநடத்தவும் இக்கவிதைகள் உதவுகின்றன.
நூலின் வழியே நாம் அறியவேண்டிய சில கருத்துகள்;
வெறுப்பை
வெறுப்பால் துறக்கும்
வழி இல்லை இவ்வுலகில்
துடைக்கலாம் வெறுப்பை
அன்பெனும் தம்மத்தால்
அவர்களுக்குத் தெரியாது
விவாதித்துப் பகைக்கிறார்கள் அவர்களுக்குத் தெரியும்
அமைதியாய் இருக்கிறார்கள் எல்லோருக்கும் உண்டு
மரணம் என்பது
ருசித்த உணவு
காமம் பசித்த உடல்
வேட்கையின் வெளி
இயக்கமற்ற சோம்பல்
இவை மிகுந்த வாழ்வு
பெரும் புயலில் விசிறி அடிக்கப்பட்ட வேரற்ற மரம்
தேவையற்றவைகளில் தேவையையும் தேவைகளில் தேவையற்றதையும் பார்ப்பவர்கள்
உணர்வதே இல்லை
உண்மையானத் தேவையை
மழை புகும்
சரியாக வேயப்படாதக் கூரைக்குள்
ஆசை புகும்
சரியாகப் பக்குவப்படாத
மனதுக்குள்
தீர்க்கமாக
விழிப்பிற்கும்
விழிப்பின்மைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்தோர்
விழிப்பின் மகிழ்வில் திளைத்து
ஒளிரும் ஆளுமை அடைவர்
ஆற்றல்
நிறை மனம்
நன்னடத்தை
தன்னிலைக் கட்டுப்பாடு
நீதிமை
விழிப்பு நிலை
நல்வாழ்வு
உள்ளோர் வாழ்வர்
குன்றாத புகழோடு
மனம் உள்வாங்க முடியாதது
ஆசை இறக்கையால்
அலையும் பூச்சி
மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் ஒட்டிக்கொள்ளும்
மனத்தை அடக்களே அறிவு
மகிழ்ச்சியைத் தரும் அது
பகை செய்தீமை
வெறுப்பு நெருப்பின் வெம்மை இவற்றைவிட
கெடுமனம் செய்யும் தீமை
அளவிடற்கரியது
காற்றின் எதிர் திசையில்
செல்வதில்லை
மலர்களின் நறுமணமும்
சந்தன வாசமும்
வாசப் புகையும் கூட அப்படித்தான்
ஆனால்
நல்மன அறிஞனின் புகழ்
பரவும் எட்டுத்திக்கும்
மேனிலையான அறிவினைப் பெறாதவர்க்கு
வாழ்வே பெரும்பாரம்
தான் ஒரு அறிவிலி
என அறிபவன் அறிஞன்
தான் ஒரு அறிவாளி
எனக் கூறுபவன் அறிவிலி
அறிவிலியின் திறன்
அவனுக்குத் துன்பமே தரும்
அது
மதிப்பையும் ஞானத்தையும் அழிக்கும்
போற்றுதலாலும்
தூற்றுதலாலும்
அசைவதில்லை அறிவர்
காற்றால் அசைக்க இயலா
மலை அவர்கள்
காற்றில் காண முடியாத
பறவையின் தடங்களைப் போல
பெரியோருக்கு
தவறாமல்
மாறாமல்
மரியாதை தருபவருக்கு
நான்கு அமுதங்கள் அதிகரிக்கும் வாழ்நாள்
அழியாத அழகு
நிறைவான மகிழ்ச்சி
குறையாத வலிமை
பிறருக்குத் துன்பம் செய்வதில்
இன்பம் காண்பவர்
இன்பம் விரும்பினாலும்
அதை அடைய முடியாதவர்
கவனி
இந்த அழகிய உடல்
தீராத வலிகளின் குவியல்
நோய்க்கூடு
அதில் என்ன இருக்கிறது
எதுவும் தொலைந்துவிட
போரிடு
கோபத்தை எதிர்த்து அன்பினால்
தீமையை எதிர்த்து நன்மையால்
கருமியை எதிர்த்து தாராளத்தால் பொய்யை எதிர்த்து உண்மையால்
மற்றவர் தவறைக்
கவனித்துக் கொண்டே இருப்பவர் வெறுக்கப்படும் தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்
நான்
எல்லாவற்றையும் கடந்தேன்.
நான் எல்லாவற்றையும் துறந்தேன்
நான் எல்லாவற்றையும் விட்டேன்.
நான் எல்லாவற்றிலிருந்தும் விடுதலையானேன்.
நான் ஆசைகளை அழித்தேன்
நானே நான்கு உண்மைகளை உணர்த்தேன்
நான் இப்போது யாரை ஆசான் என்பேன்
எதிரிகளிடம் நட்பும் வன்முறையாளர்களிடம் அன்பும் பற்றுள்ளோரிடம் பற்றற்றும்
இருப்பவரே அறவோர்
இறந்த காலம்
நிகழ் காலம்
எதிர்காலம்
என எதிலும் ஒட்டாது
உலகியல் ஆசைகளைத் துறந்து
பற்றற்று வாழ்பவரே அறவோர்
புத்தரின் போதனைகளை அறியவும் அதன்வழி வாழ்வை அமைதிப்படுத்தவும் எழுதப்பட்ட இந்நூலின் மொழிபெயர்ப்பில் நூலாசிரியரின் ஆர்வமும் ஈடுபாடும் செயலைத் திறம்பட செய்ய வேண்டுமென்ற மனவேட்கையும் தெளிவாக உணரமுடிகிறது.
இளையவன் சிவா
நரசிங்காபுரம்
நூலின் பெயர் : தம்மபதம்
(புத்தர் போதனைகள்)
ஆசிரியர் : மூலம் கே. ஸ்ரீ தம்மானந்தா
தமிழில் யாழன் ஆதி
வெளியீடு: எதிர் வெளியீடு பொள்ளாச்சி
முதல் பதிப்பு : டிசம்பர் 2014
இரண்டாம் மறு அச்சு ஜூலை 2019
விலை: ரூபாய் 150
பக்கம்: 152
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்