நீதி உயர்ந்த மதி கல்வி – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : நீதி உயர்ந்த மதி கல்வி
ஆசிரியர் : முனைவர்.என்.மாதவன்
பக்கங்கள் : 182
விலை : ரூ. 170
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
குழந்தை மைய எழுத்தாளர்,வாழும் கல்வியாளர்,நல்லாசிரியர் விருது பெற்றவர்,தலைமை ஆசிரியர் முனைவர் என்.மாதவன்அவர்களால் எழுதப்பட்ட கல்வி சார்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகம் ஆகும்.
நீதி உயர்ந்த மதி கல்வி இப்புத்தகத்தில் மொத்தம் 33 கட்டுரைகள் உள்ளன.
எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகள் வாசிப்பை நேசிப்போம் ,செய்கூலி சேதாரம் ,எட்டாக் கனியாகும் எளிமை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்களா…?
கல்வி வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல கல்வியே வாழ்க்கை தான் என்கிறார் கல்வியாளர் ஜான்டூயி இந்தக் கருத்து மாதவன் ஐயா அவர்களின் கல்வி குறித்த எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது.
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மற்றும் கல்வி குறித்த பல சிந்தனைகளை உள்வாங்கிய ஆசிரியர் பணி மூலம் ஆழமான அனுபவம் பெற்ற மாதவன் ஐயா அவர்களின் கல்வி பற்றிய எதிர்பார்ப்புகளை விளக்குவதே இப்புத்தகம் ஆகும்.
இன்றைய உலகில் அறிவியல் மையமாகவும் இயந்திரமயமாகவும் மாறிவரும் கற்றல் கற்பித்தலை மனிதநேய பாங்காக அணுகுவது எப்படி என்பதை விளக்கும் கட்டுரைகள்.
செயல்வழி கற்றல் முறையில் தொடங்கி தேசிய கல்விக் கொள்கை வரை ஒவ்வொன்றையும் அலசி ஆராயும் நுட்பமான கருத்துக்களை கொண்ட கட்டுரைகள்.
ஒரு கல்வியாளராக மட்டுமில்லாமல் ஒரு ஆசிரியராக ஒரு பெற்றோராக ஒரு மாணவராக ஒரு சமுதாய நல விரும்பியாக என பல்வேறு கோணங்களில் கல்வி முறையை அலசி ஆராய்ந்து அழகான முடிவுகளை தொகுத்து வழங்கியிருக்கும் கட்டுரைகள்.
வாழ்க்கை அனுபவத்தோடு கற்றல் கற்பித்தால் அனுபவங்களையும் இணைத்து கல்வி சார் மாற்றங்களை முன்னெடுக்கும் கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகள்.
இப்புத்தகத்தில் என் மனதை மேலும் மேலும் சிந்திக்க வைத்தக் கருத்துக்கள்.
செயல்வழிக் கற்றலுக்கான அடிப்படை குழந்தைகளிடம் தலைமைப்பண்பை வளர்ப்பது மேலும் அவர்கள் பல்வேறு செயல்களை தாங்களே செய்து கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை கொடுப்பது ஆகும்.
எப்படி..? எங்கே..?என மதிப்பீடு செய்தால் வளர்ச்சிக்கு உதவும் என்ற கண்ணோட்டமே அறிவை வளர்க்கும் மாறாக மட்டம் தட்டுவதே மதிப்பீடு செய்வதன் நோக்கம் என்றால் விளைவு விபரீதத்தை ஏற்படுத்தும்.
வாசிப்பு என்பது ஒரு உற்சாகமூட்டக்கூடியதாகவும் தெரிந்ததிலிருந்து தெரியாத விஷயத்தை நோக்கி செல்வதாக அமைவதாகவும் ஒரு தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய செயல்பாடாகவும் அமைய வேண்டும்.
தேர்வு முடிவு என்பது வாழ்க்கையினை தீர்மானிக்க உதவும் ஆனால் அது மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்காது.
ஓராண்டு படித்த பாடத்தை மூன்று மணி நேரத்திற்கு நினைவுக்கு கொண்டுவரும் கலையே தேர்வு இந்தத்தேர்வில் தோல்வி என்பது ஒரு அனுபவமாகத்தான் பார்க்க வேண்டும் இதையே முடிவாகப் பார்க்க கூடாது.
மதிப்பீடு என்பது பல நேரங்களில் தனிநபர்களின் மனவெழுச்சிகளோடு தொடர்புடையது.
மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் போன்றவை சரியான மதிப்பீட்டை மீண்டும் வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஆகும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது பதின்ம வயதினரைக் கையாள்வது குறித்த சமூகம் முழுமைக்கும் புரிதல் மேம்பட வேண்டிய நிலையில் ஆசிரியர்களை மட்டும் குறை சொல்வது பொருளற்றதாகும்.
குழந்தைகள் அனைவரும் அவரவர்களின் கற்றல் வேகத்துக்கு ஏற்ப கற்க இயலும்.
குழந்தைகள் பள்ளிக்கு வருவது பாடம் சார்ந்த திறன்களோடு சமூகத்தில் பழகும் திறன்களையும் கற்றுக்கொள்ளத்தான்.
கண்டிப்பாக இந்தப் புத்தகம் மாணவர்கள் நலன் விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்கள் ,கல்வி குறித்த ஆராய்ச்சி செய்யும் இளைஞர்கள் போன்றோர் படிக்க வேண்டிய புத்தகம் ஆகும்.
நூல் அறிமுகம் எழுதியவர்:
வ.பெரியசாமி
புத்தக ஆர்வலன், தன்னம்பிக்கை பேச்சாளர் மற்றும் போட்டித்தேர்வு பயிற்சியாளர்,
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,சங்ககிரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

