எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum):- 3 | பதினெட்டுப் பட்டிகளும், பஞ்சாயத்துக்களும் | எஜமான், தேவர் மகன்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்:- 3 | பதினெட்டுப் பட்டிகளும், பஞ்சாயத்துக்களும் – ராமச்சந்திர வைத்தியநாத்

பதினெட்டுப் பட்டிகளும், பஞ்சாயத்துக்களும்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்:- 3 

 – ராமச்சந்திர வைத்தியநாத்

மூத்த வழக்கறிஞர் ஒருவர் காரில் பயணத்தை மேற்கொள்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் மாட்டு வண்டியில் செல்வதைப் பார்த்து வியக்கிறார். ஒருவரை நிறுத்தி விசாரிக்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் பதினெட்டுப் பட்டிக்கான பஞ்சாயத்துக் கூட்டமொன்றுக்கு செல்வதாகவும், தீர்ப்பை வழங்கக்கூடியவர் அவரது தந்தையைப் போன்று பாலிலிருந்து சர்க்கரையையும் மோரிலிருந்து உப்பையும் பிரிக்கக்கூடியவர் என்றும், அவரது தீர்ப்பை மீறி கோர்ட் கிடையாது என்றும் கூறுகிறார். பயணத்தை நிறுத்தி பஞ்சாயத்தை தள்ளியிருந்து கவனிக்கிறார். ஐந்து நிமிடங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வழக்கு நீதி மன்றம் சென்றிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற கேள்விக்கு அவரது காரோட்டி குறைந்தது பத்துப் பதினைந்து ஆண்டுகளாக ஆகியிருக்கும் என்று பதிலளிக்கிறார்.

இன்னொரு காட்சி. “நாட்டாமை பாதம் பட்டா எங்க வெள்ளாமை வௌங்குமடி” என்றும் “பரம்பரையா பறக்குது இவங்க கொடி தன் மானம் காக்குதடி இவங்க கொடி” என்றும் பாடல் பின்னணியில் ஒலிக்க சாரட் வண்டியில் வழக்கம் போல் வெள்ளை வேட்டி சட்டையுடன் மடிப்புக் கலையாத அங்கவஸ்திரத்துடன் தங்க அணிகலன்களைப் பூண்டிட்ட பஞ்சாயத்துத் தலைவர் வருகிறார். இங்கே பதினெட்டுப் பட்டிக்குப் பதிலாக எட்டுப் பட்டி மக்களும் தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
இது போன்ற நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தில் வரக்கூடிய பஞ்சாயத்து தலைவர்கள் இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சாதித் தலைவர்களும் பெரும் பாரியான ஆல அல்லது அரச மரத்தின் பின்னணியில் பஞ்சாயத்து மேடையும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து இடம் பெற்றுவருவதை கண்டிருக்க முடியும்.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum):- 3 | பதினெட்டுப் பட்டிகளும், பஞ்சாயத்துக்களும் | எஜமான், தேவர் மகன்

வழக்கமான தீர்ப்புகள் மட்டுமின்றி ஊர்விலக்கும் இங்கே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இப்படிப்பட்ட திரைப்படங்களில் சாதிக்கு எதிரான ஒடுக்குமுறையோ அல்லது வன்மமோ வெளிப்படவில்லையென்றாலும், அவரவர் சாதியை ஓங்கி உயர்த்திப் பிடிப்பதும் பெயர் குறிப்பிடாத மற்ற அடித்தட்டு சாதியினர் அவர்களின் பாதகமலங்களை தழுவி நிற்பதும் அழுத்தமாகவே வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களும் நீதி நியாயத்தைப் பெற்றிட அரசின் அமைப்புகளாலும் நீதி மன்றங்களாலும் என்னதான் காலதாமதமும் பண விரயமும் ஆனாலும் அதனைக் காரணமாக்கி இத்தகைய பதினெட்டுப் பட்டி பஞ்சாயத்துக்களை உயர்த்திப் பிடிப்பது என்பது வெறும் காட்சிப் படிமம் மட்டுமல்ல. மூளைச் சலவையின் ஒரு பகுதியே.

இத்தகைய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு போக்கொன்று இருந்து வருகிறது. ஆதிக்க சாதியினரின் குடும்பப் பகைமைக்கு அச்சாதிக்கு வெளியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளாவது அல்லது தங்களின் கௌரவப் பிரச்னையாக கருதி அவர்களும் இம்மோதலில் பங்கேற்பது. நடைமுறையில் சாதிய ஒடுக்கு முறை ஆழமாக வேரூன்றி அதன் கோரப் பசிக்கு மக்கள் இரையாகிக் கொண்டிருக்கையில் எஜமான், தேவர் மகன் போன்ற படங்களில் இத்தகைய காட்சிகள் சாதுர்யமாக கையாளப்பட்டு வந்திருப்பதை நாம் கண்டு மகிழ்ந்து வந்திருக்கிறோம். இவையன்றி திரைப்படங்கள் ஒவ்வொரு சாதிக்கான பிரத்யே கொடிப் பாட்டினையும் அவ்வப்போது வழங்கிவரும் திருப்பணிகளையும் மேற்கொள்கின்றன.

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum):- 3 | பதினெட்டுப் பட்டிகளும், பஞ்சாயத்துக்களும் | எஜமான், தேவர் மகன்

வட மாநிலங்களில் குறிப்பாக ஜாட், ராஜ்புத், குஜ்ஜார், காத்ரி போன்ற சாதிகளிடையே இத்தகைய சாதிப் பஞ்சாயத்துக்கள் இன்றும் பரவரலாக இருந்து வருவதோடு அரசியல் சட்டம் உறுதி அளித்த சமத்துவத்திற்கு எதிரான செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தியும் வருகிறது. இவை தென் மாநிலங்களில் இல்லையென்றும் தமிழகத்தில் இல்லவே இல்லையென்றும் பூனையாய் கண்ணை கவனமாய் மூடிக் கொள்ள முயற்சிக்கிறோம்.

அரசின் அதிகார அமைப்புகளை காலால் மிதிக்கக்கூடிய அல்லது அவை இவர்களின் சேவகர்களாக இருப்பதை வெளிப்படுத்தக்கூடியதோடு பெயரிலேயே ஜாதி அடையாளங்களைக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்ப் படங்களை காலம் காலமாக தொடர்ச்சியாக கண்டு வருவதோடு, அதில் மூழ்கிப் போய்விட்ட நாம் இப்பஞ்சாயத்துக்களை மட்டுமின்றி சாதி மேலதிகாரத்தையும் மனதளவில் ஏற்கப் பழகிவிட்டோம். அல்லது அதில் பெருமை கொள்கிறோம். மையக் கருத்துக்களை புறந்தள்ளி திரைப்படத்தின் மற்றைய தொழில் நுட்ப அம்சங்களையும் இதரவற்றையும் பெரிதும் சிலாகித்து வருவது இவை குறித்து ஆழமான பற்றுதலை மனதில் பதியச் செய்கிறது. சமூகத்தில் ஏற்கனவே நிலவி வரும் இதர புறக்காரணிகளோடு இத்தகைய கருத்தோட்டமும்தான் இங்கே சாதிய அடக்கு முறைத் தீயை அணைய விடாது பாதுகாத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் வேங்கைவயலும், நாங்குநேரியும்.

முந்தைய கட்டுரை தொடரை வாசிக்க: எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும்:- 2 | குற்றமும் தண்டனையும் – ராமச்சந்திர வைத்தியநாத்

எழுதியவர் : 
ராமச்சந்திர வைத்தியநாத்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *