கனிகளை உண்பவன் யாரென்று
குழிதோண்டுபவனுக்குத்
தெரியாது
ஆனாலும்
செடி நடுகிறான்
விளைச்சலை உண்பவன் யாரென்று
உழுபவனுக்குத் தெரியாது
ஆனாலும்
விதைகளைத் தூவுகிறான்
கனியை ருசிப்பவனுக்குத் தெரியாது
அதை கனிய வைத்தவன்
யாரென்று…
சோறு உண்பனுக்குத்
தெரியாது
அதை விளைவித்தவன்
யாரென்று…
இந்த இடைவெளியின்
அகலம் தான்
ஏர் உழவனை
ஏளனப்படுத்துகிறது
விவசாயியை
வீதியில் நிறுத்துகிறது
ஊருக்கே பசிநீக்குபவன்
வயிறெரிந்தால்
வாசமிழந்துபோகும் மண்
கண்ணீரால் நிரம்பியது
கலப்பைகளின் காயம்…
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்…