வீட்டிற்கு வெளியே
மழை பொழிகிறதென்று
அம்மழையில் நனையாமலிருக்க
வீட்டிற்குள் நுழைகிறாள் அம்மா
அம்மாவின் பாதங்களையும்
சேர்த்து நனைத்தவாறே
தான் வெளியேறுகிறது
வீட்டையும் அம்மாவையும்
நனைத்த அந்த
அந்தி நேர நீர் மழை ,
*******
நீங்கள்
ஒரு பறவையை
பார்க்கின்ற பொழுதெல்லாம்
உங்கள் மனங்களை
ஒரு மரமாகவே வளர விடுங்களேன்
உங்கள் தேகங்கள் முழுவதும் முளைக்க தொடங்கிவிடுகின்றன
ஒரு கிளையும்
அக்கிளையில் பல இலைகளும்
அந்த இலைகளை
சுற்றிசு சில கூடுகளும் ,
********
எனது தூரத்து
கிளையில்
அமர்ந்துகொண்டு சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது
ஓர் சிட்டுக்குருவி
கையிலிருந்த
செல்போனினால் புகைப்படமொன்றை
எடுக்க முயல
மீண்டும் பறந்து போய்
பக்கத்துக் கிளையில்
அமர்ந்தது அந்த சிட்டுக்குருவி
மீண்டும் ஒரு புகைப்படத்தை
எடுக்க முயலும்
என் பார்வையிலிருந்து
தப்பித்து தூரம் போய்
மீண்டும் திரும்பி பார்க்கிற சிட்டுக்குருவிகளின்
கண்களுக்குள்
வானுயர வளர்ந்திருக்கிறது இலைகளற்ற சில கம்பிகளால்
பின்னிய பல கோபுர மரங்கள் ,
********
பற மோளம்
அடிக்கும் சாவு வீடு
ஆட்டம் பாட்டமென நீளும்
நடு சாம இரவு
ஊது பத்திப் புகையை
உள்ளிழுக்கும் மூக்குத் தூவாரங்கள்
பலரது கண்களிலிருந்து வழியும்
செத்துபோனவரின்
தண்ணீரான நினைவு வழித்தடங்கள்
கீழிருந்து வானம் போய்
மேகம் மீது மோதி வெடிக்கும்
வானவெடிப் பட்டாசுகள்
வெத்தலை பாக்கு துருக்கப்பட்ட
பல பொக்கவாய்ப் பாட்டிகள்
யார் செத்ததென்று கேட்க
மாடு அறுக்கும்
தாத்தா செத்து
போயிட்டாரென்று
ஊரெல்லாம் ஒரே பேச்சு
விடிந்தால் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை கறிக்கு
நாங்க எங்கே
போவதென்றே கேள்வியை
அப்பிணத்தைக் கடந்து போகிற
ஒவ்வொருவரின்
கடைசி அழுகையும்
சொல்லும் ,
கவிஞர் ; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.