**உழைப்புச் சுரண்டல்**
**************************
அதிகாரக் குஷனில்
அமர்ந்திருப்பவனின்
ஆணவக் குரல்
அடிமை ஏவலை மட்டுமே
அறிந்திருக்கிறது
வறியவனின் குருதி உறிஞ்சி
நிரப்பப்பட்ட அவன்
பேராசை மூட்டைக்குள்
புழு புழுவாய் நெளியக் கிடக்கிறது
அருவறுப்பு
சட்டத்தின் ஓட்டைகளில்
பணக் கோந்தால் அடைத்து
சண்டித்தனங்களை
சர்வ சாதாரணமாக்கி
வீதி நடக்கிறது
கொழுத்த முதலைகள்
தன்னுடமையாக்கலில்
சுரண்ட நீளும் கரங்களுக்கு
கண்ணியத்தைத் கற்றுத் தந்தானில்லை
புண்ணியத்தைக் கூட
குறுக்கு வழி புகுந்து
கும்பிட்டு பெற்றுவிடுகிறான்
அந்தோ!
பரிதாபமென குடிசை வீட்டுக் குழந்தைகளின் நிர்வாணம்…
தங்கத்தில் முகக்கவசமென்பது
முதலாளித்துவ முரட்டு மிரட்டல்
எச்சில் விழுங்கி
கிள்ளும்பசியை அடக்கத் துணிபவன் முன்தான்
குப்பைத் தொட்டி
நிறைந்து வழிகிறது
மீந்த ரொட்டித்துண்டுகளால்
கனகாபாலன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


வறியவனின் குரல் வானுயர கேட்கும் அற்புதமான கவிதை…