இந்தாய்யா! மூக்கா!
மூக்கும் முழியுமா தோட்டத்து
முந்திரி பழம் பொறந்திருக்கு.
காலை வெயில கொளுத்துற
மஞ்சள் நிறத்து புள்ள!
சரியா உடச்ச அரைவட்ட
தேங்காயா இருக்குடா நெத்தி!
முடிஞ்சு வச்ச குண்டுகாசா
முழிச்சுகிட்டு இருக்கு கண்ணு.
மூக்கன் கையில தவழ்ந்த
அழகிக்கு” மகாலட்சமி”னு பேரு!
இந்தாடி சீனி, மவள கவனினு
மூச்சுக்கு ஒருக்கா ஏச்சு தான்.!
அழுகவே கூடாதுங்கற வீம்பு
அப்பன் மூக்கன முந்திக்கிரும்.
கொசு கடிக்காமல் இருக்க
பட்டணம் போயி கொசுவலைய
கொத்தா தூக்கிகிட்டு வந்தாரு!
தவழ்கிற மகள் முட்டிஉரச
மூக்கன் மனசு வெந்தேபோகும்!
தங்க நிறத்துப் புள்ளய
வெயிலுக்குக் காட்டவே மாட்டாரு!
பார்க்கற கண்ண உத்து பார்ப்பாரு!
போயா! மூக்கா! ரொம்பத்தேன்?
பொறாமைப்படும் ஊரு சனம்.
பேரு போன பள்ளிக்கூடம்
ஊருக்குத் தள்ளி அப்பாலிருக்க
மகள் நடந்து போக மனசில்ல.
ஒத்த மிதிவண்டியில வச்சு
ஒத்தையடிப் பாதையில போக
தங்கமகள் லட்சுமி கருத்திரும்னு
வெரசா முடிவெடுத்தாரு மூக்கன்.!
வருசநாட்டு சொத்த கொஞ்சம்
வரிசையா வித்து காசாக்கி
பள்ளிக்கூடம் முன்னுக்கவே
வீடு கட்ட ஆரம்பிச்சுட்டாரு!
மூக்கனுக்கு பித்து முத்திருச்சுனு
முக்கு முக்குக்கு மக்கள் பேச!
காத கடன் கொடுக்காத மூக்கன்
விரசா வீட்ட கட்டிட்டு சொன்னாரு
“என் மவளுக்குக் கால் வலிக்கும்”.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

