einstein book reviewed by kamalaalayan நூல் அறிமுகம்: ஐன்ஸ்டீன்  - நமது பக்கத்து வீட்டுக்காரர் -கமலாலயன்
 einstein book reviewed by kamalaalayan நூல் அறிமுகம்: ஐன்ஸ்டீன்  - நமது பக்கத்து வீட்டுக்காரர் -கமலாலயன்

 நூல் அறிமுகம்: ஐன்ஸ்டீன்  – நமது பக்கத்து வீட்டுக்காரர் -கமலாலயன் 

ஐன்ஸ்டீன் உலகம் நன்கறிந்த ஓர் அறிவியலாளர்.அவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை இது.மிக முக்கியமான செய்திகளைத் தொகுத்துக் கூறுவதுடன்,ஐன்ஸ்டீனின் உளவியல் பண்புகளையும் வெளிப்படுத்திக் காட்டும் நெடுங் கட்டுரை.இதை ஸ்னோவின் மொழியில் வாசிக்கும் போது, “ முதலில் பூங்கா,அடுத்து வீடுகள் நிறைந்த தெருக்கள்,பிறகு சலசலக்கும் நீரோடை எனத் துரித கதியில் சீராக மாறி மாறி வீழ்கின்ற திரைச்சீலைகள் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகின்ற “ பாங்கை நாம் உணர்கின்றோம்.

ஐன்ஸ்டீன் 1905-இல் சுவிட்சர்லாந்தில் காப்புரிமை அலுவலகப் பணியாளராக இருந்த போது ஐந்து  அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டார்.அவற்றில்  மூன்று கட்டுரைகள் மிக முக்கியமான  மூன்று பேருண்மைகளை வெளியிட்டன எனவே அவை அறிவியல் உலகில் ஒரு புதிய திருப்பத்தினை ஏற்படுத்தின.ஒன்று ஒளி சார்ந்த எலெக்ட்ரானிய விளைவைக் குவாண்டம் அடிப்படையில் விளக்குவது.இரண்டாவது நீர்மத்தில் தொங்கலான துணுக்குப் பொருள்களின் ஓர்மையற்றவை போலத்தோன்றும் இயக்கங்களை ஆராய்வது.மூன்றாவது கட்டுரை சிறப்புச் சார்பியல் கோட்பாடு பற்றியது.இடம்,காலம்,பொருள் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து ஒரே நேர்கோட்டில் கொணர்ந்தது.

முதலாவது கட்டுரையில் ஐன்ஸ்டீன் முன்வைத்த எலெக்ட்ரானிய விளைவு குறித்த விளக்கத்துக்காகத்தான் பதினாறு ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு நோபல் விருது வழங்கப்பட்டது.இனி எக்காலத்திலும் யாரும் ஒரே ஆண்டில் மூன்று அறிவியல் பேருண்மைகளைக் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,ஒரு சாதாரண உதவியாளர் வேலையைக் கூட ஐன்ஸடீனுக்குத் தர மறுத்த ஜூரிச் தொழிற்பள்ளி,மேற்கண்ட உண்மை களை ஐன்ஸ்டீன் வெளியிட்டபின் அவரை வருந்தி அழைத்துப் பதவியில் அமர்த்தியது.” புதிய கோப்பர்னிக்கஸ் தோன்றி விட்டார் “ என்று பாராட்டினார்கள்.1909-ஆம் ஆண்டில் அவர் எந்தப் பல்கலைக்கழகப் பதவியிலும் இல்லாத காலத்திலேயே ஜெனிவாவில் அவருக்கு அறிவியலில் கவுரவப் பட்டம் வழங்கப்பட்டது.வெகு விரைவில், ஜூரிச் பல்கலைக்கழகம் அவரைப் பேராசிரியராக நியமித்தது.

1911-ஆம் ஆண்டில் பிராக் நகரிலிருந்த ஜெர்மன் பல்கலைக்கழகம் ஐன்ஸ் டீனைத் துறைத்தலைவராக நியமித்தது.1913-ஆம் ஆண்டில் அவர் பிரஷ்ய அறிவியல் பேரவையின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட்டார்.பெர்லின் நகரில் முற்றிலும் ஆராய்ச்சிப்பணியிலேயே ஈடுபடும் வகையில் அவருக்கு அதிக ஊதியம் கொடுக்கப்பட்டது.அப்போது அவருக்கு வயது முப்பத்து நான்குதான்.

ஐன்ஸ்டீனின் குடும்ப வாழ்க்கை மிகவும் சீர்குலைந்த ஒன்று.முதல் மனைவியுடனான திருமணம் தோல்வியடைந்த ஒன்று எனலாம்.இரண்டாவது திருமணமே அவருக்கு ஓரளவு மகிழ்வைத்தந்தது.ஆஸ்திரியாவில் யூதர் எதிர்ப்புணர்வுகள் அதிகமாக இருந்த ஒரு நேரத்தில் அவற்றைத் தன்னந்தனியாக எதிர்த்து,” எனது மதம் ஜூடாயிஸம் “ என்று ஐன்ஸ்டீன் பகிரங்கமாக அறிவித்தார்.இதனால் அவருடைய முதல் மனைவி மனச்சோர்வுக்கு ஆளானார்.அமெரிக்காவில்தான் அவருடைய பேரறிவு பூரணமாக ஒளி வீசியது.அங்கேதான் அவருடைய சோகமும் பெருகியது.அவர் மனைவி காலமானார்.இளைய மகன் மனநோய் முற்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஐன்ஸ்டீனின் இயல்பான குதூகல உணர்ச்சி மறைந்து விட்டது. அவர் தன்னை மறந்து,தன்னைச் சுற்றிலும் உள்ள எல்லாவற்றையும் மறந்து இந்த பவுதீக உலகைப்பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினார்.அதுதான் அவருடைய பிற்கால வாழ்க்கையின் ஆணிவேர்.

இந்தச் சிறிய புத்தகம்,ஒரு நெடுங்கட்டுரை.இதில் அறிவியல்,ஐன்ஸ்டீனின் வாழ்க்கை,நகைச்சுவை,கட்டுப்பாடுகளை வெறுக்கின்ற சுதந்திர உணர்ச்சி, சோகம் எல்லாமும் கலந்து நிறைந்திருக்கின்றன.இதை நமக்குத் தந்திருக்கிற சி.பி,ஸ்னோ ஓர் அறிவியலாளர்;பி படைப்பாளியாக மலர்ந்து நாவலாசிரிய ராகப் புகழ் பெற்றவர்.ஐன்ஸ்டீனின் வாழ்க்கை நிகழ்வுகளை அடுக்கடுக்காகச் சொல்லிக்கொண்டு போகும் போது ஓர் இலக்கிய மேதையின் படைப்பாற்றலை நாம் காண்கிறோம்.ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சிகளைத் தெளிவாகவும், சுருக்கமாக வும் தருகின்ற போது ஓர் அறிவியலாளரின் மதி நுட்பத்தைப் பார்க்கிறோம். அவரின் தோற்றப்பொலிவை வர்ணிக்கும் இடங்களில் ஒரு கலைஞனின் உணர்ச்சிப் பார்வையைப் பார்க்கிறோம்.

“ இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற மேதைகள் இருவர்.ஒருவர் லெனின்;மற்றவர் ஐன்ஸ்டீன்.” என்று வர்ணிக்கும் ஹார்டியின் மேற்கோள் இதில் இருக்கிறது. பிரம்மாண்டமான தஞ்சைக் கோபுரத்தைச் சில அங்குலங்கள் அளவே உள்ள நெட்டியில் உருவாக்குகின்ற நுட்பம் நிறைந்த கலைத்தன்மை இந்த நூலில் இருக்கிறது என்கிறார்,இதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கும் பேராசிரியர் நா.தர்மராஜன்.இதை வெளியிட்டவர் மறைந்த கவிஞர் மீரா.தனது அன்னம் பதிப்பக வெளியீடாக 1979-ஆம் ஆண்டில் இதை வெளியிட்டிருந்தார்.

“ ஐன்ஸ்டீன் எப்போதும் தன்னை ஓர் உலக மனிதனாகவே வரித்துக்கொண்டவர். போர் வெறியை அடியோடு வெறுத்தவர்.இயல்பாகப் பழகத் தொடங்கிவிடும் இயல்புடையவர்.இந்த நற்பண்புகளுடன் நமக்கு எவ்வளவோ தூரதேசங்களில் அவர் வசித்திருந்தாலும் சி.பி.ஸ்னோவின் இந்தப்புத்தகத்தை வாசிக்கையில் நாம் ஐன்ஸ்டீனை எப்போதும் நமது பக்கத்து வீட்டுக்காரராக ஆக்கிக்கொள்ளவே விரும்புகிறோம்….” என்று ரத்தினவிஜயன் தன் பதிப்புரையில் சொல்லியிருக்கிறார்.எத்தனை பெரிய பேருண்மை அது !

வாசல் பதிப்பகம் வெளியிடும் சின்னஞ்சிறு நூல்கள் உலகை அளப்பவை.அதே சமயம் நம் மனங்களுக்கு மிக நெருக்கமானவை.இந்த நூலை  நான் இன்று   ( 10-09-2023 ) காலை மீண்டும் ஒரே அமர்வில் வாசித்த போது ஆசிரியரின், மொழி பெயர்ப்பாளரின்,பதிப்பாளரின்,ஏன்,இந்த ஒட்டு மொத்த உலகின் குரல்களையே கேட்க முடிந்தது.அவை போரை எதிர்க்கின்ற குரல்கள்.மானிட நேயத்தின் வெளிப்பாடுகளைக் கொண்டவை.அறிவியல் மக்களுக்கே, அறிவியல் முன்னேற்றத்துக்கே,அறிவியல் அமைதிக்கே என்று முழக்கமிடுபவை.இதைநீங்கள் வாசிக்கையில் மேற்கண்ட அத்தனை குரல்களையும் நீங்களும் கேட்டுப் பரவசம் அடைய முடியும்.அது வெற்றுப் பரவசம் அன்று.செயல்படத்துடிக்கும் மனங்களின் போர் முரசம்…!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *