Ellaigal Atra Paraivai Poem by Se Karthigaiselvan. செ.கார்த்திகைசெல்வனின் எல்லைகள் அற்ற பறவை கவிதை

எல்லைகள் அற்ற பறவை கவிதை – செ.கார்த்திகைசெல்வன்




இச்சைப் பறவைகள்மட்டும்
நீராடிச்செல்லும்
நீர்க்குளம் அல்ல நான்;
கடுஞ்சாடல்களும்
காலன் கல்எறிதலும்
கலங்கச்செய்யும்போது
எனைத் தெளியவைக்கும்
வினையூக்கி நீதான்;
நான் பூக்கும் பருவத் தாமரை
நீ பறித்துச்சென்று
மேடை அலங்கரித்தபின்
வாடிப்போவதற்கானதல்ல;
சூறாவளியிலும் சூறையாடலிலும்
ஊசித்தண்டால் தாக்குப்பிடித்து
மெள்ள மெள்ள
இலக்குச் சூரியனைத்
தேடிப்போவதற்கானது;
அப்படிப் பார்க்காதே !
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

வெறும் இச்சை தணிப்பின்

விளைச்சல் அல்ல நீயும் நானும்
விரைவில் ஆவியாகி விடுவதில்லை
வெயிலில் காயும் தேனும்;
இரைக்காகப் புலிகள் விரட்டிய
நிறைமாத மானும்
நீண்ட தூரம் ஓடிச் சென்று
அழகிய குட்டிகளை ஈனும்;
சமத்துவச் சக்கரங்களில் இன்றி
இழுக்கப்படும் மானுடத் தேரும்
அச்சாணிகள் கழன்று
துன்பக் குழியில் விழுந்து நாறும்;
ஆண்பால் பெண்பால்
பேதங்கள் சொல்லும் ஊரும்
அன்பால் ஆனதே பெண்பால்
என என்றைக்குத் தேறும்?
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

நான் யாசிப்பது எல்லாம்
அடிமைச் சிறையில் இருந்து
மீள்வதற்கான விடுதலை;
நாளும் அரங்கேறுகின்றன நாட்டில்
பல வன்புணர்வு படுகொலை;
நள்ளிரவில் நாய்கள் கூட
சுதந்திரமாய் நடமாடுகின்றன;
நண்பகலில் கூட நிச்சயம் இல்லை
பாதுகாப்பெல்லாம் தடம் மாறுகின்றன;
காலங்காலமாக கருணை இன்றியே
நயவஞ்சகர்களால்
சிதைக்கப்படுகின்றேன்;
நேற்றா இன்றா எப்பொழுதும்
முறையான நீதி இன்றியே
புதைக்கப்படுகின்றேன்;
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

எதற்கெடுத்தாலும்
எதிர்பாலினக் கவர்ச்சி
என்று சொல்லாதே!
தாயும் தங்கையும் எதிர்பாலினம்தான்
தகாததை மூளைக்குள் தள்ளாதே!
ஏடுகளில் மட்டும் பெண்மகத்துவம்
சொல்லும் மண்ணுலகம்
எதிரில் அதை நடைமுறைப்படுத்தாமல்
போனால் இனிப் புண்ணுலகம்;
எனைக் குறுகிய எல்லைக்குள்

அடைக்காதே!
என்னுலகம் பரந்து விரிந்தது;
வேலிகள் பயிரைக் காக்கத் தேவையில்லை
பக்கத்தில் வராமலிருந்தாலே சிறந்து;
அப்படிப் பார்க்காதே!
உன் வீட்டிலும் அவள் இருக்கிறாள்!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. செ.கார்த்திகைசெல்வன்

    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *