கஜகஸ்தானில் இருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற வரலாற்றை உருவாக்கியவர் டன்னா கரகுசோவா (Danna Karagussova) ஆவார். இவர் ஊடகம், நிகழ்வு, மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். இவர் வாழ்நாள் முழுவதும் மலையேற்றத்தில் ஈடுபடக்கூடிய ஒரு வீரர் என அழைக்கப்படுகிறார்.
ஆரம்ப வாழ்க்கை

இவர் கஜகஸ்தானில் அரசியல் மற்றும் வணிக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாயார் முன்னாள் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சராகவும், செனட் உறுப்பினராகவும் இருந்தார். இவரது சகோதரர் ஸ்கை பிரிட்ஜ் கேப்பிட்டலில் சட்ட விவகாரங்களுக்கான நிர்வாக இயக்குனராகவும், வாரியத்தின் துணைத் தலைவராகவும், மத்திய பத்திர வைப்புத் தொகை வாரிய உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். மற்றொரு சகோதரர் கஜகஸ்தானின் JSC அலுமினியத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், பாவ்லோடர் பிராந்திய சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் கஜகஸ்தானில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் மற்றும் புதுமை விரும்பி ஆவார். சந்தைப்படுத்துதல், ஊடகம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் தனது செல்வாக்குக்காக அறியப்படுகிறார். ஒரு பெரிய சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனமான ஃபர்ஸ்ட் மீடியா குழுமத்தை இவர் நிறுவினார். மேலும் கலை மற்றும் அறிவியலை இணைக்கும் டிஜிட்டல் சுய ஒழுங்கு முறை கருவிகளைக் கொண்ட மல்டிமாடல் சுற்றுச்சூழல் அமைப்பான போர்டல்களையும் நிறுவினார்.
மலையேற்றம்
இவர் தொலைநோக்கு பார்வைக் கொண்டவர். இவர் துணிச்சலான கருத்துக்களை யதார்த்தமாக மாற்றுகிறார். தனது தொழில் வாழ்க்கையை தாண்டி, இவர் ஒரு அனுபவம் வாய்ந்த மலையேறுபவர் ஆவார். இவர் கிளிமாஞ்சாரோ மலை மற்றும் எல்ப்ரஸ் மலை ஆகிய இரண்டு மலைச் சிகரங்களிலும் ஏறியவர். இந்த முயற்சிகளை அவர் தனது விடாமுயற்சி மற்றும் லட்சியத்தின் அடையாளமாகக் கருதுகிறார்.
விண்வெளி

அவரது கவனம் விண்வெளி பக்கம் திரும்பியது. ப்ளூ ஆரிஜினின் வணிக விமானத்தில் பறப்பதற்காக டிக்கெட் ஒன்றை விலைக்கு வாங்கினார். விண்வெளிப் பயணம் என்பது பொழுதுபோக்கு அல்ல, மாறாக ஒரு ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். மனித குலத்தின் எதிர்காலம் விண்வெளியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. புதிய எல்லைகளை ஆராய்வதன் மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், நமது சொந்த திறனை விரிவுபடுத்தவும் உதவும் என இன்ஸ்டாகிராமில் எழுதினார்.
விண்வெளிப் பயணம்
இவர் ப்ளூ ஆரிஜின் NS-36 திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 8 அன்று விண்வெளிக்குச் சென்றார். இது ப்ளு ஆரிஜினின் 15 ஆவது மனிதப் பயணமாகும். இதில் 6 பேர் பயணம் செய்தனர். இந்தப் பயணம் 11 நிமிடங்கள் நீடித்தது. விண்வெளியில் பல நிமிடங்கள் எடையின்மை மற்றும் பூமியின் பரந்த காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார். இதன் மூலம் மத்திய ஆசியாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இவரது வருகையை அவரது மகன் ஐதுவார் அலிபெகோவ் சமூக ஊடக தளமான த்ரெட்ஸில் அறிவித்தார். “அவர் திரும்பி வந்துவிட்டார். கஜகஸ்தானின் முதல் விண்வெளிச் சுற்றுலாப் பயணியான உங்களை நேசிக்கிறேன், உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன் அம்மா.” எனத் தெரிவித்தார்.
மனித குலத்தின் அடுத்த பரிணாம எல்லையாக விண்வெளியை டன்னா கரகுசோவா கருதுகிறார். கஜகஸ்தானின் பிற விண்வெளி ஆராய்ச்சி முயற்சிகளை விரிவுபடுத்தும் பணியும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கஜகஸ்தானின் எதிர்கால விண்வெளித் திட்டங்களுக்கான அறிவு தளத்திற்கும் பங்களிக்கிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் தீவிரமாக உள்ளார். அங்கு அவர் தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
எழுதியவர் :

✍️ – ஏற்காடு இளங்கோ
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளதிற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
