உலகளாவிய தீவிர கொரோனா வைரஸ் தொற்று பகுதிகளில் ஒன்றாக இந்தியா உருவாகி வரும் வேளையில், நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பராமரிப்பு முறையானது சரிந்து விழுந்து கொண்டிருக்கையில், பிரதமர் நரேந்திர மோடி தேச அளவிலான பொது முடக்கத்தினை மார்ச் மாதம் அறிவித்த போது, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் இருந்தது என பலர் கருதினார்கள் என்பது நம்பமுடியாததாக இருக்கிறது. அதிகரிக்க ஆரம்பித்த பட்டினிப் பிரச்சினை மற்றும் பொருளாதாரத்தின் மீதான முன்னெப்போதுமில்லாத அளவிலான திடீர் தாக்குதல் காரணமாக இந்திய நாடானது பகுதியளவில் இயங்க ஆரம்பிக்கிற அதே வேளையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.( எந்த திட்டமிடலோ அல்லது புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியாவின் பெருமளவிலான பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு எவ்வித உதவியோ இல்லாமல் இந்த பொதுமுடக்கம் செயல்படுத்தப்பட்டது.). தற்போது 4,40,000 மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களைக் கொண்டு ரஷ்யா, பிரேசில் மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பாதிப்பின் அடிப்படையில் நான்காவது நாடக உள்ளது இந்தியா. இதுவரை கோவிட்-19 வைரஸ் 14,000 மேற்பட்டோரை பலிகொண்டிருக்கிறது. அதில் 50 வயதிற்கு குறைவானவர்கள் பலர்.
சமீப மாதங்களில், இது தொடர்பாக செய்தி சேகரிக்கவும் தேவைப்பட்ட உதவிகளை செய்திடவும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்திருக்கிறேன். ஒரு அனுபவமிக்க செய்தியாளராக, மிகவும் வறிய நிலையிலான குடிமக்களுக்கு உதவுவதற்கான நம்முடைய (முடங்கிப் போய்க் கொண்டிருக்கிற மற்றும் குறைவாகவே நிதியுதவி செய்யப்படுகிற) சுகாதார பராமரிப்பு முறையின் இயலாமை கண்டு அச்சத்திற்குள்ளாக்கப் ப்ட்டிருக்கிறேன்.
தெற்கு மும்பையில் உள்ள கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில், படுக்கைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறையால் அனுமதி மறுக்கப்பட்ட உறவினர்களின் ஆற்றொணா துயரம் கொண்ட குடும்பங்களைச் சந்தித்தேன். பெரும்பாலான மருத்துவமனைகளில் குறை ஆக்சிஜன் அழுத்தம் கொண்ட வெண்டிலேட்டர்களோடு உள்ளூர் நிர்வாக அமைப்பு போராடிக் கொண்டிருக்கிறது. கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தரையில் துலாவிக்கொண்டே “”சிகிச்சைக்கு தேவையான இன்றியமையாத ஒன்று காணாமல் போய்விட்டதாக” கூறினார். ”தீவிர சுவாச நோய்களோடு நோயாளிகள் இருக்கின்றனர், ஆனால் மருத்துவமனையில் உள்ள வார்டுகளில் ஆக்சிஜன் வசதி இல்லை” என அவர் கூறினார். ஒழுங்கு நடவடிக்கைக்கு பயந்து தன்னுடைய பெயரை வெளியிட அவர் விரும்பவில்லை. ”பல சந்தர்ப்பங்களில் ஆக்சிஜன் வழிபட்ட உதவியானது போதுமானதாக இல்லை மேலும் ஆக்சிஜன் அழுத்தம் குறைந்த பின்பு இதர மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நோயாளிகளை நாங்கள் இழந்திருக்கிறோம்” என்றும் கூறினார்.
அடிப்படையான சுகாதார கவனிப்பு மற்றும் சோதனை போன்றவற்றை யார் முதலில் பெறுவது என்பதை வர்க்க மற்றும் சாதிய கோடுகள் தீர்மானிப்பதை இந்த சர்வதேச வைரஸ் நோய் வெளிப்படுத்திக்காட்டியிருக்கிறது. மகாராஷ்டிரா துலே பகுதியில் 37 மைல் காலால் நடந்து வந்து உள்ளூர் மருத்துவமனையில் மருத்துவ கட்டணம் செலுத்தமுடியாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண் ஒருவரைச் சந்தித்தேன். கல்குவாரியில் வேலை பார்க்கிற சுலக்ஷனா என்கிற அந்த பெண் இரண்டு நாட்களில் ஒரு முறை மட்டும்தான் சாப்பிட்டிருக்கிறார். மேலும் தனக்கு கோவிட்-19 நோய் அறிகுறிகளையும் உணர்ந்திருக்கிறார். பல்வேறு அநீதிகளுக்கு இடையே அரசாங்கமானது ஆபத்தான வகையிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு குறைவோடு, செயல்படுகிறது.
மார்ச் மாதத்தில் பிஎம் கேர்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு தேச அளவிலான நிவாரண ஏற்பாட்டினை மோடி தொடங்கிவைத்தார். அரசாங்க முகமைகள் நிகர்படுத்தி பார்த்ததில் பிஎம் கேர்ஸ் தனி நபர்களிடமிருந்து நன்கொடையாக 1.27 பில்லியன் பெற்றுள்ளது. தற்போது அரசாங்கமானது செலவினம் பற்றிய எந்தவொரு விவரத்தினையும் அளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறது மற்றும் அந்த நிதியினை தணிக்கை செய்யவும் மறுக்கிறது.
இது செயலாக்கத்தின் பகுதியாக இருந்து வந்திருக்கிறது. திடீரென மற்றும் மோசமாக திட்டமிடப்பட்ட பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, பட்டினிப் பிரச்சனை காரணமாக கொதிக்கும் வெயிலில் வெற்றுக்கால்களோடு தங்களது இல்லங்களை நோக்கி இந்தியாவில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசைவாசிகள் படையெடுத்த போது, இந்த சர்வதேச நோய்த்தொற்றை நாம் கையாண்டதைக் கொண்டாட பால்கனிகளில் நின்றுகொண்டு குடங்களைத் தட்டியும் மணிகளை ஆட்டியும் ஒலி எழுப்பிட குடிமக்களிடம் மோடி கேட்டுக்கொண்டார். இந்திய நடுத்தர வர்க்கத்தின் கொண்டாட்ட பேரொலிக்கு மத்தியில் எழைகளின் கடுங்கோபத்தினை மட்டுப்படுத்த இயலவில்லை. அந்த ஏழைகள் இந்திய உயர்குடி மக்களின் அலட்சியத்தினை பரிகாசம் செய்தனர்.
மகாராஷ்ட்ரா-குஜராத் எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் பொறியியல் மற்றும் கணிப்பொறி வல்லுனர்களான அஜய் மறும் சமதான் தால்வி ஆகிய இரு சகோதரர்களை சந்தித்தேன். அந்த சகோதரர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். மேலும் பொருளாதாரம் மோசமடையவே இருவரும் உள்ளூரில் ஒரு கட்டுமான தளத்தில் கல்லுடைப்பவர்களாக வேலைபார்க்க வேண்டியிருந்தது. தங்களுடைய குடும்பம் பிச்சை எடுக்க வேண்டியதாகிவிட்டதாக அவர்கள் கூறினர். ”இந்த பொதுமுடக்கம் எங்களது கெளரவம், சுயமரியாதையினை நசுக்கிவிட்டது; பிச்சையெடுக்க நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறேம்” என அஜய் கூறினார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கு 500 ரூபாய்தருவதாக உள்ளூராட்சி அமைப்பு உறுதி கூறியிருந்ததாகவும் அனால் அதுவும் தங்களை வந்து சேரவில்லை என கலேகான் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆதிவாசிப் பெண் கூறினார். அவரை நான் சந்தித்த அந்த நாளில் இரண்டு நாட்களுக்கு முன்னால் தயாரித்த கஞ்சியினையே தனது குடும்பத்திற்கு பரிமாறிக்கொண்டிருந்தார்.
தற்போது, புது டெல்லியில் 62000 க்கு மேலானோர் பாதிக்கப்பட்டு அதிகளவிலான பாதிப்பினை அது பதிவு செய்திருக்கிறது. ஆனால் பெரும்பாலான செய்தி சேனல்களின் புகைப்படக் கருவிகள் நகர்ப்புறத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மீது தங்களது கவனத்தினை குவித்துக்கொண்டிருக்க, இந்த மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளின் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கோவிட்-19 நோய் அறிகுறிகளோடு என்னிடம் வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு சோதனைக் கருவிகள் இல்லாததால் சோதனை செய்யப்படுவதில்லை என கிழக்கு உத்தர பிரதேசத்தின் கிராமம் ஒன்றில் மருத்துவராக பணியாற்றும் ஷகீல் அகமது என்பவர் என்னிடம் கூறினார். ”பல நோயாளிகள் தற்போது சான்றளிக்கப்படாத மருத்துவர்கள் குறிப்புரைத்த காசநோய்க்கான மருந்தினை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் ஒரு டாலருக்கு குறைவாகத்தான் மருத்துவ கட்டணமாக வாங்குகிறார்கள், மேலும் விழிப்புணர்வேதுமின்றி நோயாளிகள் தங்களை தாமே கொன்றுகொண்டிருக்கிறார்கள்” எனவும் அகமது தெரிவித்தார்.
நோயோடு பொருளாதார வலியும் சேர்ந்தே பரவிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது, மேலும் அது பரவலாகவும் உணரப்பட்டும் வருகிறது. கடந்த இரு மாதங்களாக நான் சுற்றிப்பார்த்த பல இடங்களில் உணவு மற்றும் இதர உபகரணங்களை ஏற்றிச்செல்கிற எனது வாகனம் நம்பிக்கை தளர்ந்த மக்களால் பின்தொடரப்படும் காட்சியானது நம்மை அழித்தொழித்துவிடுகிற காட்சியாக இருக்கிறது.
தற்போது நமது அரசாங்கம் உயரமான இமயமலையில் சீனாவுடனான எல்லைக்கருகில் ஏற்பட்ட மோசமான இராணுவ தாக்குதலுக்கு பிறகான பின்விளைவை கையாள முயன்றுகொண்டிருக்கிறது. இது பெரிய சக்தி யார் என்கிற போட்டி நோக்கி மீண்டும் திரும்புதலாகும். மேலும் இந்தியா அதன் அதிகாரத்தினை நிறுவ வேண்டுமெனெ பலர் இந்தியாவை கோருகின்றனர்.
ஆனால், நாம் ஏற்கனவே கோவிட்-19 க்கு எதிரான போரை இழந்துகொண்டிருக்கிறோம் மற்றும் இங்குதான் உலகின் கவனம் குவிக்கப்பட வேண்டும். “அதிகாரத்தில் ஒரு தலைமையுமின்றி, ஏன் அதன் சுவடே அன்றி இந்தியா திக்குதிசையற்ற வெளி நோக்கி சென்றுகொண்டிருக்கிறது ” என இந்திய சமூகவியலாளரும் எழுத்தாளருமான பிரதாப் பானு மேத்தா சமீபத்தில் எழுதினார்.
ட்ரம்ப், பிரேசில் நாட்டைச் சேர்ந்த பொல்சானரோ போன்று மிகவும் ஆபத்து வாய்ந்த ஜனரஞ்சக தரவரிசைப் பட்டியலில் மோடி தற்போது இணைந்துள்ளார். இவர்கள் பொது முடக்கத்தின் போது பரிவுணர்வின்றியும் தங்களது அரசியல் நலன்களை அதிகப்படுத்த விமர்சனக்குரல்களை ஒடுக்குவதுமாக இருந்தார்கள். மோடி 1.3 பில்லியன் மக்கள்தொகையினை நிச்சயமற்ற எதிர்காலம் நோக்கி வழிநடத்திக்கொண்டிருக்கிறார். நம்மீதான கொரோனா வைரஸின் பிடி வலுப்படும் அதே வேளை அது இந்திய ஜனநாயகத்தினை மேலும் இருண்மையுள் தள்ளிவிடும். இது மிகவும் காலதாமதம் என ஆவதற்கு முன்னரே இந்தியாவில் இந்த நெருக்கடியின் ஆழத்தினை உலகம் ஒப்புக்கொள்கிற தேவை உள்ளது.
- சுனந்தா சுரேஷ்