1) இங்கேதான் நான் இருந்தேன்
என்பதற்காக
ஒரு கூடு கட்டிவைத்துவிட்டுப் பறக்கிறேன்
என் அடையாளம் அதுவல்ல என்பவர்கள்
கண்டு கொள்வதற்காகவே
இறகுகளை அசைக்கிறேன்
வானின் கீழ்
நம்புங்கள்..
நானே என்னை
அப்படித்தான் கண்டு கொண்டேன்.
2) கதவுகளில்லாது
வெறும் கண்காட்சிக்காக
அந்தச்சிறை
சில நாட்கள் ஒரு உறவு
அங்கே தங்கியிருந்ததை
சுவரின் கிறுக்கல்கள் மட்டுமே
சொல்லிக்கொண்டிருக்கும்
3) குளம்புகளால் மட்டும் சுவைக்கப்படும்
கடிவாளமில்லா
நடைபாதை சிறு செடிகள்
கொம்புகளோடு பிணைத்திருந்த
புற்கட்டுகள்
பச்சைவாசத்தோடு
பசியின் தொடுவானம்
தலைகளை
அவசர அவசரமாக
வண்டியில் பூட்டிக்கொள்கின்றன
மாடுகள்
தார்க்குச்சி தீண்டலில்
அளக்கப்படுகிறது
தீர்வையாகாத
ஆசையின் கனபரிமாணம்
4) மின்சாரம் நின்று போனதும்
குளிர்பதனியிலிருந்து சொட்டுகிற நீர்
தரைமுழுதும் படரும் முன்
கோட்டுத்தடம் கிழித்து
வடிகாலுக்கு அனுப்பும் உத்தேசம் இருந்தது..
நினைவுகளை எரித்துவிட்டு
புகையைக்
குடுவையில் அள்ளிக்கொண்டிருந்தவளின்
அம்மாவுக்கு
5) நகரும் கூட்டினை யார் திறந்ததோ
தலைகீழாய் விழும் பறவைகளைத்
தெறிக்கவிடுகிறது நிலம்
நீந்தும் சிறகுகளுக்கு
நதியை அடையாளம் தெரிகிறது
நதி அறியாதவர்களுக்கு
சிறகுகளே வழிகாட்டும்
போதும்
நீங்கள் தாழ்வாரங்களில்
பாத்திரங்களை நிரப்பியது
நுழைந்து செல்லுங்கள்
மழைக்கென்ன கதவா இருக்கிறது?
6) கரைந்துவிட்ட நிலவொளி உண்டு
சுருங்கிவிட்ட சூரியச்சருகும் உண்டு
கரையும் இல்லாத
அலையும் இல்லாத
கடலுக்குச் சொந்தக்காரி நான்
என் உள்ளங்கையில் இருக்கிறது
ஓர் உப்புக்கல்

7) தூரப்பயணம் செய்து
தன்னை அடைந்த பறவைக்கு
நெடுங்கனவொன்றின் முனையைக்
கொத்தத்தருகிறது நீர்நிலை
8) தீமுகில் உதிர்த்த ஆறெனப் பரந்த
பாலைப் பெருமணலில்
கொடூரத்திற்கு எதிராகப்
பாலைச் சுரந்து பூத்திருக்கும் கள்ளிக்கு
இனித்துக் கிடக்கின்றன முட்கள்.
9) அப்பாவின் போதையைவிட
அம்மாவின் ‘சகிப்பு’ நாற்றம்
அவன் தூக்கத்தை
இடறிக் கொண்டே இருக்க
நாளைய உறக்கத்திற்கு
அவனுக்கும் அகப்படலாம்
ஏதேனுமொரு போதை
அம்மாவுக்கும் வாய்க்கும்
வெட்டியான் நுகர்வு.

10) எரியும் ஓவியத்தை
வரைந்த தூரிகைக்கு
அதன் கீழேயே
சிலை வைக்கிறது நெருப்பு
11) நெருப்பின் நாவால்
நனைந்து மருண்டு
அலமந்து பறக்கும்
தேனீக்களின்
கடைசிப் புகலிடம்
கொடுக்குகள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

