மொழிபெயர்ப்புக் கவிதை: எல்லிஸ் பெல் (Ellis Bell) எழுதிய “மந்திரக் கட்டு (Spell Bound) கவிதை
**********************************************
கவிதை அறிமுகம்:
இக்கவிதை ‘கோண்டல் கவிதைகளுள்’ (Gondal poems) ஒன்றாகக் கருதப்படுகிறது. எமிலி பிராண்டே தன் சகோதரியான ஆன்னேவுடன் இங்கிலாந்தில் உள்ள யார்க் ஷையரின் ஒரு நகரத்தில் வசித்து வந்தார். அப்போது அவர் ‘கோண்டல்’ எனும் கற்பனை உலகத்தைப் படைத்து அதனை மையமாகக் கொண்டு பல கவிதைகளைப் படைத்துள்ளார். அக்கவிதைகள் போர், காதல், துரோகம் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்டு, மறைக்கப்பட்ட குறிப்பேடுகளில் எழுதி வைக்கப்பட்டவையாகக் கருதப்படுகின்றன.
புயல் வீசும் இருண்ட இரவு, பனி படர்ந்த நிலப்பரப்பு ஆகியன இக்கவிதையின் பின்னணியாக அமைகின்றன. இயற்கையின் இத்தகு அதீத சக்தியால் நகர முடியாது, ஒரு மந்திரத்தால் கட்டுண்டது போல் தாம் இருக்கும் துயர நிலையைக் கவிதை வரிகளில் வெளிப்படுத்துகிறார் எமிலி. இக்கவிதையின் காலம் 1837.
இரவின் இருள் சூழ்ந்திடும் என்னை
அரண் பெயர்ந்த வாடை வீசிடும்
கொடுமையின் மந்திரம் கட்டிடும் என்னை
விடுத்துப் போக இயலாது, இயலாது என்னால்
பெருமரங்கள் வளைந்து தாழ்ந்திடும்
உருவெற்றுக் கிளைகள் பனியால் எடைகூடிடும்
புயலதும் இறங்கும் அதிவேகத்துடன் இருப்பினும்
இயலாது என்னால் போக
மேகங்களுக்கு அப்பால் மேகங்கள் எனக்குமேலே
கழிவுகளைக் கடந்த கழிவுகள் கீழே
என்னை எதனாலும் அசைக்க இயலாது
நான் போகமாட்டேன், போக முடியாது.
**********************************************
📚 எழுதியவர் :
✍🏻 எல்லிஸ் பெல் (Ellis Bell)
தமிழாக்கம்: நாங்குநேரி வாசஸ்ரீ
**********************************************
மூல ஆசிரியர் குறிப்பு:
எமிலி ப்ரோண்டே (1818 – 1848) ஒரு ஆங்கில நாவலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். அவரது புனைபெயர் – எல்லிஸ் பெல் (Ellis Bell). அவரின் மிகச் சிறந்த நாவல் வுதரிங் ஹைட்ஸ் (1847). எமிலி மூன்று ப்ரோண்டே சகோதரிகளில் மிகச் சிறந்த படைப்பாற்றல் மிக்கவராகக் கருதப்படுகிறார்.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

