தாயம்மா – மு தனஞ்செழியன்

தாயம்மா – மு தனஞ்செழியன்



தாயம்மா

*************

கயத்தாறு மயிலே
வஞ்சி மீன் கடலே
கரிசல் வாசனையில் நான் எழுதிப்பார்க்க
என்னவளே தாயம்மா
எங்குதான் போனியோ?

பருத்தி மாரு வெடிச்சு கெடக்கு
கம்மம் புல்லும் மொளச்சு கெடக்கு
காஞ்ச பூமி கொஞ்சம் நனைஞ்சு கெடக்கு
கட்டி கூட கறையலயே
கம்மாயில தண்ணீ இல்லை
ஓடையிலும் ஓன்னும் இல்லை
நல்லியிலும் தண்ணீ வல்ல
நீ செஞ்ச களி கூட காஞ்சிப்போச்சு
அகப்பை பூரா எறும்பு மொச்சு கெடக்கு
தொழுவத்தையும் பெருக்கவில்ல
ஆடு குட்டி அப்படியே கெடக்க
புலுக்க மூத்தரம் வீச்சம் அடிக்குது
சித்ரானங்கல வாங்கியந்த பலகாரமும்
பாழா போச்சே
எந்திரியேன் தாயம்மா, சால்சாப்பு வேணாம்மா
இன்னும் செத்த நேரம், ஆனாலும்
செத்த நீயும் வரப்போவதில்லை
மெட்ராசுக்குப் போன மகென்
ஒன் துட்டி செதி தெரிஞ்சும் வல்ல
புண்ணியாடி நீ போயிட்ட
தண்ணியில்லா காட்டுல
எனக்கு இப்பதேன் தாகம் எடுக்குது தாயம்மா…

— மு தனஞ்செழியன்



Show 5 Comments

5 Comments

  1. Jayasree Balaji

    கரிசலில் வாசகர்கள்களும் தாயம்மாவை தேட வாய்ப்புள்ள வரிகள். ஒருவர் இருக்கும் வரையில் அந்த உயிரின் மதிப்பு தெரியாது அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள். அதனை பிரதிபலிக்கும் வரிகள். வாழ்த்துக்கள் தோழர். மேன்மேலும் எழுதுங்கள்.

  2. மிக நேர்த்தியாக கவிதை வந்துள்ளது சிறந்த அழகியல் கவிதை

  3. Sakthi Bahadur

    பிரிவின் வலியை உணர்த்தும் வரிகள் அருமை தோழர்…

    • வீரமணி

      செத்த நேரம் ஆனாலும் செத்த நீ வர மாட்ட என்ற வரிகளில் உள்ள நிதர்சனம் கவிஞரின் கைவண்ணம். இந்த இளம் கவிஞருக்கு ள் இத்தனை ஆழ்ந்த யோசனை….

      என் இலக்கிய தாகம் தீர்க்கிறது இந்த கவிதை.
      தாய் அம்மா வை நானும் எழுப்புகிறேன்

  4. அனிதா, புதுக்கோட்டை

    வாழ்த்துகள் தோழர். எதார்த்தமான நடையில், மண் சார்ந்த வரிகள்.

    “செத்த நேரமானாலும் , செத்த நீயும் வரப்போவதில்ல ” – என்பவளிடம்
    “தண்ணியில்லா காட்டுல, இப்பதேன் தாகம் எடுக்குது தாயம்மா “.

    வலியோடு வெளிப்படும் வரிகள். நல்ல கவித்துவம் வாய்ந்த இளம் கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *