English Poet Andrew Marvell’s To His Coy Mistress Poem Translated in Tamil by Thanges. Book Day is Branch of Bharathi Puthakalayam.



நான் ரசித்த கவிஞர்கள் ( ஆண்ட்ரோ மார்வல் 1621-1678 ஆங்கிலக் கவிஞர் )

மார்வல் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்ஆவார். மெட்டாபிசிக்கல் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகிற பௌதீகம் கடந்த பாடுபொருள்களைப் பாடும் கவிஞர்களின் வரிசையில் முதன்மையானவர்என்று அழைக்கப்படுபவர் . .இன்று நினைத்தாலும் இவர் எடுத்தாண்ட படிமங்கள் உருவகங்கள் முற்றிலும் புதிய இணைப்புச் சொற்கள் கற்பனைகள் யாவும் படிக்கும் வாசகர்க்கு பிரமாண்டத்தை அளிப்பவை. இவர் ஆரம்பத்தில் காதல் இயற்கை என்று ஆரம்பித்து அருமையான பக்திக் கவிதைகளை எழுதியவர். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் வாசிக்கும் வாசக நெஞ்சங்களை புத்தம் புது உணர்வால் நிறைத்து புத்துணர்ச்சியூட்டக்கூடிய வரிகளுக்கு சொந்தக்காரர். மெட்டா பிசிகல் கவிஞர்கள் என்று பின்னால் அறியப்படுகிற பல கவிஞர்களின் முன்னோடி இவர்.

இவர் எழுதிய TO HIS COY MISTRESS (நாணம் கொண்ட என் காதலிக்கு) என்ற கவிதை ஆங்கில இலக்கியத்தில் மிக மிகப் புகழ் பெற்றது ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக என் நெஞ்சில் அவ்வப்போது இந்த வரிகள் உருண்டோடிக் கொண்டேயிருந்திருக்கின்றன, முழுமையாக மொழி பெயர்த்துவிடும் ஆசையில்…. முடிந்தவரை மொழிபெயர்த்த திருப்தியில்…..

கவிதைச் சூழல்

ஆசையை நாணத்தினால் மறைத்து தள்ளிச்செல்லும் காதலியை அள்ளிக்கொள்ள காதலன் பாடும் கவிதை



TO HIS COY MISTRESS (நாணம் கொண்ட என் காதலிக்கு)

எல்லையற்ற உலகமும் முடிவற்ற காலமும்
நமக்கு வாய்த்திருந்தால்
உன் நீளமான மௌனம் ஒரு குற்றமில்லை கண்ணே

நாம் ஒன்றாக அமர்ந்து
எவ்வழி நடந்து செல்வது என்று
தீர ஆலோசிக்கலாம்
பின்பு இந்த இனிமையான பொழுதை
நேசத்தால் நகர்த்திச் செல்லலாம்

நீ கங்கை நதிக்கரையில் காலாற நடந்து
மாணிக்கங்களை தேடிக்கொண்டிருப்பாய்
நான் ஹம்பர் நதியின் அலையில் நனைந்தபடி
உன்னை செல்லமாய்க் கடிந்து கொண்டிருப்பேன்

ஆதிவெள்ளத்திற்கும் ஒரு மாமாங்கத்திற்கும் முன்பிருந்தே
உன்னைக் காதலிக்கத் தொடங்கியிருந்திருப்பேன்
நீயும் உன் விருப்பப்படி கடைசி யூதன் மதம் மாறும் வரையிலும்
என்னை மறுத்துக்கொண்டிருந்திருப்பாய்
என்னுடைய பசுந்தளிர் காதல்
மெதுவாக மிகமெதுவாக வளர்ந்து
இந்த பூமியெங்கும் படர்ந்து
இவ்வுலகின் பெரும் சாம்ராஜ்யங்களை விட
பரந்து விரிந்திருக்கும்

விழிகளிலிருந்து முதலில் தொடங்குகிறேன்
ஒரு நூற்றாண்டுகள் உன் கண்களை வியந்து துதிப்பேன்
பின்பு நெற்றியில் ஒரு சிறிய நிறுத்தம்
இருநூறாண்டுகள் இரண்டு மார்புகளை வர்ணிக்க
மொத்தமாக முடித்து வைப்பதற்கு
முப்பதாயிரம் ஆண்டுகள்

ஒவ்வொரு அங்கத்திற்கும் குறைந்தது
ஒரு நூறாண்டு போதுமா ?
முடிவில் முற்றுப்பெறுவது உன் இதயத்தில் தான்
என் அன்பே நீ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
வர்ணிக்க தகுதியானது உன் பேரழகு
என் காதலோ காலங்கள் தாண்டியும்
வளர்ந்து கொண்டிருக்கும் முடிவற்ற விளிம்பில்

ஆனால் என் அன்பே !
என் முதுகின் பின்புறம் எப்பொழுதும்
சிறகுகள்முளைத்த காலத்தேரின் உருண்டோடிவரும்
சப்தத்தை கேட்டவண்ணமேயிருக்கிறேன்
அதற்கும் மேலே
வசந்தத்தையும் பாலையாக்கும் மரணவெளி
விரிந்துகொண்டே செல்கிறது

ஒரு நாளில் உன் பேரழகு
காணாமல் போய்விடக்கூடும்
உன்னுடைய பளிங்கு பதித்த மாடத்தில்
என் பாடல் எதிரொலிக்காமல் போய்விடக்கூடும்
காலம் காலமாக காப்பாற்றி வரும்
உன் பரிசுத்தமான பெண்மையை
ஒரு நாள் கரையான் அரித்துவிடக்கூடும்
தன்னிகரற்ற பெண்மையின் மேன்மை
ஒருநாள் மண்ணுக்குள் புதையுண்டு போகும்
அந்நாளில் என்னுடைய ஆசையெல்லாம்
வெறும் சாம்பலாகிவிடும்

கல்லறை என்பது அழகான
தனிமையான இடம்தான் சந்தேகமேயில்லை
ஆனால் காதலர்கள் யாரும்
அங்கே தழுவிக்கொள்வதில்லை
தெரியுமா?

ஆகவே அன்பே !
இளமையின் தினவு
ஒரு கனிந்த பனித்துளி போல
உன் தோளில்
அமர்ந்திருக்கும் காலத்திலேயே

ஆசை கொண்ட உன் ஆன்மா
ஒவ்வொரு துளையிலும்
வியர்வை அரும்பை
நெருப்பாக பூக்கும் நேரத்திலேயே
வா சிறிது விளையாடிப் பார்க்கலாம் !
தீராப்பசி கொண்ட பறவைகள் நாம்
இரைகளும் நாம் தான்
சோர்வின் விளிம்பில்
காலத்தின் அலகுகளுக்கு
உணவாவதை விட.
வா அன்பே நாம் ஒருவரை ஒருவர்
எடுத்து உண்டு விடலாம்

நமது வலிமையையெல்லாம் திரட்டி
இச்சையை ஒரு பந்தாக மாற்றி
அதை இனிமையால் நிரப்பி
துள்ள விடலாம்
வா சகியே

இரும்புக் கம்பிகளால் சூழப்பட்ட
வாழ்க்கைச் சிறையை
இன்பங்களின்அரம் கொண்டு
அறுத்தெறியலாம்

அன்பே !
நம் இளமையால்
சூரியனை நிறுத்த முடியாது தான்
ஆனால் அவனை ஓட விடலாமே !

மூலம் ஆண்ட்ரோ : மார்வல்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்



To His Coy Mistress

Launch Audio in a New Window

BY ANDREW MARVELL

Had we but world enough and time,
This coyness, lady, were no crime.
We would sit down, and think which way
To walk, and pass our long love’s day.
Thou by the Indian Ganges’ side
Shouldst rubies find; I by the tide
Of Humber would complain. I would
Love you ten years before the flood,
And you should, if you please, refuse
Till the conversion of the Jews.
My vegetable love should grow
Vaster than empires and more slow;
An hundred years should go to praise
Thine eyes, and on thy forehead gaze;
Two hundred to adore each breast,
But thirty thousand to the rest;
An age at least to every part,
And the last age should show your heart.
For, lady, you deserve this state,
Nor would I love at lower rate.
But at my back I always hear
Time’s wingèd chariot hurrying near;
And yonder all before us lie
Deserts of vast eternity.
Thy beauty shall no more be found;
Nor, in thy marble vault, shall sound
My echoing song; then worms shall try
That long-preserved virginity,
And your quaint honour turn to dust,
And into ashes all my lust;
The grave’s a fine and private place,
But none, I think, do there embrace.
Now therefore, while the youthful hue
Sits on thy skin like morning dew,

And while thy willing soul transpires
At every pore with instant fires,

Now let us sport us while we may,

And now, like amorous birds of prey,
Rather at once our time devour
Than languish in his slow-chapped power.

Let us roll all our strength and all
Our sweetness up into one ball,
And tear our pleasures with rough strife
Through the iron gates of life:
Thus, though we cannot make our sun
Stand still, yet we will make him run.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *