“கடலும் கிழவனும்” – நூல் அறிமுகம்
நான் பணிபுரிந்த நிறுவனத்தில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற எனது இனிய நண்பர் திரு. வெங்கடாசலம் அவர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்தேன். அப்போது, தான் படித்து ரசித்த சில சிறந்த புத்தகங்களை எனக்குப் படிக்கக் கொடுத்தார். அவற்றில் ஒன்றுதான், புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ‘THE OLD MAN AND THE SEA’ என்ற ஆங்கிலப் புதினத்தின் தமிழாக்கமான ‘கடலும் கிழவனும்’.
இப்புத்தகம் பல மில்லியன் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது என்பதையும், உலகெங்கிலும் ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் நான் முன்னரே அறிவேன். தமிழகத்திலேயே பலர் இதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்; பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. 79 பக்கங்களே கொண்ட இப்புத்தகத்தை நான் சில மணிநேரங்களிலேயே படித்து முடித்துவிட்டேன்.
இது கியூபாவைச் சேர்ந்த சாண்டியாகோ என்ற முதிய மீனவர் மற்றும் அவருடன் தனது 5 வயதிலிருந்தே கடலுக்குச் சென்று மீன்பிடிப் பயிற்சி பெறும் சிறுவன் மானோலின் ஆகிய இருவருக்கும் இடையிலான பிணைப்பையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு பின்னப்பட்ட ஒரு குறுநாவல். எர்னெஸ்ட் ஹெமிங்வே இதனை 1950-51 காலகட்டத்தில் எழுதியுள்ளார் என்பது தேடலில் தெரியவந்த செய்தி.
தொடர்ந்து 84 நாட்களாக அன்றாடம் கடலுக்குச் சென்றும் மீன் ஏதும் கிடைக்காமல் வெறுங்கையோடு திரும்புகிறார் அந்த முதியவர். இதனால் அவர் ‘துரதிர்ஷ்டக்காரர்’ எனச் சிலரால் ஏளனம் செய்யப்படுகிறார். சிறுவன் மானோலினின் தந்தையும், “அந்த அதிர்ஷ்டமில்லாத கிழவனோடு செல்ல வேண்டாம்” என்று கூறி சிறுவனை அவரிடமிருந்து பிரிக்கிறார். வேறு வழியின்றி அந்த முதியவர் ஓரிரு தினங்கள் தனியாகவே கடலுக்குச் சென்று வருகிறார். எனினும், அந்தச் சிறுவன் இரவிலும் அதிகாலையிலும் வந்து முதியவரைக் கவனித்துக் கொள்கிறான். பேஸ்பால், ஆப்பிரிக்கா, சிங்கங்கள் என அந்தச் சிறுவனோடு முதியவர் செய்யும் உரையாடல்கள் மிக அழகாக விரிகின்றன. கடலையும், கடல் சார்ந்த மீன்பிடித் தொழிலையும் பற்றி ஏராளமான தகவல்களை இந்நாவல் சொல்கிறது. வீட்டில் உண்ண எதுவுமே இல்லை என்றாலும், முதியவர் தனது பழைய மிடுக்கு குறையாமல் சிறுவனைப் பார்த்து “சோறும் மீனும் சாப்பிடுகிறாயா?” என்று கேட்கிறார். சிறுவனும் மெல்லிய புன்முறுவலோடு, அவருக்கு உணவும் பீரும் கொண்டு வந்து கொடுக்கிறான்.
துணிவு, விடாமுயற்சி, அயராத உழைப்பு ஆகியவற்றை அந்த முதியவரின் வாழ்வியல் நிகழ்வுகளோடு மிகச் சிறப்பாகச் சொல்லிச் செல்கிறது இந்நாவல்.
இவ்வாறு, தனது எண்பத்து ஐந்தாவது நாளில், சாண்டியாகோ வளைகுடா நீரோடையில் (Gulf Stream) அயராத நம்பிக்கையோடு தனியாகச் செல்கிறார். அவரது அந்தப் பயணம் 3 நாட்கள் நீடிக்கிறது. முதல் நாள் நண்பகலில் ஒரு பெரிய மீன் அவரது தூண்டில் இரையைச் சிக்கிக் கொள்கிறது. அது ஒரு ‘மார்லின்’ (Marlin) வகை மீன் என்பது அவருக்கு உறுதியாகத் தெரிந்துவிடுகிறது. அந்த மீன் மிகப்பெரியதாக இருப்பதால் அவரால் அதனை இழுக்க முடியவில்லை; மாறாக, அந்தப் பெரிய மீன் அவரையும் படகையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. ‘சிறுவன் மானோலின் மட்டும் இப்போது உடனிருந்தால் எவ்வளவு உதவியாக இருக்கும்’ என முதியவர் மனம் ஏங்குகிறது. உணவருந்தவும் வழியில்லை; அந்தப் படகிலேயே சிறுசிறு உறக்கம் கொள்கிறார். இப்படித் தொடரும் பயணத்தில் 2 நாட்களின் முடிவில், அந்தப் பெரிய மீன் சோர்வடைந்து நீரின் மேற்பரப்பிற்கு வருகிறது. அதேசமயம், தூண்டில் கயிறு அறுத்து முதியவரின் கைகளில் ரத்தக் காயங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும் தனக்குத்தானே ஊக்கமளித்துக் கொண்டு தொடர்ந்து போராடுகிறார். தன்னிடம் உள்ள குத்தீட்டியால் அந்த மார்லின் மீனை குத்திக் கொன்று போராட்டத்தை முடிவிற்கு கொண்டுவருகிறார்; அதைப் படகின் பக்கவாட்டில் இணைத்துக் கட்டுகிறார்.
மார்லின் மீன் குத்தப்பட்டதால் அதிலிருந்து வெளியேறிய ரத்த வாசனையை மோப்பம் பிடித்து, சுறா மீன்கள் படகைச் சூழ்ந்துகொள்கின்றன. முதியவர் அந்தச் சுறாக்களுடனும் கடுமையாகப் போரிட்டு, மீதமுள்ள பெரிய மீனோடு கரை சேர்கிறார். ‘இந்த மீன் எவ்வளவு பேருக்கு உணவாகப் போகிறதோ’ என்று எண்ணியவாறே தனது குடிசையில் உறங்கச் செல்லும் அவர், கனவில் சிங்கங்களைக் காண்கிறார்.
துரதிர்ஷ்டம் என்று எதுவுமே இல்லை; விடாமுயற்சியும் அயராத உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இக்குறுநாவல். அதேசமயம், இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது பல இடங்களில் சில வருடங்களுக்கு முந்தைய இயந்திர மொழிபெயர்ப்பைப் (Machine Translation) படிப்பது போன்ற வார்த்தை அமைப்புகள் இருந்தன; இது வாசிப்பில் சிறிது அயர்ச்சியைக் கொடுத்தது. பலர் இப்புத்தகத்தை மொழிபெயர்த்திருப்பதால், திருமதி. நாகலட்சுமி சண்முகம் அவர்களின் மொழிபெயர்ப்பைத் தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். அதற்கு முன்பாக, இதன் மூல நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்ததால், The Old Man and the Sea கிண்டில் (Kindle) பதிப்பை வாங்கிவிட்டேன்.
நல்லதொரு புத்தகத்தைப் பரிந்துரை செய்த நண்பருக்கு நன்றிகள்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கடலும் கிழவனும் |
| ஆசிரியர்: | எர்னெஸ்ட் ஹெமிங்வே (தமிழில்: ச.து.சு. யோகியார்) |
| வெளியீடு: | |
| விலை: | ₹.100 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 சம்பத் ஸ்ரீனிவாசன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

