2020ம் ஆண்டு நம் அனைவருக்கும் இணையத்தின் அவசியத்தை, கல்வித் தொழில்நுட்பத்தின் அவசியத்தை, தமிழுக்கான ஒரு தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்த்தும் ஒரு காலக்கட்டமாக அமைந்துவிட்டது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இணைய வகுப்பு என்பது கல்வியின் ஒரு முக்கிய கூறு என்னும் விழிப்புணர்ச்சி நம்மிடையே வந்துள்ளது. கடந்த ஒன்பது மாத காலத்தில் ‘கற்றல்-கற்பித்தல்’ செயல்பாட்டில் ஆசிரியர்கள் பலவாறான சிக்கல்களை எதிர் கொண்டனர் என்றால் மாணவர்கள் வேறு விதமான சிக்கல்களை எதிர் கொண்டனர்.
கடந்த அக்டோபர் மாதம் இணையம் வழியாக நடந்த கல்வியியல் மாநாட்டில் உரையாற்றிய மூன்று பேராசிரியர்கள் நேரம், திறன். பொருளாதாரம் என்று மூன்று விதமாக ஆசிரியர்கள் எதிர்கொண்ட சிக்கல்களை விவரித்தார்கள். உடுமலைப்பேட்டை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் வசுமதி, “இணையவழிக் கற்றலில் காணலாகும் சிக்கல்களில் முக்கியமாகப் பாதிப்புக்குள்ளாவது அடித்தட்டு மக்களே. அவர்கள்தம் நலன் நோக்கில் சமூக உணர்வாளர்களும், அரசும் ஏற்பாடு செய்தால் அவர்களும் இணையவழிக் கற்றல்-கற்பித்தலில் தேர்ச்சி பெறுவர்,” என்று இணைய வழிக் கல்வியின் முதன்மைச் சிக்கலாக பொருளாதாரத்தை அடையாளம் காட்டுகின்றார்.
சிவகாசியின் ஸ்ரீகாளிஸ்வரி கல்லூரி முன்னாள் முதல்வர், தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் ச.கண்மணி கணேசன், “ஒரு பருவத்திற்கு 90 மணி நேரம் வீதம் நான்கு பருவங்களில் நடக்கும் பொதுத் தமிழ் வகுப்புகள் இலக்கியம், இலக்கணம், இலக்கிய வரலாறு ஆகிய பாடங்களை மட்டுமே இன்று வரை கற்றுத் தருகின்றன. இவற்றுடன் வாய் விட்டுத் தமிழை வாசித்தலும் அதை மதிப்பீடு செய்வதும் சேர்த்துக்கொள்ள வேண்டியவை ஆகின்றன,” என்று கூறி அடிப்படைத் தமிழ் கற்றல் கற்பித்தலில் உள்ள நேரப் பற்றாக்குறையை அடையாளம் காட்டுகின்றார்.
அருப்புக்கோட்டை, எஸ்.பி.கே கல்லூரி சுயநிதிப் பிரிவின் தமிழ்த் துறைத் தலைவர் திருமதி பெ.காளியானந்தம், “ஆக்கச் சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும் புத்தாக்கத்தையும் கற்பித்தல் செல்நெறிகளுக்கு உட்படுத்துவது மிகுந்த சவால் நிறைந்ததாய் உள்ளது,” என்று மாணவர்களின் திறன் வளர்ப்பதில் உள்ள சிக்கலை அடையாளம் காட்டுகின்றார்.
மூன்று பேராசிரியர்களின் கருத்துக்களும் இன்றைய ஆசிரியப் பெருமக்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. இந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்த்தோமேயானால், இணைய வகுப்பறையும் நேரடி வகுப்பறையும் எல்லா விதங்களிலும் வேறுபட்டவை என்ற புரிதல் அவசியமாகின்றது. கணினி வழியே ஆசிரியரும் மாணவர்களும் ஒருவரையொருவர் பார்த்து உரையாடுவதால் மட்டுமே அது இணைய வகுப்பறை ஆகிவிட முடியாது.
மாணவர்களின் நேரச் சுதந்திரம், ஈடுபாடு, திறன் மதிப்பீடு ஆகியவை இணைய வகுப்பறையின் முதல் மூன்று முக்கியக் கூறுகளாகும்.
பொதுவாகவே நம் மூளைக்குப் பதினைந்து அல்லது இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை ஓர் சிறிய ஓய்வு தேவைப்படுகின்றது. அத்துடன், நம் கண்களுக்குக் கணினித் திரை வெளிச்சத்திலிருந்தும், அலைபேசித் திரை வெளிச்சத்திலிருந்தும் பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வு தேவைப்படுகின்றது. மூளைக்கும் கண்களுக்கும் ஓய்வு கிடைக்காமல் நடத்தப்படும் பாடங்கள் முதல் பத்துப் பதினைந்து நிமிடங்களூக்கு மேல் மனதில் பதியப் போவதில்லை. இது மாணவர்களின் நேரத்தை விரயமாக்குவதோடு கவனச் சிதறல்களுக்கும் இட்டுச்செல்கின்றது.
ஒரே மாதிரியான வழக்கங்கள் நம் மூளையில் நன்றாகப் பதிவான பிறகு அவை ஒரு தானியக்கமாக மாறிவிடும் சூழ்நிலையில் மூளை தன்னுடைய சக்தியைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஓய்வைத் தேட ஆரம்பிக்கும். இப்படிப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இணைய வகுப்புகள் சலிப்பை ஏற்படுதுமேயானால். இணைய வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் சிறப்பாக அமையாது. நேரடி வகுப்பறையில் கிடைக்கும் கட்டுப்பாடான சூழ்நிலையை இணையத்தில் உருவாக்குவது கடினம். ஏனெனில் மாணவருக்கு ஏற்படும் அதே சலிப்பும் சோர்வும் ஆசிரியருக்கும் ஏற்படும்.
மாணவர்களின் நேரத்தைச் சிறப்பாகக் கையாளும் வகையிலும் அவர்களுடைய ஈடுபாட்டை மேம்படுத்தும் வகையிலும் பாடங்கள் அமைய வேண்டும். வகுப்பில் நடத்துவது போல இணைய வகுப்பறையில் பாடங்களைப் படிக்க வைத்தோ, அல்லது வாசிக்க வைத்தோ, விரிவுரை நடத்தியோ மாணவர்களின் ஈடுபாட்டை கொண்டு வர முடியாது. பொதுவாகவே ஒரு கணினி முன், திறன்பேசி முன் இருப்பவருக்கு ஏற்படும் கவனச்சிதறல்கள் அதிகம். அப்படியிருக்க, அவர்களாகவே படித்துத் தெரிந்துகொள்ளக்கூடிய செய்திகளை பாடமாகவோ விரிவுரையாகவோ கொடுப்பது அனைவரின் நேரத்தையும் வீணாக்குவதாகவே அமையும். அதற்கு பதிலாக, வினா விடைகள், குழு கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள், படைப்புத் திறன் வளர்த்தல் ஆகியவற்றை ஆசிரியரும் மாணவர்களும் இணையத்தில் சந்திக்கும்போது நடத்தலாம். இம்மாதிரியான வகுப்பறைச் செயல்களுக்கு அடிப்படையான விவரங்களைக் காணொளிகளாகவும், ஒலிக்கோப்புக்களாகவும், உரைக்கோப்புக்களாகவும் ஆசிரியர் முதலிலேயே மாணவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். மைக்ரோசாஃப்ட் பவர் பாயிண்ட் (microsoft power point) கொண்டு ஒரே விவரத்தை மூன்று வேறு விதமானக் கோப்புக்களாக வெளியிடலாம். இதனால் ஆசிரியர்களும் தங்கள் பாடத்தை ஒரே ஒரு முறை தயாரிக்க நேரம் எடுத்துக்கொண்டால் போதுமானது. ஆசிரியர்கள் தங்கள் பாடங்களை மிக எளிதாக மின்னூலாக மாற்றியும் கூட மாணவர்களிடையே பகிரலாம்.
மாணவர்கள் அறிய வேண்டிய செய்தியை வகுப்பு தொடங்குவதற்கு முன்பே கொடுக்கும் பட்சத்தில், தனித்தனி மாணவர்களுக்கு ஏற்றபடி பாடத்தையும் வகுப்பையும் அமைக்க முடியும்.
மாணவர்கள் அறிய வேண்டிய விவரங்களை வகுப்பு தொடங்கும் முன் நாம் காணோளியாகவோ, காட்சி வில்லைகளாகவோ மின்னூல்களாகவோ கொடுக்கும்போது, அவர்களின் வினா எழுப்பும் திறன் அதிகரிக்கின்றது. வகுப்பறை போல நேரடியாக விவரங்களைத் தராததால், மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க இணைய வகுப்பு தொடங்கும் வரை காத்திருக்க வேண்டியாதாகிறது. அதனால் பாட விவரங்களுக்கும், பொதுவான கேள்விகள் சந்தேகங்களுக்கும் ஆசிரியர்கள் காணோளிகள், மின்னூல்கள், குறிப்பேடுகள் ஆகியவற்றைத் தயாரித்து அளிப்பதும் இணைய வகுப்பறை சீரிய முறையில் நடைபெற வழி வகுக்கும்.
பாட விரிவுரைகளை முன்னரே கொடுத்து விடுவதால், வகுப்பு தொடங்கியதும், பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள், பாடங்கள் சம்பந்தமான புதிர்களுக்கு விடையளித்தல், விவாதங்கள் நடத்துதல், பாத்திரமேற்று நடித்தல், குறிப்புச் சொற்களைக் கொடுத்து விவரிக்கச் சொல்லுதல் போன்ற சில செயல்களில் ஈடுபடுத்தலாம். நடத்தப்படும் பாடம் தொடர்பாக செய்தித் தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்களிலிருந்து எடுத்துக்கொண்ட அன்றாட நிகழ்வுகளை கலந்துரையாடலின் ஒரு பகுதியாக நடைமுறைப் படுத்த வேண்டும்.
நேரடி வகுப்பு |
|
மாணவர்களைத் தயார் செய்தல் |
10 நிமி |
முந்தைய பாடங்களின் சந்தேகங்களைத் தீர்த்தல் |
15 நினி |
நடத்த வேண்டிய பாடத்தின் விரிவுரை |
15 நிமி |
வகுப்பறை வேலை |
5 நிமி |
இணைய வகுப்பு |
|
மாணவர்களை தயார் செய்தல் |
10 நிமி |
நடத்த வேண்டிய பாடத்தின் கேள்வி பதில் |
10 நிமிடம் |
வகுப்பறை வேலை |
20 நிமி |
மேலே உள்ள அட்டவனை இணைய வகுப்பறையின் கால அளவு எவ்வாறு பிரிக்கப்பட்டால் சிறப்பாக அமையும் என்று காட்டுகின்றது.
வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தங்களுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்ட காணோளிகளிலிருந்தும், மின்னூல்களிலிருந்தும் குறிப்பெடுத்து, தங்களுடைய சொந்தக் கருத்துக்களாக பாடத்தைச் சுருக்கி மின்னஞ்சல் வழி ஒரு குறிப்பிட்ட கால அளவில் தாக்கல் செய்யச் சொல்ல வேண்டும். மாணவர்களும் தங்களுடைய தயாரிப்பை ஒலிப்பதிவாகவோ, காணோளியாகவோ, உரையாகவோ துணுக்குகளாகவோ தாக்கல் செய்யலாம். இத்தகைய வழி முறைகள் மாணவர்களின் சிந்தனைத் திறனையும் படைப்பாற்றல் திறனையும் வளர்க்க வழி வகுக்கும். சிந்தனைத் திறனும் படைப்பாற்றலும் ஒரு புதிய சூழலை உருவாக்கவும், சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தானே மாற்றி அமைத்துக் கொள்ளும் நெகிழ்வுத் திறனைப் பெறவுமான பயிற்சியை மூளைக்குக் கொடுக்கின்றது. மாறுபட்ட சூழலும் வளர்ச்சியைக் கொடுக்கிற நெகிழ்வுத் திறனும் கவனச் சிதறலைக் குறைக்கின்றது. இவ்வாறாக, மாணவர்களுக்குக் கிடைக்கிற நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடச் செய்து, அவர்களது ஈடுபாட்டை அதிகரித்து, அவர்களுடைய திறனை வளர்க்க இணைய வகுப்பு வழி வகுக்கின்றது.
சுகந்தி நாடார் AA, BA, LLB MS
பாடத்திட்ட வடிவமைப்பாளர், இணைய வடிவமைப்பாளர், ஓவியர், வழக்கறிஞர்.
10 Maybelle Court
Mechanicsburg
PA 17050
USA
Ph 717 802 5889
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]
[…] […]