“எப்பொழுது வேண்டுமானாலும் என்னை மாநில முதல்வர்கள் தொடர்பு கொள்ளலாம்” இது பிரதமரின் அறிக்கை. எல்லா ஊடகங்களிலும் இது தலைப்புச் செய்தி ஆனது. எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்து பிரதமரிடம் மாநில முதல்வர்கள் என்ன கேட்பார்கள்? என்ன கேட்க முடியும் ? அப்படி ஒருவருக்கு ஒருவர் பேசி முடித்துக் கொள்ளும் அளவு என்ன இருக்கிறது? அப்படி முடியும் எனில் மத்திய அமைச்சரவை இதர அரசியல் சாசனத்தின் நடைமுறைகள் எதற்கு? “இதுவரை 6 மாநிலங்களில் எங்களை ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். ஆனால் கேரளாவின் அனுபவங்கள் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திற்கும் எளிதாக அப்படியே நடைமுறைப்படுத்த முடியாது” இந்த நுட்பமான செய்தி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா அவர்களின் பேட்டியில் இருக்கிறது. அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற நாளிதழ் வாஷிங்டன் போஸ்டில் தெளிவாகி உள்ளது. ஆனால் இந்தியாவில் யாருடைய கவனத்தையும் இந்த வார்த்தைகள் பெற வில்லை.
மாநிலங்களின் தனித்துவம்:
கேரளம் மட்டுமல்ல. இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது. கேரளாவை எடுத்துக்கொள்வோம். அது, கல்வி சுகாதாரம் என மனித வளர்ச்சி குறியீட்டில் மட்டும் முன்னேறிய மாநிலம் அல்ல. ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் மாநிலம். மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். தொற்று நோயை எதிர்கொள்வதில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வருமானம், தொழில்கள், தொழில்முறை, மக்கள்தொகை மக்கள் தொகை பரவல், வீட்டுவசதி இப்படி எல்லா காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் அளவிலான வேறுபாடுகள் கூட முக்கியமானவை. அவற்றுக்கும் கூட ஒரு முக்கிய பங்கு இருக்கிறது.
கேரளா ஓகி புயல் பாதிப்பின் போது மீட்ப்பு படையினர்
அத்தோடு சுகாதாரம் மாநிலப் பட்டியலில் இருக்கிறது. எனவே கொரானா தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் மாநிலங்களுக்கு ஓர் தனித்துவ இயல்பும் பங்கும் இருக்கிறது. பேரிடராக மாற யார் காரணம்?: “கொரானா தொற்று நோய் ஒரு தேசிய பேரிடர்” என மத்திய அரசின் தேசிய பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது. கொரானா தொற்று ஒரு தேசிய பேரிடராக மாறவும் பல்வேறு வகையில் மத்திய அரசே காரணம். 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று முதல் தொற்று கண்டறியப்பட்டது முதல் மார்ச் 18ஆம் தேதி வரையான காலகட்டத்தில், ஏற்பட்ட கவனக் குறைவுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே, கொரானா தொற்று ஒரு பேரிடராக மாறவும் மத்திய அரசே அடிப்படை காரணம்.
ஒரு நோய் தொற்று தேசிய பேரிடராக மாறக் காரணம் மத்திய அரசு தான் காரணம் எனில் அதனை மேலாண்மை செய்வதும் கட்டுப்படுத்துவதும் ஆகியவையும் மத்திய அரசு செய்ய வேண்டியதே. அதன் கடமையும் பொறுப்பும் ஆகும். தொடக்கம் முதல் தெளிவற்ற நிலையும் அதன் விளைவுகளும்: மார்ச் மாதம் 24ம் தேதியன்று தேசிய பேரிடர் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது முதலே தெளிவற்ற பார்வை மத்திய அரசிடம் இருப்பதை அனைவரும் உணர முடியும். கொரானா ஒரு தேசிய பேரிடர் என்று அறிவித்த 72 மணிநேரம் கழித்தே இதில் பாதிக்கப்பட்டோருக்கான பொருளாதார நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டது.
இந்த 72 மணி நேரத்தில் தான் நாடு முழுவதும் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தோர் நிச்சயமற்ற தன்மையை உணர்ந்து தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறினர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென்று வேலையை இழந்தனர். உணவு தண்ணீர் இன்றி கால்நடையாக பல நூறு கிலோ மீட்டர்கள் செல்ல தலைப்பட்டனர். தங்குமிடங்கள் இன்றி தவித்தனர். கூட்டம் கூட்டமாக வெளியேறினர். எந்த நோக்கத்திற்காக பேரிடர் மேலாண்மை சட்டம் அமலுக்கு வந்ததோ அதனையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் நிலைமை மோசமடைந்தது.
அதோடு, அந்த நிவாரணத் திட்டம் போதுமானதாக இல்லை. இதனைக் கடைக்கோடியில் இருக்கும் மனிதன் கூட புரிந்து கொள்ள முடியும். எனவே தான் அரசின் நிவாரண உதவிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். தொடக்கம் முதலே மத்திய அரசின் தெளிவற்ற திட்டமிடல் தெரிந்தது. மத்திய அரசின் இந்த குளறுபடிகளுக்கு மாநில அரசுகள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. “முறைசாரா தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருங்கள். அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ரொக்க மானியம் உங்கள் வீடு அல்லது குடியிருக்கும் இடத்தை தேடி வரும். அவர்களை அங்கேயே தங்க வைக்க வேண்டியதும் உணவளிக்க வேண்டியது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பு. அந்த நிறுவனத்திற்கு நிவாரண உதவிகளை ஈடுகட்ட வேண்டியது அரசின் பொறுப்பு.” என்று அறிவித்திருந்தால் பெரும்பகுதி மக்கள் பட்டினியால் அல்லது உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
தேசிய பேரிடர் சட்டம் என்ன சொல்கிறது?:
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி பேரிடர் அறிவிப்பு செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள் அவற்றின் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியது பேரிடர் மேலாண்மை முகமையின் அல்லது மத்திய அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும். இப்படி பேரிடரின் பணிகளை ஒருங்கிணைப்பது கண்காணிப்பது நிர்வகிப்பது அதற்கான திட்டங்களை மத்தியில் தீட்டுவது மாநிலங்களுக்கு உதவுவது அறிவியல் தொழில்நுட்ப உதவி செய்வது மனித வளம் மற்றும் இதர வளங்களை பயன்படுத்த உதவி செய்வது பயிற்சி அளிப்பது வரவிருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டுவது இவை எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவி ஆகியவற்றை பேரிடர் மேலாண்மை முகமை அல்லது மத்திய அரசு செய்ய வேண்டும் என்பது அதன் விதிகளில் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது மட்டுமே தனது அடிப்படையான கடமையாக மத்திய அரசு கருதி இருப்பதாக தோன்றுகிறது.
பேரிடர் காலத்தில் ஒன்றிய அரசின் கடமைகள் பொறுப்புகள்:
என்றுமில்லாத ஒரு கொடிய நோய் பேரிடரை எதிர்கொள்ளும்போது ஒவ்வொரு மாநிலமும் பின்பற்றும் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகளை பாராட்டுதல், பகிர்ந்து கொள்ளுதல் இதில் ஒரு முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் முன்னோடி மாநிலங்களின் முன்மாதிரி அனுபவங்களை மற்ற மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள இயலும். இதனை வெற்றிகரமாக கையாண்டு வரும் எந்த ஒரு மாநிலத்தையும் மத்திய அரசு பாராட்ட தயாராக இல்லை. இப்படி வெற்றிகரமாக கையாண்டு வரும் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, ஒரிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா போன்ற அனைத்து மாநிலங்களும் மத்தியில் ஆட்சியில் செய்யும் கட்சி ஆளாத மாநிலங்கள். இதனாலோ என்னவோ இதுபற்றி மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. பேரிடரை எதிர்கொள்ளும் நேரத்தில் கட்சி அரசியல் காரணமாக அதனை கண்டுகொள்ளாமல் இருப்பது முறையற்றது.
