என் கனவாக இருந்தவள்
அன்றொரு நாள் அவள்
கனவில் வந்திருந்தாள்.
அவளை நான் மறந்துபோய்
ஆண்டுகள் ஆனபின்பும்
கனவிலே வருவதென்றால்
விந்தைதான் என நினைத்தேன்.
சிந்தை முழுவதையும்
அவளே நிறைத்திருந்தாள்
அன்றைய நாள்முழுதும்.
பிரிதொருநாள் எனக்கொரு
கடிதம் வந்திருந்தது.
பிரித்துப் பார்த்தேன்.
வெள்ளைத்தாள் முழுதும்
வெற்றுத் தாளாய் இருந்தது.
முகவரியில் கண்டறிந்தேன்
அவளது கையெழுத்தை.
நான் அவளை மறந்தபோதும்
அவள் கையெழுத்தை மறவேன்.
அதிலும் என் பெயரை
அவள்போல அழகாக
யாரும் எழுதுவதில்லை.
மற்றுமொரு நாள்
தெரியாத எண்ணிலிருந்து
அழைப்பு வந்தது.
அழைத்தவர் எதையும்
பேசவே இல்லை.
அதே எண்ணிலிருந்து
தினந்தோறும் இரவுகளில்
அழைப்புகள் வந்தபடி இருந்தன.
அது அவள்தான் என
உறுதியாகத் தெரிந்தது.
அவளிடம் நான்பேச
நினைத்ததை யெல்லாம்
அருவி போல் தினமும்
பொழிந்தேன் ஆனாலும்
மறுபக்கம் எப்போதும்
அமைதிமட்டுமே பதிலாக இருந்தது.
அந்த அழைப்புகள் முற்றிலுமாய்
நின்றுபோயிருந்த சிலநாட்களில்
அறிந்தேன் அவளது மரணச்செய்தியை
சிறுவயதிலேயே புற்றுநோயால்
இறந்து போனதாய்
அனைவரும் வருந்தினர்.
இப்போது நானந்த
வெற்றுத்தாளை எடுத்துபார்க்கிறேன்.
முத்துமுத்தாய் அவளது கையெழுத்தில்
மனதில் இருந்ததை
வெளிப்படுத்தி இருக்கிறாள்.
இப்பொழுதும் அவளென்னை
இரவுகளில் அழைக்கிறாள்.
ஆனால் அவளை மட்டுமே
பேசவைத்துவிட்டு
அமைதியாய் நானிருந்து அவள்
பேசுவதைக் கேட்கிறேன்.
பா. சுதாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.