கவிதை: நதியைப் பாடுதல் – ஜே.பிரோஸ்கான்

கவிதை: நதியைப் பாடுதல் – ஜே.பிரோஸ்கான்

நதிகளை கடந்து
மலைகளின் நடுவே குதிக்க
நீண்ட கால பயிற்சி எமக்குத்
தேவையாகவில்லை.
நானும் தோழிகளுமாக
குதித்து விளையாடுவதில்
ஆசை கொண்டிருந்தோம்.
வெகு சீக்கிரமாக நீர்வீழ்ச்சியென
அழைக்கப்பட மலைகளே காரணம்.
எங்களை ரசிக்கவும்
எங்களை ஆராதிக்கவும்
நாங்கள் கட்டுப்பாடு விதித்ததில்லை.
எம்மீது நீந்தி திளைக்கும் சருகுகளை
பரிசளிக்கின்ற மரங்களுடன்
நீண்ட உறவை வைக்கத் தவறவுமில்லை.
மீன்களை அழச் சொல்லிக் கேட்பதும்
பறவைகளைப் பாடச் சொல்லிக் கேட்பதுமே
எமது பௌர்ணமி விழாக்கள்.
நதிகள் நதிகளாக இருக்கும் வரையே
இநத விளையாட்டுக்களென
கடல் எப்போதும் திமிறுவது.
கர்வத்தில் என்று சொல்லிடவும் முடியாது.
சொல்லி விட்டால்
கடல் கோபிப்பதில் நியாயமுமில்லையென
தங்கை தனது கதையை எழுதி
முடித்திருந்தாள்.
..
ஆட்டுயிடையானும் பண்டைய மொழியும்
நீங்கள் அழிந்துபோனதென நினைக்கும்
பண்டைய அரபு மொழி பேசுதலை நான் கேட்கிறேன்.
ஒரு ஆட்டு இடையானின்
வெயிற்காலப் பாடலின் குரலில்.
மென் துயிலை தரும்
ஒரு மர நிழலில்
ஒதுங்கும் அவர்களுக்கு
அந்தப் பண்டைய மொழியின்
உச்சிரிப்பு புதியது.
ஆட்டுயிடையானுடன்
உரையாடத் தொடங்குகிறார்கள்
இவர்களின் மொழியில் எழும்
சப்தத்தை அவனால் ரசிக்க முடியுமென
புரிந்து கொண்டு.
உனது மொழியை எமக்கு
கற்றுத் தா என்கிறார்கள்.
அவனது சிரிப்பில் ஒழுகும்
புரிதல் நியாயமானது
ஆனால் ஒரு போதும்
அவனிடமிருந்து நீங்கள்
பண்டைய மொழியை கற்றுவிட முடியாது.
அவனது மொழியை நேசிப்பதென்றால்
நீங்கள்அவனாக மாற வேண்டும்
அந்த மொழியின் முதல்
ஆதி வார்த்தையை மொழிந்திட வேண்டும்.
நான் நினைக்கிறேன், அவர்கள் வழக்கமாக ஒருசில விஷயங்களை நீக்கிவிடுகிறார்கள்.
அது போன்று பண்டைய அரபு மொழியை
கற்றுக் கொள்வதிலிருந்து விடுபட
விருப்பமில்லாமல்
ஆட்டுயிடையானுடன்
தொடர்கிறார்கள் ஒரு புதிய
பயணத்தையென,
அந்த பண்டைய மொழிக் கதை முடிகிறது.
.
ஒரு றப்பான் இசை
ஓராயிரம் இரவுகளுக்கு முன்
அவர்கள் ரசித்துக் கொண்டிருந்தார்கள்
அந்த றப்பான் இசையொலியை.
ஓராயிரம் இரவுகளுக்கு பின்
நீயும் ரசித்திருந்தாய்.
இன்று ஒரு முன்னிரவில்
நானும் ரசிக்க விரும்பி நின்றேன்
எல்லா காதுகளாலும்
நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
இசை விழுந்து கொண்டிருக்கிறது
பின்னிரவு வரை.
மௌனமாய்..
மிக மௌனமாய்
நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
யாருடைய விரல்கள் அதனை
தீண்டிக் கொண்டிக்கிறது
என்று தெரியாமலே.
இப்போது
இரவை விடியச் செய்கிறோம்.
சுருட்டி வீசப்பட்ட கடுதாசி ஒன்றில்
பரவிக் கிடக்கிறது
ஒரு கவிதையாக
றப்பான்.
.
ஜே.பிரோஸ்கான்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *