எழுத்தாளர் உதயசங்கரின் கவிதை : “என் வீடு”
என் வீடு சிறியது
எவ்வளவு சிறியதென்றால்
ஒரு சிற்றெறும்பு நுழைந்தால்
திரும்ப முடியாது
அந்துவான் எக்சுபெரியின்
குட்டி இளவரசனின் பி.612 ல்
நூறில் ஒருபங்கு தானிருக்கும்
கிருஷ்ணன் நம்பியின்
தங்க ஒரு கதையில் வரும்
பூட்ஸின் லேஸ் மாட்டும்
ஓட்டையை விடச் சின்னஞ்சிறியது
தலையை பூமியில் புதைத்தால்
மட்டுமே படுக்க இடமிருக்கும்
கால்களை மடக்கித் தவழ்ந்தால்
கூரை தட்டாமல் இருக்கலாம்
உடலை இரண்டாக மடித்தால்
போதும் சிரமமில்லை
அந்தச் சிறிய வீட்டில்
யாருக்கும் எந்தப்புகாருமில்லை
என்ன!
என் மனைவிக்குக் கோலம்போட
முற்றம் இன்னும்
பெரிதாக இருந்திருக்கலாம்
என் பையனுக்கு
மொபைலில் டவர்
கிடைக்கவில்லையென்ற கவலை.
எனக்கோ எழுபத்தியிரண்டு மணி நேரம்
வேலை பார்த்தாலும்
என் சிறிய வீட்டுக்கு
வாடகை கொடுக்க முடியவில்லை
என்னுடைய முதலாளி
தொன்னூறு மணி நேரம்
வேலை பார்த்தால் வறுமை
ஒழிந்து விடுமென்கிறார்.
நண்பரோ முதுகில்
தன் வீட்டைச் சுமந்து கொண்டு போகும்
நத்தையைப்போல்
முதுகில் வீடு வளர்ந்தால்
அவரவர் வீட்டை அவர்களே சுமக்கலாமென்கிறார்
அத்துடன் நடமாடும் வீட்டுக்கு
நிரந்தரமுகவரி தேவையில்லை
ஆதார் தேவையில்லை
ரேஷன் கார்டு தேவையில்லை
வங்கிக்கணக்கு தேவையில்லை
பட்டா, சிட்டா, அடங்கல்,
பிளான் அப்புரூவல், சொத்துவரி,
குப்பைவரி, தண்ணீர் வரி,
வருமானவரி, ஜி.எஸ்.டி, தேவையில்லை
ஒரு ஊர் தேவையில்லை
சாதி தேவையில்லை
மதம் தேவையில்லை
ஒரு நாடு தேவையில்லை
முக்கியமாக
எப்போதும் மக்களைப் பதட்டத்திலேயே
வைத்திருக்கும் ஒரு பிரதமரும்
தேவையில்லை.
எழுதியவர் :
உதயசங்கர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.