பி.எச்.டேனியல் (தமிழில்: இரா முருகவேள்) எழுதிய எரியும் பனிக்காடு (Red Tea Book in Tamil) - Book PDF free download | www.bookday.in

பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்

எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) 1969 இல் ஆங்கிலத்தில் Red Tea என்னும் தலைப்பில் வெளிவந்தது இந்நவீனம்..

தேயிலை மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் பலியாக காரணமாகயிருந்த அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது நம்பகத்தன்மையற்றது என்று மனித நேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை உலகிற்கு உணர்த்த எழுத்தாளர் கையாண்ட கோலாக இப்புத்தகம் எரியும் பனிக்காடு..

ஆதவன் தீட்சண்யாவின் உணர்வு பூர்வமான வரிகளோடு துவங்குகிறது இந்நவீனம்,

*ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலை தோட்டங்களில் அடியுறமாயிடப்பட்டவை எமது உயிர்கள் நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருப்பது எமது உதிரம்*

என்னும் மனதை கசக்கும் வரிகள், *தோட்டியின் மகன், தூப்புக்காரி* போன்ற சமூக அவலங்களை முன்னிலைப்படுத்திய நாவல்களை என் கண்முன் நிறுத்தியது..

இந் நவீனம் முழுவதும் திருநெல்வேலியில் மயிலோடை என்னும் குக்கிராமத்தில் வசிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்களான கருப்பன் , வள்ளி என்னும் தம்பதியினரின் வறுமையின் பிடி, அவல நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடந்து பிழைக்க வந்த அவர்களை அங்கேயே சாகடித்த நூற்றுக்கணக்கான மக்களின் வலிநிறைந்த குரல்கள் நம் கண்களில் பிரதிபலிக்கும் நீரூற்றாய் இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுதே…

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது வால்பாறையில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டின் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் எழுத்தாளர் பி எச் டேனியல் அவர்கள்.. 1920 முதல் 1930 வரை அப்பகுதியில் வேலை பார்த்த மக்களின் கொடூரமான அவல நிலையையும் மிருகங்களை விட கீழ்த்தரமாக நடத்தப்பட்ட பரிதாப சூழ்நிலைகளையும் இந்நவீனத்தில் தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்..

பிழைப்பிற்காகவும், ஒருவேளை சாப்பாட்டிற்காகவும் மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் வேறு சில கதாபாத்திரங்களின் அடக்குமுறையும், உயிரியல் ரீதியாக பார்த்தால் *விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்* என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்நாவலின் மொத்த சாரமும்..

“கூரையாக வேயப்பட்டிருந்த பனையோலைகள் ஏறக்குறைய இறுதி மூச்சு விடும் நிலையில் இருந்தன”

“மூலையில் கிழிந்த நாராக கிடந்த அம்மாவின் உருவம்”
போன்ற ஆசிரியரின் மொழி நடை நாவலின் கூக்குரலுக்கு மெருகூட்டுகிறது…

எரியும் பனிக்காடு (2007) - பி.எச்.டேனியல் (தமிழில் இரா.முருகவேள்) | நூல்  மதிப்புரை ந.சண்முக சுந்தரம். - Book Day

மேஸ்திரி சங்கரபாண்டியின் ஆலோசனைக்கிணங்க கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு கருப்பனும், வள்ளியும் ரயிலில் பயணிக்க அவர்களுடன் வாசகியாக நானும் பயணிக்க ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிய, வேலை ஆரம்பிக்க, கருப்பன் விறகு வெட்ட, வள்ளி தேயிலை கிள்ள, தீப்பெட்டி அளவே உள்ள தகர வீட்டில் இன்னொரு குடும்பத்தினருடன் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள, வேலை பார்க்கும் இடத்தில் கண்காணிப்பாளர்களின் பாலியல் தொந்தரவுக்கு இடம் கொடுக்காது வரும் பிரச்சனைகளினால் மனம் துவள, ஆளுக்கொரு போர்வையென மழையில் நனைந்துவிட்டால் அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ள, மாற்று போர்வை கிடைக்காது என்று மேஸ்திரி எச்சரிக்க,

பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம். கழிப்பறை கிடையாது, மருத்துவ வசதி கிடையாது, வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய், என வெள்ளை துரைகளுக்கும் மேஸ்திரிகளுக்கும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க எழுத்தாளரின் எழுத்தாணி வால்பாறையின் பனிக்காட்டில் எரியும் மக்களின் குமுறல்களை படமிட்டு காட்ட, நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னால் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும், கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் சுவைக்குப் பின் கசப்பின் நியதியை அழகாகப் பதிவு செய்திருக்கிறது..

மக்கள் மலைக்கு போவதற்கான கட்டாயம் என்ன? அங்கே சென்றாலும் அவர்களுடைய கனவுகள் பலித்ததா? அவர்களது சொல்லொன்னா அடிமைத்தன வாழ்வு எப்படியாய் இருந்தது? என்ன அடக்குமுறைகளுக்கெல்லாம் உள்ளானார்கள்? அடிமைத்தன வாழ்க்கை முறையின் அனுபவங்கள் என்னென்ன? சாதிவெறி யின் தாக்கங்கள் என்னென்ன? கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சியை நம்மால் கட்டுப்படுத்தவே இயலாது அவ்வளவு துயரமிக்க காட்சிகளை நம் மனக்கண் முன் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்..

பி.எச்.டேனியல் (தமிழில்: இரா முருகவேள்) எழுதிய எரியும் பனிக்காடு (Red Tea Book in Tamil) - Book PDF free download | www.bookday.in

இந்நூலை வாசிக்க வாசிக்க Shakespeare’s *Merchant of Venice* ல் வரும் *எவ்வளவு அழகான முகமூடி பூண்டி இருக்கிறது இந்த நரகம்* என்னும் வரிகள் நம் எண்ண ஓட்டத்தில் வந்தே தீரும்..

குறிப்பாக ஒவ்வொரு தலைப்பிற்கு முன்னும் ஆசிரியர் கொடுத்திருக்கும் மேற்கோள்களின் ஒப்பீடு மிக அருமை..

வால்பாறை மண்ணையும், மக்களையும் அறிமுகப்படுத்திய இந்நூலில் இடம் பெறும் உரையாடல்கள் முழுக்க முழுக்க நம் திருநெல்வேலியின் மண்வாசம் வீசுவது கூடுதல் சிறப்பு..

புத்தக பிரியர்கள் தினமன்று புத்தகப் புழுவாகிய எனது நண்பரின் அன்பளிப்பாக பெற்றேன் இப்புத்தகத்தை பெற்ற நாள் முதற்கொண்டு வாசிக்க வாசிக்க கண்களில் நீர் கோர்க்காத நாளில்லை அப்பேர்ப்பட்ட மன வலிகள் மிகுந்த நவீனம் தான் *எரியும் பனிக்காடு*..

*சமூக அவலங்களை அறிந்ததோடு நில்லாது அதனை அப்புறப்படுத்தும் நோக்கில் எழுத்தாளருடன் இணைவோமா??*

நூலின் விவரங்கள்:

நூல் :எரியும் பனிக்காடு (Eriyum Panikadu)
ஆசிரியர்: பி.எச்.டேனியல் (P.H.Daniel) | தமிழில்: இரா. முருகவேள்
வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம்
விலை: ரூ. 250
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍🏻 சுகிர்தா அ,
நெல்லை.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. தமிழ்வாணன்

    சிறப்பான ஆழமான பார்வை…விழிம்புநிலை மக்களின் வாழ்வியலை திறம்பட எடுத்தாண்ட ஆசிரியரின் பார்வையை அழகாக நேர்த்தியான முறையில் வாழ்வியலை சுட்டிக்காட்டியுள்ளீர் வாழ்த்துக்கள்…

  2. தமிழ்வாணன்

    சிறப்பான பார்வை

  3. ராமச்சந்திர வைத்தியநாத்

    ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் புத்தகக் காட்சியில் இப்புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறேன். தேயிலை காப்பித் தோட்டங்களின் பின்னே அடங்கிய சுரண்டலை சித்தரிக்கக்கூடிய படைப்பு இது.
    மொழிபெயர்ப்பினை படிக்கிறோம் என்ற கருத்தே உருவாகவிதத்தில் கச்சிதமாக முருகவேள் மொழி பெயர்த்திருக்கிறார். படைப்பாளியும் சரி மொழிபெயர்ப்பாளரும் சரி கொண்டாடப்பட வேண்டியவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *