குற்றமும் தண்டனையும்
எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்:- 2
மவுனப் படங்களிலிருந்து அடுத்த கட்டமாக திரைப்படங்கள் பேசும்படமாக மாற்றமடைந்த நிலையில் இந்தியத் திரைப்படங்களில் பெரும் பகுதி இதிகாச புராணங்களைச் சார்ந்த படங்களாகவே இருந்து வந்திருக்கிறது. இதில் தமிழ்ப் படங்கள் ஒன்றும் விதிவிலக்காக இல்லை. அடுத்த கட்டத்தில் ராஜா ராணிக் கதைப் படங்களும் இதன் நீட்சியாக சமூகப் படங்களும் நிறையவே வந்திருக்கிறது. வாய் மொழிக் கதைகள், மரபுகளில் தொடர்ச்சியாக இருந்து வந்த கதைகள் இப்படி பலதரப்பட்டவையாக இவை அமைந்திருந்தன. இவையன்றி பெயர் குறிப்பிடப்படாது பல்வேறு மொழிக் கதைகள் தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டு திரைப்படங்களாக உருவாகியிருக்கிறது. டூமாஸ், ஸ்காட், டிக்கன்ஸ், ஜோலா, ஷேக்ஸ்பியர் ஆகியோரின் படைப்புகள் இப்படித்தான் இங்கே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதிலிருந்து மாறுபட்ட முறையில் பிரெஞ்சுப் படைப்பாளி விக்டர் ஹயூகோவின் (Victor Hugo) லே மிசர்பிள் (Les Miserables ) தமிழ்த் திரைப்படமாக வெளி வந்திருக்கிறது.
ஏற்கனவே சுத்தாநந்த பாரதியார் இதனை தமிழில் ஏழை படும் பாடு (Ezhai Padum Padu) என்ற பெயரில் நவீனமாக மொழி பெயர்த்திருந்தார். அதன் அடிப்படையில் அன்னாளில் புகழ்பெற்றவரும் தியாகராஜ பாகவதரின் ஆஸ்தான வசனகர்த்தாவுமான இளங்கோவன் இலக்கியத்தரமான வசனங்களை எழுத கே. ராம்நாத் இயக்கத்தில் ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சிராஜா பிலிம்சின் தயாரிப்பாக விக்டர் ஹயூகோவின் (Victor Hugo) படைப்பினைத் தழுவியது என்ற அந்நாளைய நடைமுறையை மீறிய அறிவிப்புடன் அதே பெயரில் இத்திரைப்படம் வெளிவந்தது.
குடும்பப் பசியை நீக்கும் பொருட்டு குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டனைக்காலத்திற்கு முன்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்று தன் வாழ்முறையை முற்றிலும் மாற்றியமைத்துக் கொண்டு சமூகத்தில் உயர்நிலையை பெற்றிருக்கக்கூடிய ஒருவருக்கும், கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில் அவனை தேடிக் கொண்டிக்கும் நேர்மையான முரட்டுத்தனம் மிக்க காவல் துறை அதிகாரிக்கும் இடையிலான மோதல்தான் இப்படத்தின் மையக் கருவாகும். அந்நிய ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டப் பின்னணியில் இக்கதை கூறப்பட்டிருப்பது சுவாரசியத்தை அதிகரிப்பதாக இருக்கக்கூடும்.
குற்றச் செயலில் ஈடுபட்டுவருபவர் அதிலிருந்து விலகி வழிமுறைகளை மாற்றிக் கொள்வதை சமூகம் விரும்பினாலும் அரசின் அதிகார ஒடுக்குமுறை இயந்திரமாக இருந்து வரக்கூடிய போலீஸ் விரும்புவதில்லை என்பதை சர்வசாதாரணமாகவே எவரும் அறிந்திருக்கக்கூடும். அப்படி இருக்கையில் வழக்கமான குற்றவாளியைத் தேடக்கூடிய போலீஸின் நடைமுறைகள் எதை நோக்கியதாக இருக்கும் என்பதை நாம் நன்கறிவோம். அதிலிருந்து மாறுபட்டதாகவே இப்படம் அமைந்திருந்தது.
சிறையிலிருந்து தப்பியவன் தயாளனாக சமூகத்தில் உயர்நிலையை எட்டியதை அறிந்த இன்ஸ்பெக்டர் அவனை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபடுகையில் விபத்தொன்றில் சிக்கிக் கொள்கிறான். அதே குற்றவாளி இவனை தப்புவிக்கையில் அவனது தேகபலமே அவன்தான் குற்றவாளி என்பதை உறுதி செய்கிறது. நலிவுற்றோர்பால் பரிவு கொண்டு புதிய வாழ்முறையை அமைத்துக் கொண்டுள்ளதோடு தன்னையும் மரணத்தின் பிடியிலிருந்து தப்புவித்த அவன் குறித்து இன்ஸ்பெக்டரின் மனச்சாட்சி கேள்விகளை எழுப்புகிறது. கடமையையும் கருணையையும், அறத்தையும் அரசினையும், சட்டத்தையும் சன்மார்க்கத்தையும் எதிரெதிர் நிறுத்துகிறது. அரசாங்க சட்டங்களைக் காட்டிலும் அன்புதான் வாழ்வில் அதிமுக்கியமானது என்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டரின் இறுதி முடிவு திகைக்கச் செய்கிறது.
குற்றவாளியை கைது செய்ய வேண்டியது அவனது பணியின் கடமை, அதிலிருந்து தவறிடவும் அவன் விரும்பவில்லை. அதே தருணத்தில் மீட்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பவன் வாழ்வில் சக மனிதன் என்ற அடிப்படையில் குறுக்கிடவும் விரும்பவில்லை. மனப்போராட்டத்தில் உழன்று கொண்டிருக்கும் அவருக்கு தெரிந்த ஒரே வழி உலகத்திலிருந்து விடைபெறுவது மட்டுமே. தயாளனை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்ல வந்த இன்ஸ்பெக்டர் ஜாவர் கைவிலங்கினையும் ஒரு துண்டுக் கடிதத்தையும் அவனது வீட்டில் எறிந்து விட்டு நீர்த்தேக்கத்தின் மீதேறி அதிகாரத்தின் சின்னமான லட்டியை முதலில் எறிந்து விட்டு தானும் குதித்து உயிர் துறக்கிறான். இது எவரையும் நிச்சயம் திகைப்படையச் செய்யும். ஐம்பதுகளில் வெளிவந்த இப்படத்தின் சிறப்பினை தொண்ணூறுகளில் வெளிவந்த ஞானஒளி எனும் படத்தை காண்பதன் வாயிலாக நிச்சயம் உணர்ந்திட முடியும்.
முந்தைய கட்டுரை தொடரை வாசிக்க: எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்:- 1 | சமூக நீதி, ஷங்கர் மற்றும் சவரக் கத்தி – ராமச்சந்திர வைத்தியநாத்
எழுதியவர்:-
ராமச்சந்திர வைத்தியநாத்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: பதினெட்டுப் பட்டிகளும், பஞ்சாயத்துக்களும் - சினிமா