1866 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் மாசிசூசிட்ஸ் மாகாணத்தில் பீடிங் மலைகளில் ஆனி சலிவன் பிறந்தார். ஜோஹானா மான்ஸ்பீல்டு சலிவன் தான் இவரது இயற்பெயர். பின் நாட்களில் இவர் ஆனி சலிவன் மேசி என்று அழைக்கப்பட்டார். பார்வையற்றோர்களுக்கான பிரெய்லி எழுத்துமுறையை கண்டுபிடித்த ஹெலன் கெல்லரின் ஆசிரியர் தான் இந்த ஆனி சலிவன் மேசி. ஹெலனை வெற்றி பெற்றவளாக உணர வைப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாக எண்ணி வாழ்ந்த அர்ப்பணிப்பு ஆசிரியர். ஓர் ஆசிரியரின் நம்பிக்கையும், விடாமுயற்சியும் தனது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இவ்வுலகற்கே வழிகாட்டும் என்பது சலிவனின் வாழ்க்கையில் இருந்து நாம் பெரும் பாடமாகும்.
அயர்லாந்திலிருந்து குடிபெயர்ந்த தாமஸ், ஆலின் சலிவன் தம்பதியருக்கு மூத்த மகளாக ஆனி சலிவன் பிறந்தார். இவர் ஐந்து வயதாகும் போது இவரது கண்களில் ‘ட்ரோகோமோ’ நோய் தொற்று ஏற்பட்டு அதனால் கிட்டத்தட்ட அவரது பார்வையை இழந்துவிட்டார். இவர் எட்டு வயதாக இருக்கும் போது இவரது தாயாரும் காசநோயால் இறந்து விட்டார்.
தாயின் மறைவிற்குப் பிறகு இவர்களது தந்தையும் இவர்கள் கைவிட்டு விட்ட நிலையில் சலிவனும் அவரது தம்பி ஜேம்ஸ் என்கின்ற ஜிம்மியும் ட்விக்ஸ்பர்க்கில் உள்ள ‘ஆம்ஸ் ஹவுஸ்’ என்ற காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளுக்கு காப்பகம் கொடுமையாகவே இருந்தது. பிற்காலங்களில் சலிவன் தனது காப்பக அனுபவங்களை பகிரும் போது, “காப்பகங்கள் குழந்தைகள் ஆனந்தமாகக் கொஞ்சி விளையாடும் இடங்கள் அல்ல. இடம் பற்றாக்குறையில் நாங்கள் சிக்கித் தவித்தோம். நானும் எனது தம்பியும் பசியால் வாடினோம். நோய்வாய்ப்பட்டு இறந்து போன என் வயது குழந்தைகளின் சடலங்களை அவர்களுக்கு அடக்கம் செய்ய குழி தோண்டும் வரை எங்கள் அறையிலேயே வைக்கப்படுவர். அந்த சடலங்களின் மேல் ஏறி ஓடி விளையாடும் எலிகளை துரத்திப் பிடித்து நானும் என் தம்பியும் விளையாடுவோம். அவ்வளவு கொடுமையான இடமாகவே குழந்தைகள் காப்பகங்கள் இருந்தன.” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இவ்வளவு கொடுமைகளிலும் கண்பார்வை பாதிக்கப்பட்ட சலிவனுக்கு ஆறுதலாக இருந்தது அவர் தம்பியின் அரவணைப்பு மட்டும் தான். தாலாட்டு பாடி தூங்க வைத்த தம்பியும் ஒருநாள் இல்லாமல் போய்விட்டான் என்பது சலிவன் வாழ்வின் மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருந்தது. தம்பியின் இறப்பிற்குப் பிறகு சலிவனுக்கு இரண்டு முறை கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவை இரண்டுமே பயன் அளிக்கவில்லை. இதற்கிடையே இவர் தங்கி இருந்த ட்விக்சன்பேர்க் காப்பகத்தின் மீது சிறர் பாலியல் வன்கொடுமை, நரபலி இடுதல் போன்ற புகார்கள் எழவே அதை விசாரிக்க ஒரு குழு 1880களில் காப்பகத்திற்கு வந்தது. அக்குழுவின் முன் சென்று சலிவன் ‘தான் படிக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை கூறினார். பார்வை தெரியாத நிலையில் படிக்க வேண்டும் என்ற இந்த சலிவனின் உறுதியை கண்டு பிராங்கிளின் பெஞ்சமின் ஆனியை பார்வையற்றவர்களுக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்த்தார்.
பெர்கின்ஸ் பள்ளியில் இவர் படிக்கும்போது லாரா என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த லாரா என்பவர்தான் பள்ளியில் படித்த முதல் கண் பார்வையற்ற காது கேளாத பட்டம் பெற்ற மாணவி. லாராவிடம் இருந்துதான் ஆனி சலிவன் கைமுறை அகர வரிசை எழுத்துக்களை (Manual Alphabets, Finger Alphabets) கற்றுக் கொண்டார். தனது இருபதாம் வயதில் 1886- இல் பெர்கின்ஸனில் இருந்து பட்டதாரியாக வெளிவந்தார். இச்சமயங்களில் இவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் மற்றும் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் பலனாக கண்பார்வை பெற்றிருந்தார்.
இந்த நேரத்தில் தான் ஆர்தர் கெல்லரிடம் இருந்து பெர்கின்ஸ் இயக்குனருக்கு ஒரு கடிதம் வருகிறது. ஆர்தர் கெல்லரின் பார்வையற்ற, காது கேளாதே ஏழு வயது பெண் குழந்தைக்கு ஓர் ஆசிரியர் தேவைப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அப்பணிக்கு பொருத்தமானவராக சலிவன் இருப்பார் என்றெண்ணி பிராங்கிளின் பெஞ்ச்மின் ஆனியை அனுப்பி வைக்கிறார். 1887 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் தேதி, முதல் முதலாக காது கேளாத பார்வையற்ற குழந்தையான ஹெலனை சந்திக்கிறார் ஆனி சலிவன். அந்த நாள் முதல் 1936 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் தனது 70 வது வயதில் உயிர் நீக்கும் வரை ஆசிரியராகவும், உற்ற வழிகாட்டியாக ஹெலனின் கைகளை பிடித்தபடி தன் வாழ்வை அர்ப்பணித்தார் ஆனி சலிவன்.
ஹெலனின் இல்லத்தில் ஆனி சலிவனின் ஆசிரியர் பணி மிகவும் சவாலானதாகவே இருந்தது. செல்வந்த குடும்பத்தில் செல்ல பிள்ளையாக இருந்த ஹெலனின் குறைபாடுகளை மனதில் கொண்டு அவரது பெற்றோர் அக்குழந்தையைக் கட்டுப்பாடுகள் இன்றி வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஹெலனின் நடைமுறை கட்டுப்பாட்டை இழந்து போகும் வேலையில்தான் அவர்கள் தங்களின் தோல்வியை உணர்ந்து ஓர் ஆசிரியரை தேட ஆரம்பித்து ஆனி சலிவனை பெற்றனர். கட்டுப்பாடற்ற கோபம், பிறரை அடித்தல், பொருட்களை இரைத்தல், உடைத்தல், என பல சேட்டைகளை செய்து கொண்டிருந்தாள் ஹெலன். உணவு உண்ணும் வேலையில் மேசையில் அமர்ந்து சாப்பிட தெரியாது அவளுக்கு. அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவரவர் தட்டுகளில் இருந்தும் எடுத்து,
தான் சாப்பிடுவாள். ஒழுங்கீனமற்ற இப்பழக்கத்தை முதலில் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தார் சலிவன். அதற்கு முதல் தடையாக இருந்தது ஹெலனின் குடும்பத்தார் தான். ஆனால் சலிவன் கண்டிப்பாக ஹெலனிற்கு முதலில் கற்றுத்தர வேண்டியது ஒழுக்கம்தான் என்று உறுதியாக இருந்தார். சலிவனின் விடாப்பிடியான பிரிவாதத்தால் ஹெலன் முதன்முதலாக ஒர் இடத்தில் அமர்ந்து, தனது தட்டில் இருந்தே உணவை உண்டதே சலிவன் அவருக்கு கற்றுக் கொடுத்த முதல் பாடமாகும். ஆனால் இது ஹெலனுக்கு தலைவன் மேல் வெறுப்பும், கோபத்தையும் உண்டாக்கியது. அதன் காரணமாக தலைவன் கற்றுக் கொடுக்கும் மற்ற பாடங்களை ஹெலன் மனமுவந்து ஏற்க மறுத்தார். கற்பிக்க ஆசிரியர் தயார், ஆனால் எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்தால் ஹெலன். சலிவனும் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
ஹெலனின் தாய் தந்தையரிடம் பேசி , குழந்தை முற்றிலும் தன் கட்டுப்பாட்டில் இருக்குமாறு ஒரு தனிமையான இடத்தில் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சலிவன் கேட்டுக்கொண்டார். ஹெலனின் தந்தை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் சென்று விடுங்கள். என் மகளை அப்படி தங்களிடம் ஒப்படைக்க முடியாது என்று மறுத்துவிட்டார். ஆனால் ஹெலனின் தாயாருக்கு சலிவன் தான் தன் மகளுக்கு சரியான வழிகாட்டியாக இருப்பார் என்ற நம்பிக்கை இருந்ததால் ஆர்தர் கெல்லரிடம் பேசி இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்.