பிரதமரின் தார்மிக பொறுப்பு:
பேரிடர் மேலாண்மை சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தால் மட்டுமே போதாது. பேரிடர் காலத்தில் தான் திட்டமிட்ட, திட்டமிடப்படாத, பயத்திலும், அச்சத்திலும், பீதியிலும், நம்பத்தகாத, அறிவியல்பூர்வமற்ற உண்மைக்கு விரோதமான பல்வேறு செய்திகள் உலா வரக் காரணமாகிறது. வீட்டிலேயே தங்கி இருந்தாலும் சமூக வலைதளங்கள் வாயிலாக பல தகவல்கள் வந்துசேரும். ஒவ்வொரு நாளும் பேரிடர் பாதித்த நாட்டின் பிரதமர் ஊடகங்கள் வழியாக மக்களின் சந்தேகங்கள் கேள்விகள் தீர்த்து வைக்க வேண்டும். இதுவும் ஓர் அடிப்படை கடமை. உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளான பல்வேறு நாடுகளில் அந்த நாட்டின் அரசியல் தலைமை அன்றாடம் மக்களை ஊடகங்கள் வாயிலாக சந்தித்து பேசுகின்றனர். ஆனால் நம் நாட்டின் பிரதமர் வீடியோ பதிவுகளை அனுப்பிவைத்து விட்டு வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்.இது மக்களின் துயரை துடைக்கவும் நம்பிக்கை ஊட்டவும் போதுமானது அல்ல.
இது விஷயத்தில் நேரடிப் பொறுப்பு கடமை மத்திய அரசுக்கு உண்டு. எனவே மத்திய அரசு நாள்தோறும் ஊடகங்களை சந்தித்து அன்றைய நிலை குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மாநில அரசுகள் தனித்துவமானவை என்றாலும் அதற்கு தேசிய பேரிடர் பணிகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மட்டுமே உண்டு. நிதி, அறிவியல் தொழில்நுட்பம், பரிசோதனைக் கருவிகள் தற்காப்புச் சாதனங்கள் இவற்றின் இறக்குமதி/பகிர்வு/உற்பத்தி விநியோகம் ஆகியவற்றை அளிக்க வேண்டியது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி ஒன்றிய அரசின் கையில்தான் இருக்கிறது.
இதனை எவ்வளவு தூரம் மத்திய அரசு செம்மையாக நிறைவேற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இன்றைய நிலையில் மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கிறது? மாநிலங்களில் பேரிடர் நிவாரண நிதி ஒன்றை மத்திய அரசு அறிவித்தது. மொத்தமாக 11092 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இது பல்வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுமார் 1000 கோடி முதல் 20 கோடி வரை பகிர்ந்து அளிக்கப்பட்டது. மிகத் திறம்பட பணியாற்றி வரும் மாநிலங்களுக்கு மிகக் குறைந்த நிதி. இதற்கு என்ன அளவுகோல்? ஏன் இந்த பாரபட்சம்? அல்லது வேறுபாடு? மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அரசின் பொறுப்பு ஒன்றிய அரசின் கடமை.
மாநில அரசுகளின் தற்போதைய நிதி நிலை:
ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி கரவான் இதழுக்கு கேரள நிதியமைச்சர் ஒரு பேட்டி அளித்தார். அதில் நாளது தேதி வரை மத்திய அரசு கொரானா நோய் தொற்று சிகிச்சை பேரிடர் நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை. ஜிஎஸ்டி இழப்பீடு நிதி இன்னும் வந்து சேரவில்லை. வரவு செலவு திட்டத்தில் ஆண்டு முழுவதுக்குமாக ஒதுக்கீடு நிதி செய்த நிதி மூன்றே மாதத்தில் கரைந்துவிட்டது. தேசிய சுகாதார முனையம் மற்றும் ஜிஎஸ்டி பாக்கி தொகைகள் ஆகியவையும் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. இதர துறைகளுக்கு ஒதுக்கிய பணத்தை எடுத்து செலவழித்து வருகிறோம். மாநிலத்தின் வருவாய் 20 விழுக்காடு குறைந்திருக்கிறது. மதுபானம் லாட்டரி இவற்றின் வழியாக வரும் வருமானமும் நின்று போய்விட்டது.
கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்
மாநில அரசின் கடன் வாங்கும் தன்மையை அதிகரிக்கவும் மத்திய அரசு அனுமதிக்கவில்லை. இதுபற்றி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தான் ஒரு கடிதம் எழுதியிருப்பதாகவும், ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் மாநில முதல்வர்கள் மற்றும் வல்லுனர்கள் கூட்டத்தை கூட்டி இரண்டு முழுநாள் விவாதிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதன் அடிப்படையில் மத்திய அரசுக்கும் மக்களுக்கும் இந்த நிதி ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளை எடுத்துக் கூற விரும்புவதாகவும் அவர் கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது போன்று தானே மற்ற மாநிலங்களிலும் நிலைமை இருக்கும். ஆனால் அவர்களில் பலர் வெளிபடையாக பேசவில்லை.
சுருங்கக்கூறின், ஒரு தேசிய பேரிடர் மேலாண்மையில் ஒன்றிய அரசுக்கே பெரும் பொறுப்பு கடமை இருக்கிறது. அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள், மருந்துகள், பொருளாதார உதவிகள், பொருளாதார நிவாரணம் நிதி, ஆகிய அனைத்தும் ஒன்றிய அரசின் முழு பொறுப்பும் கடமையும் ஆகும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை மாநிலங்களில் நடைமுறைப்படுத்துவதில் உள்ளூர் நிர்வாகம், மனித வளம் ஆகியவற்றில் உதவி செய்வதாக மட்டுமே மாநில அரசுகளின் பொறுப்பும் கடமையும் இருக்கும்.
ஆனால் இப்போது மொத்த பொறுப்பும் கடமையும் மாநில அரசுகளின் பெரும் சுமையாக நெருங்குகிறது. ஒன்றிய அரசு தன் கடமையை பேரிடர்மேலாண்மை சட்டத்தின் படி சரிவரச் செய்யவில்லை. இது தவறு என்ற வலுவான குரல் மாநில அரசிடமிருந்து ஒலிக்கவில்லை என்பது வேதனையானது. கூட்டாட்சித் தத்துவம் குறைவின்றி வேலை செய்தால்தான் உண்மையான ஜனநாயகத்தை நாம் அனுபவிக்கிறோம் என்று பொருள். நோய் பேரிடர் மேலாண்மையில் மருத்துவம் மட்டும் அறிவியல்பூர்வமாக இருந்தால் போதாது உன்னதமான கூட்டாட்சி அரசியலும் அறிவியல்பூர்வமாக செயல்பட வேண்டும்.
~~~~~~~~~~
கட்டுரையாளர்,
ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளாதாரத் துறைத் தலைவர்,
தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர்.
பேரிடம் மேலாண்மையில் மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் கடமைகள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய கட்டுரை பாராட்டக்கூடிய பல விசயங்களும் சிந்திக்க கூடிய சில விஷயங்களும் உள்ளன. ஆம். முறைசாரா தொழிலாளர்களுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தாங்கள் கூறிய ஆலோசனை மிக மிக பயனுள்ளதாக இருந்திருக்கும் தக்க சமயத்தில் அரசுக்கு இந்த ஆலோசனை கிடைத்திருந்தால். அதே நேரத்தில் தேசிய பேரிடர் சட்டம் என்ன சொல்லுகிறது மத்திய அரசு இதனை எப்படி செய்துள்ளது என்பதில் தங்களது ஆழமான ஆய்வுகள் தெரிகிறது. மத்திய அரசின் கடமைகள் பொறுப்பு கள் என்ற தலைப்பில் கேரளா அரசின் பாராட்டத்தக்க செயல்கள் மற்றும் அதனை மத்திய அரசு பாராட்டாமல் இருப்பது என்ற வாதம் ஏற்புடையதாக இருந்தாலும் இதற்கு இன்னும் மறு யோசனைகள் கூறி இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிரதமர் தினமும் மக்களிடம் வந்து ஆன்லைன் மூலம் பேச வேண்டும் என்ற கருத்து பாராட்டுக்குரியது. அதே சமயத்தில் இந்த பேரிடர் காலத்தில் மாநில அரசுகளின் பொறுப்பு கள் மிக அதிகமாக உள்ள இந்த காலகட்டத்தில் தாங்கள் இன்னும் சற்று யோசித்துப் ஆலோசனை வழங்கினால் அது பாராட்டுக்குரியதாக மட்டும் இல்லாமல் நம் மக்களுக்கு மிக மிக பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
மிக்க நன்றி சார்
இப்படிக்கு
ரா. ரேவதி
ஈரோடு.