எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் (Enakku Cinema Konjam Pidikkum) 42 - தாதா சாஹேப் விருதும் பெண் கலைஞர்களும் | Dadasaheb Phalke Award and Women Cinema Artists | www.bookday.in

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 42: தாதா சாஹேப் விருதும் பெண் கலைஞர்களும் – ராமச்சந்திர வைத்தியநாத்

தாதா சாஹேப் விருதும் பெண் கலைஞர்களும்

எனக்கும் சினிமா கொஞ்சம் பிடிக்கும் – 42

– ராமச்சந்திர வைத்தியநாத்

2021ம் ஆண்டிற்கான தாதா சாஹேப் பால்கே விருது  தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வஹிதா ரெஹ்மானுக்கு வழங்கப்பட்டது குறித்து அறிவிப்பு  சென்ற ஆண்டுதான் வெளியானது. 1913ல் ராஜா ஹரிச்சந்திரா எனும் முழு நீளத் திரைப்படமொன்றை தயாரித்த பால்கே அவர்கள் இந்தியத் திரையுலகின் முன்னோடியாவார்.  அவரது நினைவைப் போற்றும் வண்ணம் ஆண்டுதோறும் இந்தியத் திரையுலகில் சாதனைபுரிந்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும் இது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படும்  அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்படும் ஆளுமைக்கு தேசிய அளவில் நடைபெறும் திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இது வழங்கப்படுவது 1969ல் துவங்கியது.

இது வரை தாதா சாஹேப் பால்கே விருதின் மூலம் 53 இந்திய திரைக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  இதில் தேவிகா ராணி (1969), ரூபி மேயர்ஸ் எனும் சுலோச்சனா (1973), கண்ணன் தேவி (1976), துர்கா கோட்டே (1983), லதா மங்கேஷ்கர் (1989), ஆஷா போன்ஸ்லே (2000)  ஆஷா பரேக் (2020) வஹிதா ரெஹ்மான் (2021) ஆகிய ஏழு பெண் கலைஞர்கள் மட்டுமே உள்ளனர். இந்தியத் திரையில் பெண் கலைஞர்கள் மகத்தான பங்களிப்பையும், திரைத் துறையின் இதர பகுதிகளில் ஆண்களுக்கு நிகரான பங்கெடுப்பையும் அவர்கள்  கொண்டிருக்கையில், விருது வழங்கப்படுகையில் மட்டும்  அவர்களுக்கான அங்கீகரிப்பு என்பது உரிய முறையை கொண்டிருக்கவில்லை.  இது காலங்காலமாக இச்சமூகத்தில் நிலவி வரக்கூடிய ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.

நடிகர் பால்ராஜ் சஹானி, இசையமைப்பாளர் எம்பி சீனிவாசன்,  இயக்குநர்கள் கமால் அம்ரோஹி, ரித்விக் கடாக் போன்ற இந்தியத் திரையுலகின் சாதனையாளர்களுக்கு வழங்கப்படாத நிலையில்,   ராமா நாயுடு, வினோத் கண்ணா, பிரான், மனோஜ் குமார் போன்ற கலைஞர்களுக்கு  வழங்கப்பட்ட அளவுகோலின் அடிப்படையில் பார்த்தால் கூட  இவ்விருதினைப் பெற்றிட தகுதியுடைய பெண்களை குறைந்தது ஐந்து  பக்கங்களிலாவது பட்டியலிட முடியும்.

அறுபதுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ திரையுலகில் நுழைந்தவர்கள் என்ற அடிப்படையில் பலமுறை சிறந்த நடிகைக்கான ஊர்வசி விருதினைப் பெற்ற சாரதா, மலையாளத் திரைப்பட ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய  செம்மீன் ஷீலா,  தென்னிந்திய மொழிப்படங்களில் தனித்துவமிக்க கலைஞராக திகழ்ந்த சரோஜா தேவி, பன்முகக் கலைஞர் சௌகார்  ஜானகி,  ரேயின் தேவி மூலம் வெளிப்பட்ட ஷர்மிளா தாகூர், வங்கத்து அபர்ணா சென், ரே மற்றும் மிருணாள் சென் திரைப்படங்களின் நாயகி மம்தா சங்கர்  போன்றோர் இப்பட்டியலில் முதல் பத்தியில் இடம் பெறவேண்டியவர்கள்தான்.

இவ்வரிசையில் உள்ள சௌகார் ஜானகி  திறமையும் தகுதியும் கொண்டவராக விளங்கிய போதிலும்  போதுமான அங்கீகாரம் பெற்றிடாதவராகவே இருந்திருக்கிறார். 1950ல் வெளியான சௌகார் தெலுங்குப் பட அறிமுகத்தில் அவரது திரையுலகப் பயணம் தொடங்கியிருக்கிறது.  அவரது தனிப்பட்ட வாழ்க்கை என்பது திரைப்படத்தைக் காட்டிலும் அதீத திருப்பங்களை கொண்டதாகவே இருந்து வந்திருக்கிறது.  திருமணமாகி கைக்குழந்தையுடன் நடிக்க வந்தவர் என்பது ஆச்சரியத்தை அளிப்பதோடு அவரது மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

சௌகார் ஜானகி என்று உச்சரிக்கும் போதே திரையுலகின் பளபளப்பு, வண்ணமிகு உடைகள், மினுமினுப்பு, கனவுப் பாடல் என்பதையெல்லாம் கடந்து ஒரு சாதாரண அண்டை அயலில் உள்ள அபலைப் பெண்ணின்  தோற்றம் நினைவுக்கு வருவது என்பது அவரது எழுபதாண்டு திரைச் சாதனையாகும்,  பாவை விளக்கு, பார் மகளே பார், புதிய பறவை, படிக்காத மேதை, உயர்ந்த மனிதன், மோட்டார் சுந்தரம் பிள்ளை  போன்ற படங்களில் சிவாஜி கணேசனுக்கு நிகராக தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

பின்னாளில் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான நாடக பாணியிலான திரைப்படங்களிலும் குறிப்பாக நாணல், இருகோடுகள், போன்ற படங்களில் மட்டுமின்றி  பாமா விஜயம்,   எதிர் நீச்சல், தில்லு முல்லு  போன்ற நகையுணர்வு வாய்ந்தவற்றிலும்  தனது தனித்துவத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அன்னை மற்றும் பாக்யலட்சுமி போன்ற படங்கள் அவரது திறனை அசாதாரணமாக வெளிப்படுத்தக்கூடியவைகளாகும்.

கிட்டத்தட்ட எழுபது ஆண்டுக்காலமாக  400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் நிச்சயம் தாதா சாஹேப் விருதுக்கு பொருத்தமானவர்தான்.  இது ஒரு மகத்தான கலைஞனுக்கு அவரது வாழ்நாளிலேயே அளிக்கக்கூடிய அங்கீகாரமாக இருக்க முடியும்.  அவர் 90 வயதைக் கடந்த பின்னர்தான்  பத்மஸ்ரீ விருதே வழங்கப்பட்டது.  எனவே 100ஐக்  கடக்கும் வரை காத்திருக்க எண்ணுகிறார்களோ என்னவோ?

எழுதியவர் : 

ராமச்சந்திர வைத்தியநாத்

 

 

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *