என்ன செய்வது
யாரிடம் சொல்வது..
விதி என்ற ஏட்டில் இருப்பது
நாங்கள் மட்டும் தானா ?
பகட்டான வாழ்க்கை வாழ
பகல் கனவு கூட கண்டதில்லை..
பசியின்றி உயிர் வாழ்ந்து
படுத்துறங்க வேண்டுமப்பா..
அதற்கே இங்கு வழியில்லை..
குருதியது உடலுக்குள்
குறைவாகத்தான் இருக்கிறது..
குணமின்றி உடலெல்லாம்
குன்றித்தான் கிடக்கிறது..
இத்தனைக் காலமும்
இளைப்பாறுதல் இல்லை
எங்களழு குரலும்
எங்கும் கேட்கவில்லை..
வெயிலிலும் காயுது
பெயலிலும் அழியுது பயிரு
பஞ்சத்தில் காயுது
பசியில காயுது வயிறு..
சருகுகள் போலே
சரிந்தோம் கீழே..
சாதகமாய் இல்லை
சாவு கூட எங்களுக்கு..
நாத்து நட்டு நாத்து நட்டு
நட்டப்பட்டோம் கட்டப்பட்டோம்
தன்டல்காரன் முன்னாடி
கடங்காரனாக்கப்பட்டோம்..
அரசுக்கு மனு கொடுத்தா
அலட்சியமா பாக்குது..
போராட்டம் முன்னெடுத்தா
எங்களத்தான் தாக்குது..
எங்கள் உயிர் போனாலென்ன
என்வென்றும் கேட்கமாட்டார்கள்
எட்டி கூட பார்க்கமாட்டார்கள்..
நாங்கள் யார் ?
சாதாரன விவசாயிகள் தானே..
ஏ.ஆகாஷ்
கடுக்கலூர்