இப்போது சலிவனும் ஹெலனும் மட்டும் ஒரு தனி வீட்டில் இருந்தனர். தற்போது ஹெலன் தன்னுடைய எந்த ஒரு தேவைக்கும் சலிவனை மட்டுமே சார்ந்து இருக்க நேர்ந்தது. இதுதான் சலிவனின் திட்டமும் கூட. தற்போது ஹெலனின் பிடிவாதம், முரட்டுத்தனம் அனைத்தும் குறைந்தது. சொல்வதைக் கேட்க ஆரம்பித்தார்.
“என்னது சலிவன் சொன்னார்; ஹெலன் கேட்டாரா??” என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. ஹெலன் கேட்கும் விதத்தில் சலிவன் சொன்னார். இங்குதான் ஓர் ஆசிரியராக சலிவன் மிளிர்கிறார். நன்னூலில் கற்பித்தல் இலக்கண பாடலில் ஒரு வரி உண்டு,
“கொள்வான் கொள் வகை அறிந்து அவன் உள்ளம் கொள்ள
கோட்டம் இல் மனதில் நூல் கொடுத்தல் என்ப”
ஆசிரியர் தனக்கேற்ற கற்பித்தல் உத்தியை பயன்படுத்துவதை விட மாணவர்களுக்கு ஏற்றவாறான கற்பித்தல் முறையை பின்பற்றி கற்பிக்க வேண்டும். ஹெலன் பிற குழந்தைகளில் இருந்து மாறுபட்டவள். எனவே சலிவன் இவளுக்காக தேர்ந்தெடுத்த முறைதான் ‘கையேடு எழுத்துக்கள்'( Manual Alphabets) ஆகும். ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்துக்கும் தன் விரல்களில் குறியீடு வைத்திருந்தார். உதாரணமாக அவர் ஹெலனுக்கு முதலில் கற்றுத் தந்த வார்த்தை ‘பொம்மை’ ‘DOLL’ என்பதுதான். D-O-L-L என ஒவ்வொரு எழுத்துக்களின் கையேடுக்குறியை ஹெலனின் கைகளில் உச்சரிப்பார். ஹெலன் கூர்மையான தொடு உணர்வு கொண்டிருந்ததால் அக்குறியீடுகளை உட் கிரகித்துக் கொண்டார். ஒரு பொருளின் பெயரை கைகளில் உச்சரித்த பின், ஹெலனிடம் அப்பொருளைக் கொடுப்பார். ஹெலனின் கைகளை தனது முகத்தில் வைத்து தலையை ஆமாம் என்பது போல் அசைப்பார். அவ்வாறு செய்தால் அப்பொருளின் பெயர் அது என்று ஹெலன் புரிந்து கொள்வார். இம்முறையை ஹெலன் வெளி உலகோடும் மனிதர்களோடும் தன்னை தொடர்பு படுத்திக் கொள்ள சலிவன் பயிற்றுவித்தார். ஹெலனும் சலிவனும் மட்டுமே இருந்த தனிமை ஹெலனை நிறைய வார்த்தைகளையும், ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்ள உதவியது. ஹெலனின் குடும்பத்தார் மட்டும் அவ்வப்போது வந்து என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு செல்வர்.
ஹெலனின் தந்தை இரண்டு வாரங்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அந்த இரண்டு வாரங்கள் முடிவடைய போகிறது. சலிவன் பல வார்த்தைகளை ஹெலனுக்கு இந்த இரண்டு வாரங்களில் கற்றுக் கொடுத்திருந்தாலும், தனக்கு இன்னும் கொஞ்ச கால அவகாசம் தேவை என்று ஆர்தரை கேட்டுக் கொண்டார். ஆனால் ஆர்தர் கெல்லர் மறுத்துவிட்டார். எனவே மீண்டும் ஹெலனும், சலிவனும் ஹெலனின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.
ஏற்கனவே அரைகுறை மனத்திருப்தியோடு வந்திருந்த சலிவனுக்கு, தன் வீட்டிற்கு வந்த பிறகு ஹெலன் பழையபடி தான் கற்ற அனைத்தையும் உதறிவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வது பெரும் ஏமாற்றத்தை தந்தது. தன்னுடைய கடின உழைப்பு அனைத்தும் வீணாகப் போனது என்ற வருத்தத்தை விட, இப்படியே போனால் ஹெலனின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியே அவர் முன் நின்றது. எனவே இந்த அணுகுமுறையை அனுமதிக்க கூடாது என்று முடிவெடுத்தார்.
பல வார்த்தைகளை கையேடு உச்சரிப்பு முறையில் கற்ற ஹெலன் தண்ணீர் -WATER என்ற வார்த்தையை மற்றும் கற்றுக் கொள்ளவில்லை. இவ்வார்த்தையை பலமுறை வெவ்வேறு வடிவங்களில் ஹெலனுக்கு கற்றுத் தர முயற்சித்தும் சலிவனால் முடியாமல் தோல்வியைக் கண்டார். எனவே இதனை கற்றுத்தரும் வரை ஹெலன் கற்றுக் கொண்டது எதுவும் அர்த்தமற்றது என்று சலிவன் எண்ணினார். அதற்காக தான் ஹெலனின் தந்தையிடம் கால அவகாசமும் கேட்டிருந்தார். ஆனால் அதுவுன் கிடைக்கவில்லை. இப்போது வீடு திரும்பிய ஹெலன் தன் கற்றல் பாதையில் இருந்து விலகி நடப்பதைக் கண்ட சலிவன் பொறுமை இழந்து ஹெலனை அவ்வீட்டின் அடிக்குழாய்க்கு அழைத்துச் சென்றார். இல்லை இழுத்துச் சென்றார் என்றே கூற வேண்டும். ஹெலனும் பிடிவாதம் காட்டினார். தனது தாய் தந்தையர், தன் பக்கம் இருப்பர் என்று நினைத்தார். ஆனால், சலிவன் ஹெலனின் கற்றலில் காட்டிய பிடிவாதத்திற்கு முன்பு அவளின் பிடிவாதம் தோற்றுப் போனது. அடி குழாயை அடித்து கொட்டும் தண்ணீரில் ஹெலனின் கைகளை நீட்டி பின்னர் அவள் கைகளில் WATER என்ற வார்த்தையை கையேடு எழுத்துக்களால் W-A-T-E-R என உச்சரித்தார். இதுவரை தண்ணீரை டம்ளர், ஜக்கு, குடம், குளம் என பல வடிவங்களில் காண்பித்து உச்சரித்த போது புரிந்து கொள்ள முடியாத ஹெலன் இம்முறை இவ்வார்த்தையை ‘ஏற்கனவே தன் கைகளில் உச்சரிக்கப்பட்ட வார்த்தை; இதன் பொருள் தண்ணீர்’, என்பதை புரிந்து கொண்டாள். கற்றுக் கொண்ட வார்த்தையை தன் ஆசிரியர் கைகளில் உச்சரித்து காண்பித்தார். ஆசிரியர் ‘ஆமாம்’ என்ற தலையை அசைக்க கற்றலில் பெரு மகிழ்ச்சி கொள்கிறாள். மீண்டும் தன் கற்றல் பாதைக்கு திரும்புகிறார்கள்.உடனே தன் தாய் தந்தையிடம் சென்று அவர்கள் கைகளில் கையேடு எழுத்து முறையை பயன்படுத்தி ‘அம்மா’, அப்பா’ என்ற பெயர்களை உச்சரித்து காண்பிக்கிறாள். யாருக்கும் அடங்காத பிடிவாத முரட்டு குழந்தையாக இருந்த ஹெலன் இப்போது கற்றலில் திளைப்பதை பார்த்து பெற்றோர்களுக்கு நம்பிக்கை நிலைத்தது. பார்வையற்ற காது கேளாத நிலையிலும் இவ்வுலகில் பிறரை போல வாழ வழி பிறந்தது என்றும் மகிழ்ந்தனர். அம்மா அப்பா என்ற சொற்களை உச்சரித்த ஹெலன் நேரே ஓடிப்போய் சலிவனிடம் நின்றாள். சலிவனின் முகத்தில் கையை வைத்து தம் கைகளை நீட்டி “நீங்கள் யார் எனக்கு என்று அதை கையேடு முறையில், தன் கைகளில் உச்சரிக்க சொன்னாள்”. சலிவன் டீச்சர்- ‘TEACHER’ என்று உச்சரித்தார்.
‘டீச்சர்’ – ‘ஆசிரியர்’ இவ்வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் உள்ளன என்று ஹெலன் அன்று உணர்ந்தார். இன்று அவரை படித்த நாமும் உணர்வோம்.
– இரா. கோமதி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை