‘ரஷ்யாவின் மிகப் பெரிய அறிவியலாளர் பாவ்லோவ். அவர் ஒரு நாயைப் பாடாய்ப்படுத்திப் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தினார். அந்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ உலகையே புரட்டிப்போட்டன.
அந்த நாய்க்கு உணவு வைக்கும் முன், ஒரு மணியடிப்பதை வழக்கமாக்கினார். பின்னர் அவர் உணவை வைக்காமல் வெறுமனே மணியை மட்டும் அடித்தார். அப்போதும் நாயின் உடலில் எச்சில், உணவை ஜீரணிக்க உதவும் சுரப்பிகளும் சுரப்பதைக் கண்டறிந்தார்.
இதிலிருந்து, ‘கொஞ்ச நாள் பழகியவுடன் ஒரு பொருளுக்கு மட்டுமல்ல, அதனுடன் பழக்கப்படுத்திய வேறொரு பொருளுக்கும் நமது உடல் அதே போல் வினையாற்றுகிறது’ எனும் உண்மையை அவர் வெளிக்கொணர்ந்தார். இதை ஆங்கிலத்தில் ‘கண்டிஷனிங்’ என்பார்கள்’
-இப்படி பல சுவாரசியமான உளவியல் தகவல்களை அள்ளி வீசுகிறது உளவியல் நிபுணர் ஜி.ராமானுஜம் எழுதிய ‘நலம் தரும் நான்கெழுத்து’ என்ற புத்தகம்.
இந்து தமிழ் திசையின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் வாரத்தொடாராக வெளிவந்த 31 சிறுகட்டுரைகளின் தொகுப்பு இது. உளவியல் சிந்தனைகளை நகைச்சுவை தெளிப்புகளோடு எளிமையாக எழுதியிருக்கும் உத்தி, நுட்பமான கருத்துகளை மிக இலகுவாக வாசகருக்கு கடத்துகிறது.
‘சமூக ஊடகங்களில் நண்பர்கள் ஏராளமாக இருந்தாலும் உண்மையாக உடுக்கை இழந்தவன் கைபோல் ஓடிவந்து உதவும் நட்புக்கள் குறைந்துள்ளன. மெய்நிகர் உலகில் மெய்நிகர் உறவுகளோடு மெய்நிகர் மகிழ்ச்சியோடு வாழ்கிறோம். ஆயினும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையோடு போட்டி போட்டுக்கொண்டு அதிகரித்து வருகிறது’ -நாம் கடக்கையில் கவனிக்க தவறுகிற மெல்லிய விஷயங்களை பார்வைக்கு இழுத்து வந்து பதிலும் சொல்கிறது இப்புத்தகம்.
‘அதீதங்களின் காலத்தில் வாழ்கிறோம் நாம். எதுவாக இருந்தாலும் ஒன்று கண்மூடித்தனமாக ஆதரிக்கிறோம் அல்லது கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம். சமூக ஊடகங்களில் இதை அன்றாடம் காண்கிறோம். இதே மனப்பாங்கையே நாம் சிந்திப்பதிலும் நமது உணர்வுகளையும் நடவடிக்கைகளையும் கையாள்வதிலும் உறவுகளைப் பேணுவதிலும் கொள்கிறோம்.
இப்படி நடுநிலை, நிதானம் என்பதே இல்லாததே இப்போதைய உளவியல் சிக்கல்களுக்கு முக்கிய காரணம்’ -நெத்தியலடித்தது போல இப்புத்தகம் சொல்லும் ஆழமான காரணம் திகைக்க வைக்கிறது. இந்த ஊடுபாவை எப்படி தவற விட்டோம் எனத் தேடும்படி செய்கின்றன இந்நூல் முன்வைக்கும் உதாரணங்களும் அறிவியல் தகவல்களும்.
உளவியல் என்றாலே பைத்தியக்கார ஆஸ்பத்திரி சமாச்சாரம் என ஒதுக்கிவைக்கும் பொதுபுத்தியில், எப்படி உளவியல் கூறுகள் மனிதர்களின் அன்றாடங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை ருசியாகப் பரிமாறுகிறது இப்புத்தகம். சுயமுன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி, பிள்ளை வளர்ப்பு, அலுவலக உறவு மேம்பாடு, சமூக நல்ஒழுகல் எனப் பல கோணங்களில் வாசகரை செழுமைப்படுத்துகின்றது இந்நூல்.
தமிழில் உளவியல் சார்ந்த தரவுகளை உறுத்தாத தமிழில் இவ்வளவு சுவையாக எழுத முடியும் என நிரூபித்து ஜெயித்திருக்கும் மருத்துவர் ராமானுத்தை நிச்சயம் பாராட்டலாம். மாறுபட்ட தளத்தில் வாசிப்பனுபவத்தை வழங்கியதற்காக இந்து தமிழ் திசைக்கு வாழ்த்துக்கள்.
இப்புத்தகத்தை வாசித்தவுடன் வாழ்க்கையும் சிந்தனையும் சில செண்டிமீட்டர்களாவது உயரும்.
சரி, அது என்ன நலம் தரும் 4 எழுத்து?
புத்தகத்தைப் படியுங்கள்!
————————————-
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு